Monday, 30 May 2022

வசந்தி தேவி கட்டுரைக்கு எதிர்வினை

#வருந்துகிறோம் 

கல்வியாளரும்  முன்னாள் துணை வேந்தருமான டாக்டர் வசந்திதேவி அவர்கள் எழுதிய கட்டுரை  
தமிழ் இந்து திசை நாளிதழின் நடுப்பக்க கட்டுரையாக இன்று
வெளிவந்துள்ளது.

அந்த கட்டுரையின் அடிப்படை என்னவென்றால்  சமீபத்தில் வெளியான  அரசு பள்ளி மாணவர்களது வீடியோக்களை மையப்படுத்தி எழுதியுள்ளார் அதற்கு முழுவதுமாக ஆசிரியர்களையே  குற்றம்சாட்டியுள்ளார். இது மிகவும் வருந்தத்தக்கதும் கண்டனத்திற்குரியதுமாகும்.

 ஏனென்றால் இவர்களைப் போன்ற மூத்த கல்வியாளர்கள் தமிழகக் கல்வி தளத்தில் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளைப் பார்த்து வருகிறார்கள்.  ஏன் தனியார்மயக் கல்வி தலைவிரித்தாடுவது  கடந்த 20 ஆண்டு காலமாகத் தான் .அவற்றை எல்லாம் வேடிக்கை பார்த்து தானே வந்தீர்கள் ?

 ஆசிரியர்களை உருவாக்க கூடிய கல்வி நிறுவனங்கள் எப்படிப்பட்ட ஆசிரியர்களை உருவாக்கி இருக்கின்றது என்று இவர்கள் அறியவில்லையா ?

கள எதார்த்தம் என்னவென்று தெரிந்துதான் பேசுகிறார்களா ?
கொரோனா  காலகட்டத்தில் ஒரு ஆசிரியரும் மாணவர்களை,
பெற்றோர்களை எப்படி இருக்கிறீர்கள் சாப்பிட்டீர்களா என்று   கேள்வி கேட்கவில்லை என்பதை  முன்னிலைப் படுத்தி உள்ளீர்கள். 

 எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மாணவர்கள் வாழும் பகுதிக்குச் சென்று தொடர்ந்து அவர்களுடன் பொருளாதார உதவியும் மன ரீதியான உளவியல் அணுகுமுறைகளும் செய்திருந்த செய்தனர் என்பது உங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன்.

ஆசிரியர்களுக்கு கல்வித் துறை தரும் பல முனை அழுத்தங்களைக் காணவில்லையா நீங்கள் அல்லது காதால் கூட நீங்கள் கேட்கவில்லையா அம்மா ?

அதிகார மையங்களுடன் கைகோர்த்து நீண்ட காலமாக வாழும் நீங்கள் , 40 ஆண்டு காலமாக நடைமுறையில் இருக்கும் ஓராசிரியர் பள்ளிகளுக்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள் ?

ஆசிரியர்கள் கற்பித்தலைத் தாண்டி கணக்கராக , தூய்மைப் பணிகள் செய்வோராக , மக்களிடம் கையேந்தி காசு பெற்று பள்ளிகளின் கட்டமைப்பு இன்ன பிற  வசதிகள் செய்து வரும் வேலையாட்களாக மாறி வருவது உங்கள் காலத்திலே தானே ....

வகுப்புக்கு ஓர் ஆசிரியர் இல்லாத இடத்தில் தரமான கல்வியை , எப்படி உருவாக்க முடியும் என்ற கேள்விக்கு தங்களிடம் பதில் உள்ளதா ?

ஆசிரியர்களை அல்லவா குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியுள்ளீர்கள் ?

உங்களைப் போல கல்வியாளர் என்ற இடத்தில் நின்று கல்வி சீரழிந்ததை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்து விட்டு பள்ளிக் கல்வி நாசமாகியதை காலத்தால் கண் கொண்டு  பார்த்து , தள்ளாமை வயதில் கள நிலவரமே தெரியாமல் ஆசிரியர்களைச் சுட்டிக் காட்டி ஒட்டு மொத்த கல்விச் சீரழிவிற்கும் அவர்களைக் குற்றம் சொல்வது எந்த விதத்தில் நியாயம் கூறுங்கள் ....

அரசுப் பள்ளிகள் குறித்து  அறிந்து கொள்ள களத்திற்கு சென்று நேராக கவனியுங்கள்  ஆசிரியர்களை மட்டும் குறிவைத்து தாக்க வேண்டாம் அம்மா .... 

வருந்துகிறோம் .

உமா