Sunday, 18 May 2014

கணக்கு வகுப்புகள் - 9

9.கணக்கு  வகுப்புகள் 

                 செட்டிமாங்குறிச்சிப் பள்ளி  மாணவர்கள் ஒருவருடத்திற்குள்ளாகவே  எனது கைக்குள் வந்து விட்டனர் .நானும் அவர்களும் போட்டி போட்டுக் கொண்டு எங்கள் நட்புறவை வளர்த்துக் கொண்டோம் .ஆகவே,கணக்குப் பாடம் அவர்களுக்குக்  கஷ்டமான கோணத்திலிருந்து இஷ்டமானதாக மாற்றம் பெற்றது.
                  யாரும் ஒரே சமயத்தில் 100 க்கு  100 வாங்கி விடவில்லை,  ஆனால் 80 மதிப்பெண்கள்  பெற்று வந்தவர்கள்  100 மதிப்பெண்கள்  பெறத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தினர்.35 மதிப்பெண்கள்தான் அந்த நாட்களின் போராட்டம்.இன்றுபோல் all pass அன்று இல்லை .ஆகவே 35 மதிப்பெண் பெற்றவர்  50 க்கும் , 35 க்குக் குறைவாகப் பெற்றவர் 35-ஐத்  தொடவும்  தொடர்ந்து தங்களைத் தயார் செய்து கொண்டிருந்தினர்.இதுவே ஒரு வெற்றிதானே ............
                மேலும் நான் பள்ளிக்கு வராத நாட்களிலும் ,பள்ளிக்குள்ளேயே பிற பணிகளில் இருந்து ,வகுப்பறையில் இல்லாமல் இருக்கும் நாட்களிலும் கூட அவர்களாகவே,  குழுவாக அமர்ந்து கணக்குகளைப் போடுவதற்குப் பழக்கப்பட்டனர்.அப்போதைய 7ஆம் வகுப்பு மாணவன் செங்கோட்டையன் 
என்பவனும் ஆனந்தஜோதி என்ற மாணவியும் வகுப்பறையை எப்போதும் செயல்படும் களமாக  வைத்திருப்பார்கள் .
                ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு வடிவியல் பகுதிகளைக் கற்பிப்பதில் ஆரம்ப காலங்களில் மிகவும் சிரமமாக இருந்தது.அந்த கிராமத்துக் குழந்தைகள்  கைகளில் வடிவியல் நோட்டுகளை சுத்தமான  வெண்ணிறத் தாள்களோடு  பார்பதற்கே ,இரண்டு மூன்று மாதங்கள் அறிவிப்புகளைத் தொடர்ந்து தர வேண்டும் .அதன் பின்னர் கோட்டுத்துண்டு,கதிர்,கோணங்கள் ...........இப்படி வடிவியல் உருவங்களை வரையச் செய்வது என்பது பெரிய சவாலாகவே இருக்கும்....
              ஆனால் இரண்டாவது வருடத்தில் வடிவியல் பாடப் பகுதியை அறிமுகம் செய்யவோ,தொடர்ந்து நடத்தவோ கடினமாக இல்லை . காரணம்,அளவில் பெரிய வடிவியல் கருவிப் பெட்டி .கரும்பலகையில் நாம் என்னதான் நம்மிடமுள்ள அளவுகோலை வைத்து வரைந்து காட்டினாலும் அவர்களது மனதில் பதிவதில்லை.
             பள்ளியில் இருக்கும் வடிவியல் கருவிப்பெட்டி வகுப்பறைக்கு எடுத்து வரப்பட்டபோது அவர்களது கண்களில் தெரிந்த  பேராவல்,ஆசை ,சந்தோசம் ......அது வேறெப்படியும் விளக்க முடியாது. நேரில் பார்த்தால் மட்டுமே புரியும் .
 ஒவ்வொரு மாணவ,மாணவியும் பிரம்மாண்டத்தை அதில் கண்டனர். அதிலிருந்து  எந்த வகுப்பறைக்கு வடிவியல் பாடம் நடத்தச் சென்றாலும்  , முன்கூட்டியே வகுப்புத் தலைவனிடம் /தலைவியிடம் சொல்லி விடுவேன்.
             நான் வகுப்பறைக்குள் செல்வதற்கு முன்னரே வகுப்பு மேசையின் மீது வடிவியல் கருவிப் பெட்டி சிம்மாசனமிட்டிருக்கும்.காண்பதற்கே அழகாக இருக்கும் .அதுவே பாதிக்குமேல் மாணவர் கவனத்தை ஈர்த்து விடுவதால் எனக்குக் கற்பித்தல் மிக எளிதாகிவிடும்.
             நம்மைப் பொருத்தவரை Geometry Box  என்பது ஒரு பெரிய துணைக் கருவி அல்ல,ஆனால் 6,7,8 வகுப்பு மாணவனுக்கு  அதில் கணக்குகளைப் போட்டுக் காட்டினால், அவர்களுக்கு அது , ரொம்ப ரொம்பப் பெரிய விஷயம்.....புரிதல் மிக மிக எளிது.அதேபோல் 9,10 வகுப்பிலும் நாம் இனம் காணும் மெதுவாகக் கற்போருக்கு இந்த வடிவியல் கருவிப் பெட்டித்  துணைக்கருவி நல்ல மாற்றத்தைக் கொடுக்கும். 
           நமக்குப்  பழசாகத் தெரியும் இது போன்றவை அவர்களுக்குப் புதிது , ஏனெனில் ஒவ்வொரு வருடமும் புதுப்புது மாணவர்கள் நம்மிடம் வருவார்கள் ,ஒவ்வொரு வகுப்பிலும் புதிய கணக்குகளையே அவர்களுக்குக் கற்றுத்தருகிறோம்    ஆகையால் சின்னச்  சின்ன விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க நானும் கற்று,அவர்களுடனும் பகிர்ந்து கொண்டேன்.நீங்களும் பிடித்திருந்தால் எடுத்துக் கொள்ளலாம் .
( மீண்டும் பேசலாம் )










              
              
             


 













Saturday, 10 May 2014

8 .கணக்கு வகுப்புகள்

8.கணக்கு வகுப்புகள்……..(தொடர்ச்சி)
         சென்றபக்கங்களில் கற்பித்தல் முறையை வகுப்பறை சூழலுக்கும் மாணவர் வயதிற்கும்,தகுந்தபடி ஆசிரியரால்தான் வடிவமைக்க முடிகிறது எனப் பகிர்ந்திருந்தேன்…….அது முற்றிலும் உண்மை….அதைப்  பல்வேறு நிலைகளில் உணர்ந்திருக்கிறேன்…. ஒவ்வொரு ஆசிரியரும் இதை உணர்ந்திருப்பர்மேலும் கணக்குப் பாடம் மட்டுமல்ல,எல்லாப் பாடங்களுக்கும் இது பொருந்தியது……
        எங்களது ஒவ்வொரு கணக்கு வகுப்பும் உயிரோட்டமாகத்தான்
இருந்ததுஅதற்கும் காரணம், மாணவர்களது பங்கேற்பே….ஒவ்வொரு வகுப்பிலும் அவர்களை அதிகமாகப் பேசவிட்டேன்,அப்போதுதான் அவர்களுக்கு என்ன புரிந்தது,எதுவரை நான் விளக்க வேண்டும், என்ற தெளிவு எனக்குக் கிடைத்தது.Interactive Class Room always give more channels to develop learning outcomes….as I hope.
        அதுவரை நானே போர்டில் எல்லாக் கணக்குகளையும் போட்டுக் காட்டி,விளக்கம் தந்து கொண்டிருந்தேன்அவர்களைப் பற்றிய தெளிவு கிடைத்ததும், .கா கணக்குகளை மட்டும் நான் போர்டில் போட்டு விளக்கினேன்.
          95% .காட்டுக்கணக்குகள் கண்டிப்பாக வகுப்பறையில் என்னால் போட்டுக்காண்பிக்கப்படும்.ஆனால்,அதில் எந்தஇடத்தில் யாருக்கு சந்தேகம், வந்தாலும் உடனே எழுந்து கேட்கவும்,அது அவர்களில் ஒருவராலேயே விளக்கம் தரவும் ,அப்படி விளக்க இயலாமல் போனால் மட்டுமே நான் விளக்கம் தருவதும் என்று எங்களது வகுப்பறை ஒருகுட்டிக் கருத்தரங்கமாகவே இருக்கும். இன்னும் ஒரு படி மேலே போய் எப்போது வேண்டுமானாலும்,சந்தேகம் கேட்கலாம் அவர்கள் என்றதால்,உணவு இடைவேளையில் கூட கணக்கு நோட்டுகளோடு என்னைத் தேடிவருவார்கள்,அன்றாடம் இது நடக்கும்..பல சமயங்களில் சக ஆசிரியர்களிடமிருந்து வசைகள் கிடைக்கும்,அதற்கெல்லாம் கவலைப்பட்டதுமில்லை.
ஒவ்வொரு கணக்கு போடும் போதும் அவர்களுக்குச் சொல்வது,
1.கணக்கில் என்னென்ன கொடுத்திருக்கிறது?
2.எதைக் கண்டறிய வேண்டும்?
3.அதற்கு என்னசெய்யவேண்டும்?என்னஎன்ன  தேவை......?
   .இவற்றை முதலில் கண்டறிந்து யோசிக்கப் பழக்கப்படுத்தினேன் , அது எவ்வளவு பெரிய கணக்குகளாக இருந்தாலும் அவர்களுக்கு நம்பிக்கையைத் தந்தது..பிறகுதான் கணக்குகளுக்கான தீர்வுகளைப் போடுவார்கள்.

        அவர்கள்  .காட்டுக் கணக்குகளை வைத்து,பயிற்சிக் கணக்குகளை அவர்களாகவே முயற்சி செய்து வீட்டுக் கணக்காகப் போட்டுக் கொண்டு வருவார்கள்.எல்லோரும் போட்டுக் கொண்டு வருவார்கள் எனவும் சொல்லிவிட முடியாது,அப்படி செய்யாதவர் களையும் திரும்பத் திரும்ப, குழுத் தலைவர்களின் உதவியோடு அந்தக் கணக்குகளைப் போட வைப்பதும் இந்த கற்பித்தல்-கற்றல் செயல்பாடுகளில் அடங்கியுள்ளது..
           அவர்களது இந்த உரையாடல்,Responds இவற்றைக் கண்காணிப்பதும் அவர்களது சிக்கல்களை சரி செய்ய முயற்சி செய்வதும் மட்டும் எனது வேலையாகி,இன்னும் அவர்களோடு எனக்கான Rapport அதிகமானது….
            வகுப்பில் எந்தக் காரணம் கொண்டும் உட்கார்ந்து வகுப்பெடுப்பது இருக்காது,அப்படி உட்கார்ந்து விட்டால் தான் நம்மால் "ஒன்னுமே தெரில இந்தப் பையனுக்கு/பொன்னுக்குஎனக் கூறப்படும் மாணவர்களை கவனிக்க முடியாமல் போய் விடுகிறது.அவர்கள்தான் நம் இலக்கே. நன்றாகக்  கணக்குகள் போடும் மாணவர்களை வைத்துதான் பிந்தங்கிய மாணவர்களை முன்னேற்றம் பெற வைக்க முடிந்தது..…
     ஒரு கணக்கு வகுப்பில் மாணவர்களை கவனிக்க வைக்க, ஆர்வத்தைத் தூண்ட,கற்றுக்கொள்ள வைக்க,முதலில் நான் இந்தப் பண்புகளில் பயிற்சி எடுக்க வேண்டுமாய் இருந்தது……..ஒரு ஆசிரியரின் குரல்,Gesture,இவற்றின் மூலம் மாணவர்களது கவனம் ஈர்க்கப்பட்டு இதுவும் அவர்களைப் பாடம் கவனிக்கத் தூண்டுகிறது என்பதையும் அறிந்தேன்.
       அதைவிட முக்கியமானது, அவர்களது பெயர்களைத் தெரிந்து கொண்டு எப்போதும் வகுப்பறையில் அவர்களைப் பெயர் சொல்லி அழைப்பது எனது பழக்கமாக இருந்தது.முதல் மதிப்பெண் பெறும் மாணவர் முதல் மிகவும் பின்தங்கிய மதிப்பெண் வாங்கும் மாணவர் வரை பெயர் சொல்லி அழைத்தால் அவ்வளவு சந்தோஷப்படுவதைக் கண்டேன்அதுவும் எனக்குப் பழக்கமாகி விட்டது.எல்லாவகுப்புகளிலும் இந்தச் சின்னச் சின்ன விஷயங்களே வகுப்புகள் சுவாரஸ்யமாக இருக்க எனக்கு உதவி செய்தன….. (மீண்டும் பேசலாம்)


Monday, 5 May 2014

7 . கணக்கு வகுப்புகள்

7.கணக்கு வகுப்புகள் .......(தொடர்ச்சி )
                    ஆம்.....அவர்களை என்றுமே பாடப்பொருளால் நான் பயமுறுத்தியது இல்லை...கணக்கை  மிக மிக எளிமையாக எப்படி கற்றுக்கொடுப்பது என ஆராய்ச்சி செய்ததில்லை.ஏன் ன்றால் வகுப்பைத்  திட்டமிடுவது வேறு, செயல்பாடு வேறு, அந்தத்  திட்டமிடலை  அப்படியே செயல்பாடாக  வகுப்பறையில் செயல்படுத்துவது 100% சாத்தியமில்லாதது.
           ஒவ்வொரு குழந்தையும் தனிப்பட்டவர்கள் என்றும், ஒவ்வொருவரும் unique என்பதையும் நான் மிகத் தெளிவாக உணர்ந்தேன்.Notes of lesson -ல் நான் எழுதும் பாடப்பொருளை வேண்டுமானால்  அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க முடிந்தது, ஆனால் கற்பித்தல் முறைகளும்,ஆயத்தம் செய்தலும்மதிப்பீடு செய்வதும் , மீள்பார்வையும்வீட்டுக் கணக்குத் தருவதும் நான் திட்டமிட்டு  எழுதுவது போல் அநேக நாட்களில் வகுப்பறையில் செய்யவே முடியாது. அப்படி அதையெல்லாம்  மட்டும் மனதில் கொண்டு வகுப்பு எடுத்தால், மாணவர்களை திருப்தி படுத்த முடியவில்லை.இது ஒரு போராட்டமாகவே இருந்தது.இது ஆசிரியராக கணக்கு வகுப்பில் எனக்கு என்னாலேயே வரும் பிரச்சனை.உண்மையில் இவையெல்லாம்தான் எனக்குப்  பாடமாக இருந்த.
            நான் ஒவ்வொரு chapters க்கும் எடுத்துக்காட்டுகள்         சொல்லுவதும் அவர்களையே வகுப்பில் பேச வைப்பதும் அவர்களுக்குப் பிடித்தது. அப்படி எ.கா சொல்வதும்
அவர்களுடைய வயதிற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றாற்போல் இருந்தால் மட்டுமே அவர்களுக்குப் புரிந்தது.
           உதாரணமாக அவர்களுக்கு பின்னங்களில் புரிதல் கஷ்டமாக இருந்தது………
 கரும்பலகையில் ,
                         6/7,5/8,3/8......இப்படி சிலவற்றை எழுதி,பகுதியை விட தொகுதி சிறியதாக இருந்தால் தகு பின்னம் .
                        7/3,7/5.3/2,......இப்படி சிலவற்றை எழுதி ,பகுதியை விட தொகுதி பெரியதாய் இருந்தால் தகா பின்னம் .இப்படி விளக்கம் கூறினால்,                          
                     
                   "டீச்சர் ,தகு பின்னம் ,தகா பின்னம் தான் கொஞ்சம் குழப்புதுங்  டீச்சர் " , என்றனர்.
                        அப்போதைக்கு என் மனதில் தோன்றியது இதுதான் .........அது  ,
                        "சரிஅதெல்லாம் விடுங்க…………… இப்போ,யானை மேல மனுஷன் உட்கார முடியுமா ?", என்றேன்.
                        அனைவரும் ஒரே குரலில்,…… " ....முடியுமே…..என்றனர் 
                          "மனுஷன் மேல யானை உட்கார முடியுமா?", ……..என்றேன் ..
                        எல்லோரும் சத்தம் போட்டு சிரித்தனர்......
                       "அது எப்பிடிங் டீச்சர்  முடியும்?"என்றனர் ,
  அதுதானே எனக்கும்  வேண்டும்,........................சந்தோசமாக...,
                       "ஆங், இப்போ புரியுதா,யான மேல மனுஷன் உட்கார முடியும் ,மனுஷன் மேல யான உட்கார முடியாது ,பெரிய எண்ணெல்லாம் யான மாதிரி ,சின்ன  எண்ணெல்லாம் மனுஷன் மாதிரி .......இப்போ சொல்லுங்க,
                       தகு பின்னம்னா  ......யார் சொல்றீங்க ?",என்றேன் .
                        நெறைய பேர் கையத் தூக்கினாங்க ...... ஒருத்தரை மட்டும்.. " எழுந்து சொல்",என்றேன் 
                       "டீச்சர் ...அது...... தகு பின்னம்னா ,கீழ பெரிய நம்பர் வரும்,மேல சின்ன நம்பர் வரும் ...."
                        "very good ",என்றேன் ,
                         "அப்போ,தகா பின்னம்?", என்றேன். அதற்கும் எல்லோர் முகத்திலும் பிரகாசம்……ஒருவரை எழுந்து சொல்லச் சொன்னேன்.
                       "தகா பின்னம்னா டீச்சர் ,மேல யான மாதிரி பெரிய நம்பரும்,கீழ மனுஷன் மாதிரி சின்ன நம்பரும் வரும்",என்றான் ஒரு மாணவன்....
                        "very very good ".......அவ்ளோதான் ....... அதோடு மற்றும் சிலரை, வேறுவேறு தகு பின்னங்கள், தகா  பின்னங்கள் board- ல் எண்களைப் போட்டு அவர்களையே board- ல் பிரித்து எழுதச் சொன்னேன் ....
                      அந்த வகுப்பும் முடிந்தது ,பின்னங்களும் அவர்களுக்குப் புரிந்தது .....
                      இங்கே மாணவர்களுக்கு, என்னதான் நான் பகுதி, தொகுதி  என்று சொல்லிக் கொடுத்தாலும், அவர்களுக்குக்  கீழே,மேலே என்று சொல்லும் எளிய வார்த்தைகளே முதலில் மூளையில் சென்று சேர்ந்தது.
                      இதைப் படிக்கும் வாசகர் கணித ஆசிரியர்களாக இருந்தால், கண்டிப்பாக இதை, இப்படிச்  சொல்லிக்கொடுக்கக்  கூடாது எனக் கருத்து சொல்ல வாய்ப்பு இருக்கிறது.ஆனால் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி கற்பித்தல் முறை கைக்  கொடுக்காது.
                      எனது மாணவர்களுக்கு இந்த உதாரணம் புரிந்து ஏற்றுக் கொண்டார்கள், அதோடு மட்டுமல்ல திரும்ப சொல்லி சொல்லி சந்தோசப்பட்டனர் .
                       அந்த நாளோடல்லாமல் அந்த வருடம் முழுதும், அடுத்த வருடமும் நான் சொல்லாமலே பின்னங்களை நினைவு வைத்திருந்தனர்...அது கண்டிப்பாக அவர்களது வாழ்நாளில் மறந்திருக்க வாய்ப்பில்லை ...
                      ஆகையால் ,கற்பித்தல் முறை என்பது மாணவரின் வயது, அவர்களது வகுப்புச் சூழல் இவற்றை மனதில் கொண்டு ஆசிரியரால் வடிவமைக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து……ஒவ்வொரு வீடும் தனித்தனி மனிதர்களையும்,வேறு வேறு பிரச்சனைகளையும் தன்னுள்ளே உள்ளடக்கியது.ஒரே தீர்வு கைகொடுக்காது அல்லவா?அதுபோல்தான் நம்மாணவரும்  அவர்களது புரிதலும்….,ஒரே பள்ளியில் கூட வேறு வேறு ஆசிரியர்கள் மாறுபட்ட Application-stratergy-ல் தனது மாணவரை அணுகுதல் தேவையாக இருக்கும்…..(மீண்டும் பேசலாம்…)