Tuesday, 23 September 2014

1.பெருந்துறை ஆண்கள் பள்ளி....


1.   பெருந்துறை ஆண்கள் பள்ளி 
               கற்பித்தல்-கற்றல் அனுபவங்கள் 
                                          என்னை ஆசிரியராக உருவாக்கிய செட்டிமாங்குறிச்சி  மாணவர்களின் நினைவுகளோடு 2005 ஜனவரி மாத இறுதியில்  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாறுதல் பெற்று வந்தேன் . அங்கு  மாணவர்கள் மட்டும்தான்.ஆகவே வகுப்பறைகள் எங்களுக்குப்  பள்ளியைத் தாண்டி விரிந்திருந்தது. கற்பித்தல் அணுகுமுறைகள் ஓரளவிற்கு ஏற்கனவே  பரிச்சயமானதால் வேறு எந்த வழிகளில் அவர்களை அழைத்துச் செல்லலாம் என  யோசித்தபோது , அவர்களின் தேவை புரிய ஆரம்பித்தது .அது...............................
                                         அவர்களுக்குத் தேவை ,வகுப்பறை    
           மட்டுமல்ல ,அங்கே  அவர்கள்   களைத்துப்
      போகிறார்கள் ; அவர்களின் வயதின் துள்ளலுக்கும் ,    
           அறிவின்   பலத்திற்கும்  இன்னும் வேறு  வேறு 
     அணுகுமுறைகள் தேவைப்பட்டன .
                       எங்கள் பெருந்துறை   அரசு ஆண்கள்     
     பள்ளியானது  நகரின் மையம் , பயிலும்  மாணவர்களோ          சுற்றிலும் உள்ள சிறு சிறு கிராமத்துப் பையன்கள் .  
     அவர்களது கனவுகள் , ஏக்கங்கள்  எண்ணிலடங்காது . 
          ஆகவே அந்தத்  தேடலே எனக்கு,    பலமாகவும்
          பாலமாகவும் இருந்தது

                                        அவர்களை வழிகாட்டி நெறிப்படுத்துவதும்          ஒரு சவாலாகவே இருந்தது,ஏனெனில் கிராமச் சூழலில்
     இருந்து முற்றிலும் மாறுபட்ட நகரத்திற்கு வரும்,   
     பொழுது  விடலைப் பருவத்தில் (6-8 வகுப்புகள்) நிறைய
     மாணவர்களுக்கு ஒன்றும்  புரிவதில்லை.ஆகவே,அந்த
     இயல்புகளை மாற்றி அவர்களை ஒருநிலைப்படுத்த
     ஒவ்வொரு வருடமும் ஜூன்,ஜூலை மாதங்கள்
     ஓடிப்போகும்…
                   அதுவே பழக்கமாகிப் போய்,நிறைய
     மாணவர்கள் என்னிடம் சீக்கிரம் ஒட்டிக்கொள்வார்கள். 
     6-8  வகுப்புகள்  என்பதால் தேர்ச்சிக்காக இன்றுபோல்
     உருவடிக்கும் வழக்கம் எங்கள் வகுப்புகளில் எப்போதும்
     இல்லை.ஆகவே எனக்கும் மாணவருக்குமான
     உறவும், சிந்தித்தலும் சற்று கூடுதலாகவே இருக்கும்.
                    வகுப்பறையைத் தாண்டி இருவரும்
     யோசிக்க ஆரம்பித்தோம்….விளைவு…பள்ளியில் எந்த
     போட்டிகள் அறிவிக்கப்பட்டாலும் ஒரு கூட்டம்
     என்னோடு வந்துவிடும்….அதிகமாக அப்போதெல்லாம்
     வருவது மாவட்ட அளவிலான அறிவியல்
     கண்காட்சிதான்.
                   மேல்நிலைப் பள்ளியானதால் அங்கு
    அறிவியல் பட்டதாரி இளநிலை,முதுகலைஆசிரியர்கள்
    இருந்தாலும் அவர்கள் அதில் ஆர்வம் காட்டுவதை விட  
    10,12 ஆம்  வகுப்பு தேர்ச்சி விழுக்காட்டில் முனைப்பாக
    இருப்பார்கள்,ஆகவே அது எனக்கு நல்ல சந்தர்ப்பமாக
    இருக்கும்…..
                             மேல்நிலை வகுப்பு மாணவர்களும் ஆர்வமாக
    என்னிடம் வந்து வழிகாட்டக் கூறுவார்கள்…நான் எதுவும்   
    செய்ய மாட்டேன்,அவர்களை ஊக்குவித்தால் போதும்,    
    போட்டி  போட்டுக் கொண்டு அறிவியல்  மாதிரிகள்   
    வந்துவிடும்….
               இப்படி ஒவ்வொரு வருடமும், எனது பள்ளி  
    மாணவர்கள் ஈரோடு மாவட்ட அளவில் முதல், இரண் 
    டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்து வெற்றி பெறுவர்…..
               மாணவர்களிடம் ஆற்றல் பொதிந்து,புதைந்து  
   உள்ளதை நாம் கண்டுபிடிக்க  அவர்களுக்கு உதவினாலே  
   போதும்….எப்போதும் நம்மைச் சுற்றிச் சுற்றியே   
   வருவார்கள்….(மீண்டும் பேசலாம்)


Saturday, 16 August 2014

11.செட்டிமாங்குறிச்சி மாணவர்கள்....


செட்டிமாங்குறிச்சி  மாணவர்கள்……….

                    கடந்த  பதிவுகளில் , எனது  முதல்  பள்ளியின்  மாணவர்கள், எவ்வெவ்வழிகளில் என்னை  ஆசிரியராக  வடிவமைத்துக்கொள்ள  உதவினார்கள் என , கணக்கு  வகுப்புகள்  என்ற  தலைப்பில்  உங்களொடு  பேசினேன் .  அவர்களுக்கு  கணக்கு  வகுப்புகள் மட்டுமல்ல…..தமிழ்,ஆங்கிலம்,அறிவியல் மற்றும் சமூக  அறிவியல் வகுப்புகளும்  கற்பித்து வந்தேன்.      மூன்றரை வருடங்கள்  நான்  அவர்களுக்கு பாடம் சொல்லித் தந்ததைவிட, எனக்கு  அவர்கள்  கற்றுக் கொடுத்தவை  ஏராளம்…. அவர்களின்  ஒத்துழைப்பிற்கு மகுடம்  வைத்ததுபோல  ஒரு  நிகழ்வு  2004 ஆம் ஆண்டு அக்டோபர்  மாதம் 26ஆம் தேதி நடந்தது…
                    அது………………. “இன்று  எனது  பள்ளி  விழாக்கோலம்  பூண்டிருந்தது. ஆம்…..ஒவ்வொரு  பள்ளியும்  தன்  இயல்பிலிருந்து சற்றே  வித்தியாசமாய் , பயத்தோடு…..…. தன்னை  அலங்கரித்துக் கொண்டு, வருபவர்களை திருப்திப்படுத்தும் மணப்பெண்ணைப் போல் , கல்வி  அலுவலர்களை  திருப்திப்படுத்த தயாராகிக் கொண்டிருக்கும்  நாள்தான்.
                    எனது செட்டிமாங்குறிச்சி அரசு மேநிலைப் பள்ளிக்கு அன்று  தணிக்கைநாள் (Inspection Day) அன்று . அப்போதைய  சேலம்  மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு.கார்மேகம் அவர்களும், சங்க்கிரி மாவட்டக் கல்வி அலுவலர்  செல்வி கி.வசந்தா அவர்களும் எனது  ”7-ஆ பிரிவு” மாணவர்களது 1 முழுப்  பிரிவேளையையும்  கவனித்தார்கள். எனக்கு அது  முதன்முறை  அனுபவம் ,பயமாகத்தான்  இருந்தது. ஆனால்  பயம்  மறந்து போனது வகுப்பு  ஆரம்பமானவுடன்…
                    அன்றைய  நாளின்  ஒட்டு மொத்த  மதிப்பீடும்  மாலை  6.30 மணி முதல் 8.45 வரை இருந்தது. பள்ளி  ஆசிரியர்கள்  26  பேர்,தலைமையாசிரியர் என ஒரு  வகுப்பறையில  ஆரம்பமானது. ஒவ்வொரு  ஆசிரியரின்  வகுப்பு பற்றிய  மதிப்பீடும் விளக்கப்பட்டது. 
எனது பெயர்  வாசிக்கப்பட்டதும்  எழுந்து நின்றேன் .கொஞ்சம் பயம் , அதைவிடக் கொஞ்சம்  தைரியம்…….உயரதிகாரிகள்   என்னைத்  திட்டவில்லை , அதேசமயம்  எனது  மாணவர்களைப்  புகழ்ந்தனர் . “என்ன  அழகா ஆங்கிலப்  பாடம் நடந்தது இந்த டீச்சரின் வகுப்பில் தெரியுமா?!!! ஸ்டூடண்ஸே(Students)  டீச்(Teach) பண்ணிட்டாங்க”, என்று  எனக்கு , அப்லாஸ் வாங்கி கொடுத்தனர் , எனது  மாணவர்கள் .
                      ஆம், நானும் எனது குழந்தைகளும் பயன்படுத்திய கற்பித்தல்-கற்றல் உபகரணங்களை மட்டுமே  அன்றைய  வகுப்பறையில்  பயன்படுத்தினோம் .
                      7th  English "B" class - If Clause நடத்தப்பட்டது , எங்கள்  வகுப்பறையில் . வழிகாட்டல்  மட்டுமே  நான்  செய்தேன் . அதற்கு  முன் ஒரு  MOTIVATION  பாடல் பாடல்  தந்தேன் . வகுப்பறை உயிரோட்டமாக  மாற  எனது  குழந்தைகள் உதவினர் .  
                       ஏற்கனவே நடத்தாத, புதிய  பாடம் அது. If Clause - அது பற்றி  ஆரம்பித்து , நான் விளக்கிக் கூறியவுடன் ஒரு மாணவன் தெளிவாக , நூல் பிடித்ததுபோல் திரும்பக்  கூறினான் . ஒரு மாணவன்,  If Clause  பற்றி விளக்கம்  எழுதி  வைக்கப்பட்ட நிலை அட்டையைப்        ( Standing Chart pasted on Wall ) பயன்படுத்தினான் . ஆனந்தஜோதி தானாகவே முன்வந்து, “If you work hard/you will pass” இதுபோல 5 விதமான வாக்கிய அட்டைகளை (Sentence stirips) எடுத்து வகுப்பறையில்  பரவலாகக் கொடுக்கிறாள். அவளுக்கு  மாரியப்பன் என்ற மாணவன்  உதவுகிறான் .இந்த அட்டைகளும் வகுப்பறையில் அவர்களே  தயாரித்ததுதான். அட்டைகளின் கீழ் சிறியதாய் தயாரித்தவர் பெயரை எழுதச் சொல்லியிருந்தேன் . அவர்களுக்கு  பயங்கர  குஷி , அதை அவர்கள்  மிகப்  பெரிய  அங்கீகாரமாக நினைத்தனர் .
                     செங்கோட்டையன்  என்ற  மாணவன் கரும்பலகையில்  எழுதுகிறான் .மதிப்பீடு  செய்யப்  பொருத்து அட்டையைப் (Matching cards & Charts) பயன்படுத்துகின்றனர் .சுறுசுறுப்பாக , சந்தோஷமாக இயங்குகின்றனர் . சரியாகப்  பொருத்திய  மாணவர்களை  ஆனந்தஜோதி பாராட்டுகிறாள்….வகுப்பு  நிறைவடைந்தது . மேலும் வகுப்பறைக்கு வெளியே  வாசலில் நித்தியக் கல்யாணி செடிகள் மிக அடர்த்தியும் அழகுமாய்  அசைந்தாட , அது பற்றி அலுவலரிடம் பகிர்ந்து கொள்கின்றனர் .அது புற்று  நோய்க்கு  மருந்து என்று,என்றோ ஒரு நாள் நான்  அவர்களிடம் பகிர்ந்து கொண்டதை, அலுவலர்  கேட்காமலேயே தைரியமாகப் பதிவு  செய்து பாராட்டும் பெற்றனர் .
                                இப்படி 45 நிமிடங்களில்  30 நிமிடங்களை   மாணவர்களே  எடுத்துக்   கொண்டனர் என,  அந்த  மாலை  மங்கிய வெளிச்சத்தில்,கல்வி அலுவலர்கள்  சொன்னபோது  தான்  எனக்கேத் தெரிந்தது, எனது  மாணவர்கள் எவ்வளவு  பக்கபலமாக எனக்கு  உதவி ,என்னை  செழுமையாக்கி உள்ளனர் என்ற உண்மை.
                                 அடிப்படையில்  ஆங்கிலம் பற்றி பயமுடைய கிராமத்து  மாணவி  நான் . அதே பயத்தோடு  வளர்ந்து கொண்டிருந்த  ஆசிரியரும்கூட . ஆனால்  எனது  ஆங்கில  வகுப்பிற்கு  கல்வி  அலுவலர்கள் மிகச்  சிறந்த  அங்கீகாரம் தந்ததற்கு என்னைத்  தகுதியுள்ளவளாக ஆக்கியவர்கள் எனது  அந்த  குக்கிராமத்து குழந்தைச் செல்வங்களே!!! நானும்  அவர்களும் கைகளைக்  கோர்த்து  நடந்ததால்தான்  கற்பித்தல்  பயணம்  சுவைத்தது..***************மீண்டும் பேசலாம் 


Monday, 9 June 2014

10. கணக்கு வகுப்புகள்

10.கணக்கு வகுப்புகள் .......

                        வடிவியல் உருவங்களுக்கு Geometry Box பயன்படுத்துவது போல,
  வரைபடங்களுக்கு   (Graph ) பள்ளிகளில் வாங்கி வைத்திருக்கும் கருப்பு நிற தொங்கு அட்டைகளை (Hanging  Graph Charts )கண்டிப்பாகப் பயன்படுத்தினால்,
6,7 வகுப்பு மாணவர்களுக்கு வரைபடங்கள் பாடப் பகுதி மிகத் தெளிவாகப் புரியும். ..இவற்றை எனது மாணவர்களின்  கற்றலில் இருந்து அறிந்தேன் ...
                         அப்படியும் கடினமாகத் தெரிந்ததால் ,அவர்களை வகுப்பறையின் உள்ளேயே சுற்றிலும் அமரவைத்து நடுவில் X  மற்றும் Y அச்சுகளாக சில மாணவர்களை நிற்க வைத்து 4 கால் பகுதிகளையும் புரிய வைத்தோம்.இங்கும் மாணவர்களே கற்பிப்பாளர்கள் ....ஆசிரியரான எனது வேலை வெறும் மேற்பார்வை மற்றும் சந்தேகம் தீர்த்தலே..........அந்த அனுபவங்கள் மிக நன்றாக இருந்தது  எனக்கும் எனது மாணவர்களுக்கும்...அடுத்தடுத்து அந்த விளக்கங்கள் பள்ளியின் விளையாட்டு மைதானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது..... அது பள்ளியின் எல்லா மாணவர்களுக்கும் பரவியது.......
                         அது 7 ஆம் வகுப்பு X ,Y  அச்சு ,முதல் கால் பகுதி, இரண்டாம் கால்  பகுதி, மூன்றாம் கால் பகுதி,நான்காம் கால் பகுதி எண்களைக் குறித்தல் இவைதான் அன்றைய வரைபடப் பகுதியின் முதல் பாடம்...இதுபோல் வகுப்பறை செயல்பாடுகள்  அமைந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது .......மேலும் நமது மாணவர்களுக்கு எந்தப் பாடமும் ஆரம்பத்தில் புரிவதில் தான் கடினமாக இருக்கும்.அது கணக்குப் பாடத்திற்கும் பொருந்தும் .ஆகவே அந்தக் கடினத்தை எளிமையாக்குவதற்கு   தான் நாம் பயன்படுத்தும் கற்பித்தல் முறைகளும், கற்பித்தல் துணைக்கருவிகளும்  பயன்படும்.
                           அந்தப் பாடப் பகுதியை கற்பித்த பிறகு தொடர் நடவடிக்கையாக, அவர்களுக்கு திரும்பத் திரும்ப நினைவு படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.ஒரு Chapter முடித்துவிட்டோம் என்றெண்ணி அடுத்தடுத்து வேகமாகப்  பாடங்களைக்  கற்பித்தால், மாணவர்களுக்கு சிக்கல் ஏற்படுவதை நான் நன்றாக அறிந்தேன்.அதைத் தவிர்க்கும் பொருட்டு எவ்வளவு பணிச்சுமையாக இருந்தாலும் ,முதல் நாளின் பாடப் பகுதியை நினைவு படுத்தும் சில வினாக்களையாவது அவர்களிடம் கேட்கும் முறைகளைப் பின்பற்றினேன்.ஒரு நாளின் பாடப் பகுதி, சில நாட்களில் ஒரு வாரத்தின் பாடப்பகுதியாகவும் திரும்ப நினைவு கூறப்படும் .அந்த நாளின் கணக்கு வகுப்பில் புதிய பாடம் கற்பிக்கப்படாமலும் போகலாம்.
                          இங்கே நான் சொல்ல நினைப்பது என்னவென்றால் ,கணக்குப் பாடத்தைப் பொருத்தவரை, புதிய  புதிய கணக்குகளில் அறிமுகம் அடிக்கடித் தேவையில்லை.பதிலாக கற்பித்த பகுதிகளில் அதிகப் பயிற்சிகள் தந்தால் மாணவருக்கு நல்ல நினைவாற்றல் வரும்,அவர்களிடம் தன்னம்பிக்கை வலுப்படும் ,அவர்களே தங்கள் கணக்குத்  திறனையும் அளவிட்டு ஒரு படி மேம்படுவர்.அப்போது புதிய பாடம் அறிமுகம் செய்வதில் நமக்கு கடினம் இருக்காது.இதற்கெல்லாம் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படும்.ஒரு நாளிலோ அல்லது ஒரு வாரத்திலோ நடந்து விடாது,குறைந்தது 3 முழு மாதங்கள் தேவைப்படும்.
                      பிறகு நீங்கள் வேண்டாம் எனச்சொன்னாலும் கேட்காமல் கணக்கு கணக்கு என உங்களைச் சுற்றி சுற்றி வருவார்கள்.மற்றுமொரு மிக மிக அவசியமான ஒன்று ,REMEDIAL TEACHING இது அடிக்கடித்  தேவை .ஒவ்வொரு மாணவருக்கும்,ஒவ்வொரு பாடப் பகுதிக்கும் தேவையாக இருந்தது.....
                       இவற்றைத் தாண்டி மாணவரிடம் FEED back ஒவ்வொரு 3 மாத இடைவெளிகளில் வாங்கினேன்.முதலில் தயங்கினவர்கள் ,பிறகு தொடர்ந்து தர ஆரம்பித்தனர்.என்னிடம் நிறைய கோபம் இருந்தது,பல நேரங்களில் அடித்து விடுவேன்.....இதையெல்லாம் அவர்களே குறிப்பிட்டு மாற்றிகொள்ளுங்கள் TEACHER ,நல்லாப் புரியுது ஆனா,நீங்க கோபப்படுவது பயமாஇருக்குங்க Teacher என எழுதினார்கள்.........................இப்படி நமது கற்றலை செழுமைப் படுத்துவதோடு ,நமது  மனிதத்தையும் செழுமை படுத்தும் வழிகாட்டிகளாகத்தான் நமது  மாணவர்கள் நம்மோடு கைகோர்க்கின்றனர் ......

                                                                                                         (மீண்டும் பேசலாம்)

Sunday, 18 May 2014

கணக்கு வகுப்புகள் - 9

9.கணக்கு  வகுப்புகள் 

                 செட்டிமாங்குறிச்சிப் பள்ளி  மாணவர்கள் ஒருவருடத்திற்குள்ளாகவே  எனது கைக்குள் வந்து விட்டனர் .நானும் அவர்களும் போட்டி போட்டுக் கொண்டு எங்கள் நட்புறவை வளர்த்துக் கொண்டோம் .ஆகவே,கணக்குப் பாடம் அவர்களுக்குக்  கஷ்டமான கோணத்திலிருந்து இஷ்டமானதாக மாற்றம் பெற்றது.
                  யாரும் ஒரே சமயத்தில் 100 க்கு  100 வாங்கி விடவில்லை,  ஆனால் 80 மதிப்பெண்கள்  பெற்று வந்தவர்கள்  100 மதிப்பெண்கள்  பெறத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தினர்.35 மதிப்பெண்கள்தான் அந்த நாட்களின் போராட்டம்.இன்றுபோல் all pass அன்று இல்லை .ஆகவே 35 மதிப்பெண் பெற்றவர்  50 க்கும் , 35 க்குக் குறைவாகப் பெற்றவர் 35-ஐத்  தொடவும்  தொடர்ந்து தங்களைத் தயார் செய்து கொண்டிருந்தினர்.இதுவே ஒரு வெற்றிதானே ............
                மேலும் நான் பள்ளிக்கு வராத நாட்களிலும் ,பள்ளிக்குள்ளேயே பிற பணிகளில் இருந்து ,வகுப்பறையில் இல்லாமல் இருக்கும் நாட்களிலும் கூட அவர்களாகவே,  குழுவாக அமர்ந்து கணக்குகளைப் போடுவதற்குப் பழக்கப்பட்டனர்.அப்போதைய 7ஆம் வகுப்பு மாணவன் செங்கோட்டையன் 
என்பவனும் ஆனந்தஜோதி என்ற மாணவியும் வகுப்பறையை எப்போதும் செயல்படும் களமாக  வைத்திருப்பார்கள் .
                ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு வடிவியல் பகுதிகளைக் கற்பிப்பதில் ஆரம்ப காலங்களில் மிகவும் சிரமமாக இருந்தது.அந்த கிராமத்துக் குழந்தைகள்  கைகளில் வடிவியல் நோட்டுகளை சுத்தமான  வெண்ணிறத் தாள்களோடு  பார்பதற்கே ,இரண்டு மூன்று மாதங்கள் அறிவிப்புகளைத் தொடர்ந்து தர வேண்டும் .அதன் பின்னர் கோட்டுத்துண்டு,கதிர்,கோணங்கள் ...........இப்படி வடிவியல் உருவங்களை வரையச் செய்வது என்பது பெரிய சவாலாகவே இருக்கும்....
              ஆனால் இரண்டாவது வருடத்தில் வடிவியல் பாடப் பகுதியை அறிமுகம் செய்யவோ,தொடர்ந்து நடத்தவோ கடினமாக இல்லை . காரணம்,அளவில் பெரிய வடிவியல் கருவிப் பெட்டி .கரும்பலகையில் நாம் என்னதான் நம்மிடமுள்ள அளவுகோலை வைத்து வரைந்து காட்டினாலும் அவர்களது மனதில் பதிவதில்லை.
             பள்ளியில் இருக்கும் வடிவியல் கருவிப்பெட்டி வகுப்பறைக்கு எடுத்து வரப்பட்டபோது அவர்களது கண்களில் தெரிந்த  பேராவல்,ஆசை ,சந்தோசம் ......அது வேறெப்படியும் விளக்க முடியாது. நேரில் பார்த்தால் மட்டுமே புரியும் .
 ஒவ்வொரு மாணவ,மாணவியும் பிரம்மாண்டத்தை அதில் கண்டனர். அதிலிருந்து  எந்த வகுப்பறைக்கு வடிவியல் பாடம் நடத்தச் சென்றாலும்  , முன்கூட்டியே வகுப்புத் தலைவனிடம் /தலைவியிடம் சொல்லி விடுவேன்.
             நான் வகுப்பறைக்குள் செல்வதற்கு முன்னரே வகுப்பு மேசையின் மீது வடிவியல் கருவிப் பெட்டி சிம்மாசனமிட்டிருக்கும்.காண்பதற்கே அழகாக இருக்கும் .அதுவே பாதிக்குமேல் மாணவர் கவனத்தை ஈர்த்து விடுவதால் எனக்குக் கற்பித்தல் மிக எளிதாகிவிடும்.
             நம்மைப் பொருத்தவரை Geometry Box  என்பது ஒரு பெரிய துணைக் கருவி அல்ல,ஆனால் 6,7,8 வகுப்பு மாணவனுக்கு  அதில் கணக்குகளைப் போட்டுக் காட்டினால், அவர்களுக்கு அது , ரொம்ப ரொம்பப் பெரிய விஷயம்.....புரிதல் மிக மிக எளிது.அதேபோல் 9,10 வகுப்பிலும் நாம் இனம் காணும் மெதுவாகக் கற்போருக்கு இந்த வடிவியல் கருவிப் பெட்டித்  துணைக்கருவி நல்ல மாற்றத்தைக் கொடுக்கும். 
           நமக்குப்  பழசாகத் தெரியும் இது போன்றவை அவர்களுக்குப் புதிது , ஏனெனில் ஒவ்வொரு வருடமும் புதுப்புது மாணவர்கள் நம்மிடம் வருவார்கள் ,ஒவ்வொரு வகுப்பிலும் புதிய கணக்குகளையே அவர்களுக்குக் கற்றுத்தருகிறோம்    ஆகையால் சின்னச்  சின்ன விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க நானும் கற்று,அவர்களுடனும் பகிர்ந்து கொண்டேன்.நீங்களும் பிடித்திருந்தால் எடுத்துக் கொள்ளலாம் .
( மீண்டும் பேசலாம் )










              
              
             


 













Saturday, 10 May 2014

8 .கணக்கு வகுப்புகள்

8.கணக்கு வகுப்புகள்……..(தொடர்ச்சி)
         சென்றபக்கங்களில் கற்பித்தல் முறையை வகுப்பறை சூழலுக்கும் மாணவர் வயதிற்கும்,தகுந்தபடி ஆசிரியரால்தான் வடிவமைக்க முடிகிறது எனப் பகிர்ந்திருந்தேன்…….அது முற்றிலும் உண்மை….அதைப்  பல்வேறு நிலைகளில் உணர்ந்திருக்கிறேன்…. ஒவ்வொரு ஆசிரியரும் இதை உணர்ந்திருப்பர்மேலும் கணக்குப் பாடம் மட்டுமல்ல,எல்லாப் பாடங்களுக்கும் இது பொருந்தியது……
        எங்களது ஒவ்வொரு கணக்கு வகுப்பும் உயிரோட்டமாகத்தான்
இருந்ததுஅதற்கும் காரணம், மாணவர்களது பங்கேற்பே….ஒவ்வொரு வகுப்பிலும் அவர்களை அதிகமாகப் பேசவிட்டேன்,அப்போதுதான் அவர்களுக்கு என்ன புரிந்தது,எதுவரை நான் விளக்க வேண்டும், என்ற தெளிவு எனக்குக் கிடைத்தது.Interactive Class Room always give more channels to develop learning outcomes….as I hope.
        அதுவரை நானே போர்டில் எல்லாக் கணக்குகளையும் போட்டுக் காட்டி,விளக்கம் தந்து கொண்டிருந்தேன்அவர்களைப் பற்றிய தெளிவு கிடைத்ததும், .கா கணக்குகளை மட்டும் நான் போர்டில் போட்டு விளக்கினேன்.
          95% .காட்டுக்கணக்குகள் கண்டிப்பாக வகுப்பறையில் என்னால் போட்டுக்காண்பிக்கப்படும்.ஆனால்,அதில் எந்தஇடத்தில் யாருக்கு சந்தேகம், வந்தாலும் உடனே எழுந்து கேட்கவும்,அது அவர்களில் ஒருவராலேயே விளக்கம் தரவும் ,அப்படி விளக்க இயலாமல் போனால் மட்டுமே நான் விளக்கம் தருவதும் என்று எங்களது வகுப்பறை ஒருகுட்டிக் கருத்தரங்கமாகவே இருக்கும். இன்னும் ஒரு படி மேலே போய் எப்போது வேண்டுமானாலும்,சந்தேகம் கேட்கலாம் அவர்கள் என்றதால்,உணவு இடைவேளையில் கூட கணக்கு நோட்டுகளோடு என்னைத் தேடிவருவார்கள்,அன்றாடம் இது நடக்கும்..பல சமயங்களில் சக ஆசிரியர்களிடமிருந்து வசைகள் கிடைக்கும்,அதற்கெல்லாம் கவலைப்பட்டதுமில்லை.
ஒவ்வொரு கணக்கு போடும் போதும் அவர்களுக்குச் சொல்வது,
1.கணக்கில் என்னென்ன கொடுத்திருக்கிறது?
2.எதைக் கண்டறிய வேண்டும்?
3.அதற்கு என்னசெய்யவேண்டும்?என்னஎன்ன  தேவை......?
   .இவற்றை முதலில் கண்டறிந்து யோசிக்கப் பழக்கப்படுத்தினேன் , அது எவ்வளவு பெரிய கணக்குகளாக இருந்தாலும் அவர்களுக்கு நம்பிக்கையைத் தந்தது..பிறகுதான் கணக்குகளுக்கான தீர்வுகளைப் போடுவார்கள்.

        அவர்கள்  .காட்டுக் கணக்குகளை வைத்து,பயிற்சிக் கணக்குகளை அவர்களாகவே முயற்சி செய்து வீட்டுக் கணக்காகப் போட்டுக் கொண்டு வருவார்கள்.எல்லோரும் போட்டுக் கொண்டு வருவார்கள் எனவும் சொல்லிவிட முடியாது,அப்படி செய்யாதவர் களையும் திரும்பத் திரும்ப, குழுத் தலைவர்களின் உதவியோடு அந்தக் கணக்குகளைப் போட வைப்பதும் இந்த கற்பித்தல்-கற்றல் செயல்பாடுகளில் அடங்கியுள்ளது..
           அவர்களது இந்த உரையாடல்,Responds இவற்றைக் கண்காணிப்பதும் அவர்களது சிக்கல்களை சரி செய்ய முயற்சி செய்வதும் மட்டும் எனது வேலையாகி,இன்னும் அவர்களோடு எனக்கான Rapport அதிகமானது….
            வகுப்பில் எந்தக் காரணம் கொண்டும் உட்கார்ந்து வகுப்பெடுப்பது இருக்காது,அப்படி உட்கார்ந்து விட்டால் தான் நம்மால் "ஒன்னுமே தெரில இந்தப் பையனுக்கு/பொன்னுக்குஎனக் கூறப்படும் மாணவர்களை கவனிக்க முடியாமல் போய் விடுகிறது.அவர்கள்தான் நம் இலக்கே. நன்றாகக்  கணக்குகள் போடும் மாணவர்களை வைத்துதான் பிந்தங்கிய மாணவர்களை முன்னேற்றம் பெற வைக்க முடிந்தது..…
     ஒரு கணக்கு வகுப்பில் மாணவர்களை கவனிக்க வைக்க, ஆர்வத்தைத் தூண்ட,கற்றுக்கொள்ள வைக்க,முதலில் நான் இந்தப் பண்புகளில் பயிற்சி எடுக்க வேண்டுமாய் இருந்தது……..ஒரு ஆசிரியரின் குரல்,Gesture,இவற்றின் மூலம் மாணவர்களது கவனம் ஈர்க்கப்பட்டு இதுவும் அவர்களைப் பாடம் கவனிக்கத் தூண்டுகிறது என்பதையும் அறிந்தேன்.
       அதைவிட முக்கியமானது, அவர்களது பெயர்களைத் தெரிந்து கொண்டு எப்போதும் வகுப்பறையில் அவர்களைப் பெயர் சொல்லி அழைப்பது எனது பழக்கமாக இருந்தது.முதல் மதிப்பெண் பெறும் மாணவர் முதல் மிகவும் பின்தங்கிய மதிப்பெண் வாங்கும் மாணவர் வரை பெயர் சொல்லி அழைத்தால் அவ்வளவு சந்தோஷப்படுவதைக் கண்டேன்அதுவும் எனக்குப் பழக்கமாகி விட்டது.எல்லாவகுப்புகளிலும் இந்தச் சின்னச் சின்ன விஷயங்களே வகுப்புகள் சுவாரஸ்யமாக இருக்க எனக்கு உதவி செய்தன….. (மீண்டும் பேசலாம்)


Monday, 5 May 2014

7 . கணக்கு வகுப்புகள்

7.கணக்கு வகுப்புகள் .......(தொடர்ச்சி )
                    ஆம்.....அவர்களை என்றுமே பாடப்பொருளால் நான் பயமுறுத்தியது இல்லை...கணக்கை  மிக மிக எளிமையாக எப்படி கற்றுக்கொடுப்பது என ஆராய்ச்சி செய்ததில்லை.ஏன் ன்றால் வகுப்பைத்  திட்டமிடுவது வேறு, செயல்பாடு வேறு, அந்தத்  திட்டமிடலை  அப்படியே செயல்பாடாக  வகுப்பறையில் செயல்படுத்துவது 100% சாத்தியமில்லாதது.
           ஒவ்வொரு குழந்தையும் தனிப்பட்டவர்கள் என்றும், ஒவ்வொருவரும் unique என்பதையும் நான் மிகத் தெளிவாக உணர்ந்தேன்.Notes of lesson -ல் நான் எழுதும் பாடப்பொருளை வேண்டுமானால்  அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க முடிந்தது, ஆனால் கற்பித்தல் முறைகளும்,ஆயத்தம் செய்தலும்மதிப்பீடு செய்வதும் , மீள்பார்வையும்வீட்டுக் கணக்குத் தருவதும் நான் திட்டமிட்டு  எழுதுவது போல் அநேக நாட்களில் வகுப்பறையில் செய்யவே முடியாது. அப்படி அதையெல்லாம்  மட்டும் மனதில் கொண்டு வகுப்பு எடுத்தால், மாணவர்களை திருப்தி படுத்த முடியவில்லை.இது ஒரு போராட்டமாகவே இருந்தது.இது ஆசிரியராக கணக்கு வகுப்பில் எனக்கு என்னாலேயே வரும் பிரச்சனை.உண்மையில் இவையெல்லாம்தான் எனக்குப்  பாடமாக இருந்த.
            நான் ஒவ்வொரு chapters க்கும் எடுத்துக்காட்டுகள்         சொல்லுவதும் அவர்களையே வகுப்பில் பேச வைப்பதும் அவர்களுக்குப் பிடித்தது. அப்படி எ.கா சொல்வதும்
அவர்களுடைய வயதிற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றாற்போல் இருந்தால் மட்டுமே அவர்களுக்குப் புரிந்தது.
           உதாரணமாக அவர்களுக்கு பின்னங்களில் புரிதல் கஷ்டமாக இருந்தது………
 கரும்பலகையில் ,
                         6/7,5/8,3/8......இப்படி சிலவற்றை எழுதி,பகுதியை விட தொகுதி சிறியதாக இருந்தால் தகு பின்னம் .
                        7/3,7/5.3/2,......இப்படி சிலவற்றை எழுதி ,பகுதியை விட தொகுதி பெரியதாய் இருந்தால் தகா பின்னம் .இப்படி விளக்கம் கூறினால்,                          
                     
                   "டீச்சர் ,தகு பின்னம் ,தகா பின்னம் தான் கொஞ்சம் குழப்புதுங்  டீச்சர் " , என்றனர்.
                        அப்போதைக்கு என் மனதில் தோன்றியது இதுதான் .........அது  ,
                        "சரிஅதெல்லாம் விடுங்க…………… இப்போ,யானை மேல மனுஷன் உட்கார முடியுமா ?", என்றேன்.
                        அனைவரும் ஒரே குரலில்,…… " ....முடியுமே…..என்றனர் 
                          "மனுஷன் மேல யானை உட்கார முடியுமா?", ……..என்றேன் ..
                        எல்லோரும் சத்தம் போட்டு சிரித்தனர்......
                       "அது எப்பிடிங் டீச்சர்  முடியும்?"என்றனர் ,
  அதுதானே எனக்கும்  வேண்டும்,........................சந்தோசமாக...,
                       "ஆங், இப்போ புரியுதா,யான மேல மனுஷன் உட்கார முடியும் ,மனுஷன் மேல யான உட்கார முடியாது ,பெரிய எண்ணெல்லாம் யான மாதிரி ,சின்ன  எண்ணெல்லாம் மனுஷன் மாதிரி .......இப்போ சொல்லுங்க,
                       தகு பின்னம்னா  ......யார் சொல்றீங்க ?",என்றேன் .
                        நெறைய பேர் கையத் தூக்கினாங்க ...... ஒருத்தரை மட்டும்.. " எழுந்து சொல்",என்றேன் 
                       "டீச்சர் ...அது...... தகு பின்னம்னா ,கீழ பெரிய நம்பர் வரும்,மேல சின்ன நம்பர் வரும் ...."
                        "very good ",என்றேன் ,
                         "அப்போ,தகா பின்னம்?", என்றேன். அதற்கும் எல்லோர் முகத்திலும் பிரகாசம்……ஒருவரை எழுந்து சொல்லச் சொன்னேன்.
                       "தகா பின்னம்னா டீச்சர் ,மேல யான மாதிரி பெரிய நம்பரும்,கீழ மனுஷன் மாதிரி சின்ன நம்பரும் வரும்",என்றான் ஒரு மாணவன்....
                        "very very good ".......அவ்ளோதான் ....... அதோடு மற்றும் சிலரை, வேறுவேறு தகு பின்னங்கள், தகா  பின்னங்கள் board- ல் எண்களைப் போட்டு அவர்களையே board- ல் பிரித்து எழுதச் சொன்னேன் ....
                      அந்த வகுப்பும் முடிந்தது ,பின்னங்களும் அவர்களுக்குப் புரிந்தது .....
                      இங்கே மாணவர்களுக்கு, என்னதான் நான் பகுதி, தொகுதி  என்று சொல்லிக் கொடுத்தாலும், அவர்களுக்குக்  கீழே,மேலே என்று சொல்லும் எளிய வார்த்தைகளே முதலில் மூளையில் சென்று சேர்ந்தது.
                      இதைப் படிக்கும் வாசகர் கணித ஆசிரியர்களாக இருந்தால், கண்டிப்பாக இதை, இப்படிச்  சொல்லிக்கொடுக்கக்  கூடாது எனக் கருத்து சொல்ல வாய்ப்பு இருக்கிறது.ஆனால் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி கற்பித்தல் முறை கைக்  கொடுக்காது.
                      எனது மாணவர்களுக்கு இந்த உதாரணம் புரிந்து ஏற்றுக் கொண்டார்கள், அதோடு மட்டுமல்ல திரும்ப சொல்லி சொல்லி சந்தோசப்பட்டனர் .
                       அந்த நாளோடல்லாமல் அந்த வருடம் முழுதும், அடுத்த வருடமும் நான் சொல்லாமலே பின்னங்களை நினைவு வைத்திருந்தனர்...அது கண்டிப்பாக அவர்களது வாழ்நாளில் மறந்திருக்க வாய்ப்பில்லை ...
                      ஆகையால் ,கற்பித்தல் முறை என்பது மாணவரின் வயது, அவர்களது வகுப்புச் சூழல் இவற்றை மனதில் கொண்டு ஆசிரியரால் வடிவமைக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து……ஒவ்வொரு வீடும் தனித்தனி மனிதர்களையும்,வேறு வேறு பிரச்சனைகளையும் தன்னுள்ளே உள்ளடக்கியது.ஒரே தீர்வு கைகொடுக்காது அல்லவா?அதுபோல்தான் நம்மாணவரும்  அவர்களது புரிதலும்….,ஒரே பள்ளியில் கூட வேறு வேறு ஆசிரியர்கள் மாறுபட்ட Application-stratergy-ல் தனது மாணவரை அணுகுதல் தேவையாக இருக்கும்…..(மீண்டும் பேசலாம்…)



    


Wednesday, 30 April 2014

2 . செட்டிமாங்குறிச்சி மாணவர்கள்

2.செட்டிமாங்குறிச்சி மாணவர்கள் ....( தொடர்ச்சி)


                                                     அவர்கள் செய்யும் செயலால் ,தரும் ஒத்துழைப்பால்    அவர்களைப் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். அவர்களோடு தினமும் பேச ,நேரம் ஒதுக்கினேன்.வகுப்பறையில் பாடங்களை விட ,அவர்களது அன்றாடப் பிரச்சனைகள் பற்றி பேசினோம் .அவர்களது கருத்துக்களுக்கு காது கொடுக்க ஆரம்பித்தேன்.அவை பாடம் சார்ந்தவையாகவோ  அல்லது அவர்கள் யோசித்தவையாகவோ  அமைந்தது. அவர்களது கருத்துக்களைப்  பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தவுடன் அவர்களிடம் எனக்கான நெருக்கம் கிடைத்தது.அவற்றின் விளைவு ........

                                                     அந்த ஊரில் விளையும் பயிர்களைப் பற்றியும் ,அவை விளையும் பருவம் பற்றியும் எனக்கு விளக்கினார்கள் தெளிவாக.
அந்த ஊரில் கிடைக்கும் காய்,கனிகள் ,செடிகள் ,தினசரி வாழ்வில் அவை பயன்தரும் விதங்கள் என எதார்த்தமாகக் கூறுவார்கள்.ஆனால் அவற்றை மூலிகை என நாம் கூறி ,கொஞ்சம் புதிய உலகத்திற்கு அவர்களை அழைத்துச் சென்று பயமுறுத்தி இருக்கிறோம் .
                                                       அந்தக் கல்வியாண்டில் ஆம் வகுப்பு தமிழ்ப்  பாடம் -மூலிகை மருத்துவம் .இதற்குத்  தேவையானவை முழுக்க முழுக்க மாணவர்களின் சேகரிப்பும்,விளக்கங்களும் தான் .மிளகு,திப்பிலி ,துளசியில் ஆரம்பித்து ,மருதாணி,கருந்துளசி,மணித்தக்காளி,கீரை வகைகள் ,புண் போக்கும் பூண்டுச் செடிகள்,கற்றாழை,பெரண்டை,கற்பூரவல்லி ,செம்பருத்தி ,குப்பைமேனி ....இப்படி என்னென்ன அவரது  வாழிடங்களில்,வழித்தடங்களில் உண்டோ அத்தனையையும் தேடி , சேகரித்து வந்து அடுக்கடுக்கான விளக்கங்கள் வேறு தந்தார்கள்.யாரோ ஒருவர்,இருவர் அல்ல,வகுப்பு முழுமையும் இந்த சேகரிப்பில் ஆர்வமாக ஈடுபட்டது.இப்படித்தான் அவர்கள் இயல்பு எனக்குப் புரிய ஆரம்பித்தது.
                                                     இந்தப்  பள்ளிக்குழந்தைகள் மட்டுமல்ல;உலகில் தோன்றும் எல்லாக் குழந்தைகளுக்கும் இந்தத் தேடல் இருக்கும்.ஏனெனில் 
கற்றல் மனிதனின் அடிப்படை பிறப்பியல்பு ;இதே போன்று எல்லாப் பாடங்களுக்கும்  கற்பித்தல் பொருட்களாய் மாற்றம் பெற்றனர்.இவற்றின் வழிதான் அவர்களைப் பற்றி சிந்திக்க வைத்தனர் என்னை.....
( பகிர்வுகள் மீண்டும் தொடரும் )


Sunday, 27 April 2014

6.கணக்கு வகுப்புகள் .....(தொடர்ச்சி )


                    ஆம் ,அந்தக் குழந்தைகளின்  கண்களில் பிரகாசத்தைப் பார்த்ததும் எனக்கும் சந்தோஷம்.
                    "அப்டியா?,அப்போ சரி ,இனிமேல் கணக்குப் பாடத்தைப் பத்தி கவலைப் படாதீர்கள் ",என்றேன்.
                     "சரிங் டீச்சர் ",கோரஸ் குரலில்.
                   என்னைப் பொருத்தவரை இந்தப் பள்ளியில் 6,7,8 வகுப்பு மாணவர்கள்தான் என் களம் , ஆகவே அவர்களுக்குத் தேவை அடிப்படைக் கணக்குகள்  மட்டுமே. இதோடு,  கொஞ்சம் அனுசரணை,கொஞ்சம் அக்கறை, கொஞ்சம் கண்டிப்பு,கொஞ்சம் ஆர்வம் ,கொஞ்சம் அவர்களைப் புரிதல் இவ்வளவு தான். சரியான விகிதத்தில் இவற்றைக் கலந்து, கற்பித்தல் என்ற உணவைக் கொடுத்தால், கற்றல் என்ற வளர்ச்சி ஊட்டமாகவே கிடைக்கும் என உணர்ந்தேன் .
                   "(வகுப்பின்)பின்னாடி இருப்பவர்கள்  பேனா,ஸ்கேல் , பென்சில்,கணக்கு நோட்டு  மட்டும் எடுத்துக் கொண்டு என் பக்கத்துல வந்து உட்காருங்க",என்றேன்.
                       "பைங் டீச்சர்?",
                       "அதெல்லாம் வேண்டாம்" ,என்றேன்.
                         "புத்தகங் டீச்சர் ",
                         " அதும் வேண்டாம் "
  அவர்களுக்குள்ளேயே மாறி மாறி பார்த்துக்கொண்டனர். 
                         "சரி,மொதல்ல  இருந்து ஆரம்பிக்கலாமா ?",என்றேன்.
                      சந்தோசமாக தலை ஆட்டினர்.அவர்களைப் பொருத்தவரை அந்தப் புத்தகங்களைப் புரட்டி கணக்குகளைப் போடச் சொல்வது பிடிக்காது.
அதிலும்  மிகச் சில மீத்திறன் மாணவர்களோ, டீச்சர் ஏன் புத்தகம் வேண்டாம் என்கிறார் ,என யோசித்துக்கொண்டு என்னைப் பார்ப்பதும் எனக்குப் புரிந்தது.
                        "நமக்கு முதலில் வருவது என்ன? ",
                         "எண்ணியல்ங் டீச்சர் ",
                           "சரி, எண்ணியல்னா 0,1,2,3,4,5,6,7,8,9 இந்த பத்து எண்களைப் பயன்படுத்தி கூட்டல்,கழித்தல்,பெருக்கல்,வகுத்தல் இந்த 4 அடிப்படை செயல்களையும் ,தொடர்புடைய கணக்குகளையும் போடுவது தான்" , என்றேன்.
                         அவர்களுக்குத் தேவையான விஷயங்களை கரும்பலகையில் எழுதி விளக்கினேன் .அவை....
                          இயல் எண்கள்(N ),
                          முழு எண்கள்(W),
                           முழுக்கள் (Z ),
                         விகிதமுறு எண்கள் (Q ).....
                         இவை அனைத்திற்கும்  எடுத்துக்காட்டுகளுடன் விளக்கங்கள் ,     அவர்களது கணக்கு நோட்டின் ஆரம்பமாக இருந்தது.................
                         அன்று மட்டுமல்ல தொடர்ந்து 13 வருடங்களாக 6-10 எந்த வகுப்பிற்குச் சென்றாலும் முதல் கணித வகுப்பில் இந்த உரையாடல்களும் விளக்கங்களும் எனது வகுப்பறையில் இடம் பெற்றிருக்கும்,.........இவை எனது மாணவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்ட முதல் பாடம் என்பேன்  .
                         ஏனெனில் கணக்கின் மிக மிக அடிப்படையான இவை தெரியாததால் மட்டுமே மாணவர்கள் அடுத்தடுத்து வரும் கணக்குப் பகுதிகள் புரியாமல் நிலை தடுமாறி ஒரு கட்டத்தில் கணக்கை வெறுக்கின்றனர்.
                        நீங்கள் நினைக்கலாம் ,இதென்ன கஷ்டமா என்று?நமக்குக்  கஷ்டம் இல்லை,கல்வி அறிவு இல்லாத பெற்றோரிடமிருந்தும்,கணக்கு என்றாலே தெரியாத சூழலில் இருந்து வரும் நமது  பள்ளிக் குழந்தைகளுக்கு 
இதுவும் சொல்லிக் கொடுக்காதவரை கஷ்டம் தான்.
                       10-ஆம் வகுப்பில் சூத்திரங்களைக் கட கடவென apply செய்து நிமிடத்தில் கணக்குப்  போடும் திறன் கொண்ட ஒரு மாணவனோ/மாணவியோ ,எளிமை என நாம் சொல்லும் முழுக்களின்    கூட்டல், கழித்தல்,பெருக்கல்,வகுத்தல் செயல்களில்( + / --) குறிகளை சரியாகப் போடத் தெரியாமல் விழிப்பர் .ஏனென்றால் அடிப்படைக் கணக்குகளில் பயிற்சி இல்லாமை ..ஆம் ,இதைத்தான் எனது மாணவருடன் நான் பகிர்ந்து கொண்டேன்.
                       நான் நினைப்பவற்றை தினமும் எனது மாணவரிடம் பகிர்ந்து கொண்டேன்.அவர்கள் மாற வேண்டும் ,புரிந்து கொள்ள வேண்டும், நன்றாகப் படிக்க வேண்டும்.....இது போன்ற வேண்டும்,வேண்டும் என்ற  வேண்டிய விஷயங்களை அவர்களோடு பகிர்ந்து கொண்டதன் விளைவு ,எங்களுக்குள் நல்ல புரிதல்  ஏற்பட்டது.
                      ஒவ்வொரு வகுப்பிலும் முதல் நாளின் பாடத்தை கண்டிப்பாக கேட்பேன் அல்லது அவர்களே சொல்வார்கள்,அந்த சுதந்திரத்தை அவர்கள் பயன்படுத்தினார்கள்.அதைத் தான் நாம் previous  knowledge என்று teaching practice பொழுது lesson plan பக்கங்களிலும் , notes of lesson ஏட்டில் motivation என்றும் எழுதுகிறோம்..ஆனால் அவை ஏட்டோடு நின்று விடுகிறது.
                        அல்லது syllabus முடிக்க முடியாது என்று கூறி பயிற்சிக் கணக்குகளுக்கு   ஓடுகிறோம் .யாருக்காகப்  பாடம் நடத்துகிறோமோ அவர்களுக்குப் புரிய வைப்பதற்கு நாம் தயாராக இல்லை,அதுதான் நம் பிரச்சனை.
                     ஆகையால் அதில் நான் தெளிவாக இருந்தேன்.தேர்விற்காக மட்டும் என்றுமே  பாடங்களை நடத்துவது என் அதிகாரத்தில் கிடையாது ,
எண்ணியலுக்கு நான் முதலில் கூறிய அடிப்படையைப் போலவே ஒவ்வொரு பிரிவுகளுக்கும் (CHAPTERS )அதனதன் அடிப்படை, விளக்கங்கள், எடுத்துக்காட்டுகள்.....இவையனைத்தும் கண்டிப்பாக இருக்கும்.
                      நானும் முதல் நாளிலேயே இவையனைத்தும் செய்து முடித்து விடவில்லை ,எனக்கும் பயிற்சி தேவைப்பட்டது.கொஞ்சம் கொஞ்சமாகத்தான் implement செய்தேன்.கணக்கு நோட்டில் என்று அவர்கள் கணக்கு போட்டாலும் தேதி இருக்கவேண்டும்.மிக மிக மிக முக்கியம் உண்மையான தேதி போடுவது.இது அவர்களுக்குப் பிடித்திருந்தது.
                     நம் அனைவருக்கும் தெரிந்ததுதான் என்றாலும் சொல்கிறேன், மாணவர்களைக் குழுவாகப் பிரித்தல்-தலைமை,உபதலைமை தெரிவு  செய்து 90,95 என்ற கூட்டத்தை 5,7 என சிறு குழுக்களாகப் பிரித்தல் எனது முக்கியப் பணி ,ஏன் என்றால் நம்மால் எல்லோரையும் நாள் முழுவதும்  கவனிக்க முடியாது ,மேலும் peer study என்ற கான்செப்ட் ,நன்றாக வேலை செய்தது.                                   பெரிய வகுப்புக் குழந்தைகள் என்றால்தான் மற்றவரைப் பற்றி ஆசிரியரிடம் சொல்லமாட்டார்கள்,சிறு வகுப்புகளில் நமக்கு வேண்டிய அனைத்தும் அந்த group leaders எனப்படுபவர்கள் சொல்லி விடுவார்கள் , ஒவ்வொருவரின் கற்றல் வேகத்தையும்.  ஆகையால் என்  பணி மிக எளிது, அந்த மாணவர்களின் கற்றல் நிலை என்ன,எங்கு அவன் தடுமாறுகிறான், எப்படிச்   சொன்னால் புரியும், என்ன செய்யலாம் இவற்றைத் திட்டமிடுதல் மட்டும்  கவனத்தில் வைத்து  அவர்களை follow up செய்தல் தேவையாக இருந்தது எனக்கு.
                       இது கணக்கு வகுப்புகளுக்கு மட்டுமல்ல,எல்லாப் பாடங்களுக்கும் (subjects )பொருந்தியது.because I 'm not a  BT Teacher ,எல்லாப் பாடங்களையும் கற்பிக்கும் Secondary Grade Teacher .
                        எனது கருத்து- ஒருவர் ஆசிரியராக இருக்க, தகுதித் தேர்வை விட குழந்தைகளை அணுகும் தகுதிகளை வளர்த்துக் கொள்ளுதல் அவசியமாகிறது......
                      ஆம்,எந்தக் குழந்தையும் முனைவர் பட்டங்களுக்காக  நம்மிடம் வருவதில்லை,அது அவர்கள் பெரியவராக வளர்ந்த பிறகு அவர்களே பார்த்துக்கொள்ளும் வழிகள்.
                     மாறாக, கற்றுக்கொள்ளும் ஆர்வத்தையும்,தன்னம்பிக்கையும்,நல்ல எண்ணங்களை சிந்திக்கவும்,அனுபவங்களை வாழ்க்கைக்குப் பயன்படுத்தும் வழிகளையும் ,பிறருக்கு நல்லன செய்யும் சுயநலமில்லாப்  பண்புகளையும்   சொல்லித்தரவே, நாம் இருக்கிறோம் என்று கற்றுக்கொள்ளவே  நம்மிடம் வருகின்றனர்.
                    எழுத்துக்களையும் ,எண்களையும் கற்றுக்கொடுத்து விட்டால் புத்தகங்களை அவர்களே வாசித்துக் கொள்வார்கள, நாம் வழிகாட்டிகளே. எதை எப்போது  வாசிக்க வேண்டும் என்று கூறி வழிகாட்டி உடன் இருத்தலே நம் பணி...
                    நமது subject depth எல்லாம் அவர்களிடம் காட்ட அவசியம் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது,சாதாரண பால பாடம் அவனது பசி ,அதை விட்டு விட்டு  நாம் கணக்கில் புலியாக இல்லை  என அவனை சலித்துக்கொள்வதும்,அவனுக்குப் புரியவில்லை எனத் திட்டுவதும்,வீட்டுக் கணக்குகளை போடமாட்டேன் என்கிறார்கள் எனப் புலம்புவதும்,முன் வகுப்புகளின் கற்பித்தலை குறை கூறுவதுமாக நம்மோடு அவனது நிகழ் காலத்தையும் வீணாக்கி வருகிறோம்....(மீண்டும் பேசலாம்)