Wednesday, 30 April 2014

2 . செட்டிமாங்குறிச்சி மாணவர்கள்

2.செட்டிமாங்குறிச்சி மாணவர்கள் ....( தொடர்ச்சி)


                                                     அவர்கள் செய்யும் செயலால் ,தரும் ஒத்துழைப்பால்    அவர்களைப் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். அவர்களோடு தினமும் பேச ,நேரம் ஒதுக்கினேன்.வகுப்பறையில் பாடங்களை விட ,அவர்களது அன்றாடப் பிரச்சனைகள் பற்றி பேசினோம் .அவர்களது கருத்துக்களுக்கு காது கொடுக்க ஆரம்பித்தேன்.அவை பாடம் சார்ந்தவையாகவோ  அல்லது அவர்கள் யோசித்தவையாகவோ  அமைந்தது. அவர்களது கருத்துக்களைப்  பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தவுடன் அவர்களிடம் எனக்கான நெருக்கம் கிடைத்தது.அவற்றின் விளைவு ........

                                                     அந்த ஊரில் விளையும் பயிர்களைப் பற்றியும் ,அவை விளையும் பருவம் பற்றியும் எனக்கு விளக்கினார்கள் தெளிவாக.
அந்த ஊரில் கிடைக்கும் காய்,கனிகள் ,செடிகள் ,தினசரி வாழ்வில் அவை பயன்தரும் விதங்கள் என எதார்த்தமாகக் கூறுவார்கள்.ஆனால் அவற்றை மூலிகை என நாம் கூறி ,கொஞ்சம் புதிய உலகத்திற்கு அவர்களை அழைத்துச் சென்று பயமுறுத்தி இருக்கிறோம் .
                                                       அந்தக் கல்வியாண்டில் ஆம் வகுப்பு தமிழ்ப்  பாடம் -மூலிகை மருத்துவம் .இதற்குத்  தேவையானவை முழுக்க முழுக்க மாணவர்களின் சேகரிப்பும்,விளக்கங்களும் தான் .மிளகு,திப்பிலி ,துளசியில் ஆரம்பித்து ,மருதாணி,கருந்துளசி,மணித்தக்காளி,கீரை வகைகள் ,புண் போக்கும் பூண்டுச் செடிகள்,கற்றாழை,பெரண்டை,கற்பூரவல்லி ,செம்பருத்தி ,குப்பைமேனி ....இப்படி என்னென்ன அவரது  வாழிடங்களில்,வழித்தடங்களில் உண்டோ அத்தனையையும் தேடி , சேகரித்து வந்து அடுக்கடுக்கான விளக்கங்கள் வேறு தந்தார்கள்.யாரோ ஒருவர்,இருவர் அல்ல,வகுப்பு முழுமையும் இந்த சேகரிப்பில் ஆர்வமாக ஈடுபட்டது.இப்படித்தான் அவர்கள் இயல்பு எனக்குப் புரிய ஆரம்பித்தது.
                                                     இந்தப்  பள்ளிக்குழந்தைகள் மட்டுமல்ல;உலகில் தோன்றும் எல்லாக் குழந்தைகளுக்கும் இந்தத் தேடல் இருக்கும்.ஏனெனில் 
கற்றல் மனிதனின் அடிப்படை பிறப்பியல்பு ;இதே போன்று எல்லாப் பாடங்களுக்கும்  கற்பித்தல் பொருட்களாய் மாற்றம் பெற்றனர்.இவற்றின் வழிதான் அவர்களைப் பற்றி சிந்திக்க வைத்தனர் என்னை.....
( பகிர்வுகள் மீண்டும் தொடரும் )


Sunday, 27 April 2014

6.கணக்கு வகுப்புகள் .....(தொடர்ச்சி )


                    ஆம் ,அந்தக் குழந்தைகளின்  கண்களில் பிரகாசத்தைப் பார்த்ததும் எனக்கும் சந்தோஷம்.
                    "அப்டியா?,அப்போ சரி ,இனிமேல் கணக்குப் பாடத்தைப் பத்தி கவலைப் படாதீர்கள் ",என்றேன்.
                     "சரிங் டீச்சர் ",கோரஸ் குரலில்.
                   என்னைப் பொருத்தவரை இந்தப் பள்ளியில் 6,7,8 வகுப்பு மாணவர்கள்தான் என் களம் , ஆகவே அவர்களுக்குத் தேவை அடிப்படைக் கணக்குகள்  மட்டுமே. இதோடு,  கொஞ்சம் அனுசரணை,கொஞ்சம் அக்கறை, கொஞ்சம் கண்டிப்பு,கொஞ்சம் ஆர்வம் ,கொஞ்சம் அவர்களைப் புரிதல் இவ்வளவு தான். சரியான விகிதத்தில் இவற்றைக் கலந்து, கற்பித்தல் என்ற உணவைக் கொடுத்தால், கற்றல் என்ற வளர்ச்சி ஊட்டமாகவே கிடைக்கும் என உணர்ந்தேன் .
                   "(வகுப்பின்)பின்னாடி இருப்பவர்கள்  பேனா,ஸ்கேல் , பென்சில்,கணக்கு நோட்டு  மட்டும் எடுத்துக் கொண்டு என் பக்கத்துல வந்து உட்காருங்க",என்றேன்.
                       "பைங் டீச்சர்?",
                       "அதெல்லாம் வேண்டாம்" ,என்றேன்.
                         "புத்தகங் டீச்சர் ",
                         " அதும் வேண்டாம் "
  அவர்களுக்குள்ளேயே மாறி மாறி பார்த்துக்கொண்டனர். 
                         "சரி,மொதல்ல  இருந்து ஆரம்பிக்கலாமா ?",என்றேன்.
                      சந்தோசமாக தலை ஆட்டினர்.அவர்களைப் பொருத்தவரை அந்தப் புத்தகங்களைப் புரட்டி கணக்குகளைப் போடச் சொல்வது பிடிக்காது.
அதிலும்  மிகச் சில மீத்திறன் மாணவர்களோ, டீச்சர் ஏன் புத்தகம் வேண்டாம் என்கிறார் ,என யோசித்துக்கொண்டு என்னைப் பார்ப்பதும் எனக்குப் புரிந்தது.
                        "நமக்கு முதலில் வருவது என்ன? ",
                         "எண்ணியல்ங் டீச்சர் ",
                           "சரி, எண்ணியல்னா 0,1,2,3,4,5,6,7,8,9 இந்த பத்து எண்களைப் பயன்படுத்தி கூட்டல்,கழித்தல்,பெருக்கல்,வகுத்தல் இந்த 4 அடிப்படை செயல்களையும் ,தொடர்புடைய கணக்குகளையும் போடுவது தான்" , என்றேன்.
                         அவர்களுக்குத் தேவையான விஷயங்களை கரும்பலகையில் எழுதி விளக்கினேன் .அவை....
                          இயல் எண்கள்(N ),
                          முழு எண்கள்(W),
                           முழுக்கள் (Z ),
                         விகிதமுறு எண்கள் (Q ).....
                         இவை அனைத்திற்கும்  எடுத்துக்காட்டுகளுடன் விளக்கங்கள் ,     அவர்களது கணக்கு நோட்டின் ஆரம்பமாக இருந்தது.................
                         அன்று மட்டுமல்ல தொடர்ந்து 13 வருடங்களாக 6-10 எந்த வகுப்பிற்குச் சென்றாலும் முதல் கணித வகுப்பில் இந்த உரையாடல்களும் விளக்கங்களும் எனது வகுப்பறையில் இடம் பெற்றிருக்கும்,.........இவை எனது மாணவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்ட முதல் பாடம் என்பேன்  .
                         ஏனெனில் கணக்கின் மிக மிக அடிப்படையான இவை தெரியாததால் மட்டுமே மாணவர்கள் அடுத்தடுத்து வரும் கணக்குப் பகுதிகள் புரியாமல் நிலை தடுமாறி ஒரு கட்டத்தில் கணக்கை வெறுக்கின்றனர்.
                        நீங்கள் நினைக்கலாம் ,இதென்ன கஷ்டமா என்று?நமக்குக்  கஷ்டம் இல்லை,கல்வி அறிவு இல்லாத பெற்றோரிடமிருந்தும்,கணக்கு என்றாலே தெரியாத சூழலில் இருந்து வரும் நமது  பள்ளிக் குழந்தைகளுக்கு 
இதுவும் சொல்லிக் கொடுக்காதவரை கஷ்டம் தான்.
                       10-ஆம் வகுப்பில் சூத்திரங்களைக் கட கடவென apply செய்து நிமிடத்தில் கணக்குப்  போடும் திறன் கொண்ட ஒரு மாணவனோ/மாணவியோ ,எளிமை என நாம் சொல்லும் முழுக்களின்    கூட்டல், கழித்தல்,பெருக்கல்,வகுத்தல் செயல்களில்( + / --) குறிகளை சரியாகப் போடத் தெரியாமல் விழிப்பர் .ஏனென்றால் அடிப்படைக் கணக்குகளில் பயிற்சி இல்லாமை ..ஆம் ,இதைத்தான் எனது மாணவருடன் நான் பகிர்ந்து கொண்டேன்.
                       நான் நினைப்பவற்றை தினமும் எனது மாணவரிடம் பகிர்ந்து கொண்டேன்.அவர்கள் மாற வேண்டும் ,புரிந்து கொள்ள வேண்டும், நன்றாகப் படிக்க வேண்டும்.....இது போன்ற வேண்டும்,வேண்டும் என்ற  வேண்டிய விஷயங்களை அவர்களோடு பகிர்ந்து கொண்டதன் விளைவு ,எங்களுக்குள் நல்ல புரிதல்  ஏற்பட்டது.
                      ஒவ்வொரு வகுப்பிலும் முதல் நாளின் பாடத்தை கண்டிப்பாக கேட்பேன் அல்லது அவர்களே சொல்வார்கள்,அந்த சுதந்திரத்தை அவர்கள் பயன்படுத்தினார்கள்.அதைத் தான் நாம் previous  knowledge என்று teaching practice பொழுது lesson plan பக்கங்களிலும் , notes of lesson ஏட்டில் motivation என்றும் எழுதுகிறோம்..ஆனால் அவை ஏட்டோடு நின்று விடுகிறது.
                        அல்லது syllabus முடிக்க முடியாது என்று கூறி பயிற்சிக் கணக்குகளுக்கு   ஓடுகிறோம் .யாருக்காகப்  பாடம் நடத்துகிறோமோ அவர்களுக்குப் புரிய வைப்பதற்கு நாம் தயாராக இல்லை,அதுதான் நம் பிரச்சனை.
                     ஆகையால் அதில் நான் தெளிவாக இருந்தேன்.தேர்விற்காக மட்டும் என்றுமே  பாடங்களை நடத்துவது என் அதிகாரத்தில் கிடையாது ,
எண்ணியலுக்கு நான் முதலில் கூறிய அடிப்படையைப் போலவே ஒவ்வொரு பிரிவுகளுக்கும் (CHAPTERS )அதனதன் அடிப்படை, விளக்கங்கள், எடுத்துக்காட்டுகள்.....இவையனைத்தும் கண்டிப்பாக இருக்கும்.
                      நானும் முதல் நாளிலேயே இவையனைத்தும் செய்து முடித்து விடவில்லை ,எனக்கும் பயிற்சி தேவைப்பட்டது.கொஞ்சம் கொஞ்சமாகத்தான் implement செய்தேன்.கணக்கு நோட்டில் என்று அவர்கள் கணக்கு போட்டாலும் தேதி இருக்கவேண்டும்.மிக மிக மிக முக்கியம் உண்மையான தேதி போடுவது.இது அவர்களுக்குப் பிடித்திருந்தது.
                     நம் அனைவருக்கும் தெரிந்ததுதான் என்றாலும் சொல்கிறேன், மாணவர்களைக் குழுவாகப் பிரித்தல்-தலைமை,உபதலைமை தெரிவு  செய்து 90,95 என்ற கூட்டத்தை 5,7 என சிறு குழுக்களாகப் பிரித்தல் எனது முக்கியப் பணி ,ஏன் என்றால் நம்மால் எல்லோரையும் நாள் முழுவதும்  கவனிக்க முடியாது ,மேலும் peer study என்ற கான்செப்ட் ,நன்றாக வேலை செய்தது.                                   பெரிய வகுப்புக் குழந்தைகள் என்றால்தான் மற்றவரைப் பற்றி ஆசிரியரிடம் சொல்லமாட்டார்கள்,சிறு வகுப்புகளில் நமக்கு வேண்டிய அனைத்தும் அந்த group leaders எனப்படுபவர்கள் சொல்லி விடுவார்கள் , ஒவ்வொருவரின் கற்றல் வேகத்தையும்.  ஆகையால் என்  பணி மிக எளிது, அந்த மாணவர்களின் கற்றல் நிலை என்ன,எங்கு அவன் தடுமாறுகிறான், எப்படிச்   சொன்னால் புரியும், என்ன செய்யலாம் இவற்றைத் திட்டமிடுதல் மட்டும்  கவனத்தில் வைத்து  அவர்களை follow up செய்தல் தேவையாக இருந்தது எனக்கு.
                       இது கணக்கு வகுப்புகளுக்கு மட்டுமல்ல,எல்லாப் பாடங்களுக்கும் (subjects )பொருந்தியது.because I 'm not a  BT Teacher ,எல்லாப் பாடங்களையும் கற்பிக்கும் Secondary Grade Teacher .
                        எனது கருத்து- ஒருவர் ஆசிரியராக இருக்க, தகுதித் தேர்வை விட குழந்தைகளை அணுகும் தகுதிகளை வளர்த்துக் கொள்ளுதல் அவசியமாகிறது......
                      ஆம்,எந்தக் குழந்தையும் முனைவர் பட்டங்களுக்காக  நம்மிடம் வருவதில்லை,அது அவர்கள் பெரியவராக வளர்ந்த பிறகு அவர்களே பார்த்துக்கொள்ளும் வழிகள்.
                     மாறாக, கற்றுக்கொள்ளும் ஆர்வத்தையும்,தன்னம்பிக்கையும்,நல்ல எண்ணங்களை சிந்திக்கவும்,அனுபவங்களை வாழ்க்கைக்குப் பயன்படுத்தும் வழிகளையும் ,பிறருக்கு நல்லன செய்யும் சுயநலமில்லாப்  பண்புகளையும்   சொல்லித்தரவே, நாம் இருக்கிறோம் என்று கற்றுக்கொள்ளவே  நம்மிடம் வருகின்றனர்.
                    எழுத்துக்களையும் ,எண்களையும் கற்றுக்கொடுத்து விட்டால் புத்தகங்களை அவர்களே வாசித்துக் கொள்வார்கள, நாம் வழிகாட்டிகளே. எதை எப்போது  வாசிக்க வேண்டும் என்று கூறி வழிகாட்டி உடன் இருத்தலே நம் பணி...
                    நமது subject depth எல்லாம் அவர்களிடம் காட்ட அவசியம் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது,சாதாரண பால பாடம் அவனது பசி ,அதை விட்டு விட்டு  நாம் கணக்கில் புலியாக இல்லை  என அவனை சலித்துக்கொள்வதும்,அவனுக்குப் புரியவில்லை எனத் திட்டுவதும்,வீட்டுக் கணக்குகளை போடமாட்டேன் என்கிறார்கள் எனப் புலம்புவதும்,முன் வகுப்புகளின் கற்பித்தலை குறை கூறுவதுமாக நம்மோடு அவனது நிகழ் காலத்தையும் வீணாக்கி வருகிறோம்....(மீண்டும் பேசலாம்)
                   

   
  
                    




























































































                      












                   

Thursday, 17 April 2014

5. கணக்கு வகுப்புகள்

5.கணக்கு வகுப்புகள் ....(தொடர்ச்சி )

        ஒவ்வொருநாள்   கணித வகுப்பறையும் பல பிரச்சனைகளை சந்தித்ததால் ,எனது வகுப்பறையை வேறு மாதிரி திட்டமிட்டேன்.அன்று கணித வகுப்பிற்குள் போன உடன் மாணவர்களிடம், கணக்கு நோட்டு,புத்தகங்களை மூடி வைக்கச் சொன்னேன்.முன்பே முடிவு செய்தபடி அவர்களிடம் பேச ஆரம்பித்தேன்.
             "இன்று நாம் கணக்கு போடப்போவதில்லை",நான் சொன்ன உடன் ,
              "ஏங் டீச்சர் ?"-ஒரு சேர அனைவரும் கேட்டனர்.நான் அவர்களைக்  கையமர்த்தி ,
             "உங்களில் பாதி  பேருக்கு  நான் board -ல போடும் கணக்குகள் புரியறதில்லைனு 
எனக்குத் தெரிகிறது,உண்மைதானே? "-என்றேன்,யாரும் பதில் சொல்லவில்லை.
              ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு விழித்தனர்.என்னையும் பார்த்தனர்.சற்றுப்  பொறுத்திருந்து மீண்டும் கூறினேன்.
             "இங்க பாருங்க ...யாரையும் திட்றதுக்காக நான் கேட்கல,நீங்க உண்மைய சொன்னாதான் உங்களப் பத்தி எனக்குத் தெரியும் ,நல்லாப் புரியற மாதிரி சொல்லித்தர முடியும்.அதனால தைரியமா சொல்லுங்க ,யார் யாருக்குப் புரிய மாட்டேங்குது?" ... என்றவுடன்,
             அவர்களது முகத்தில் ஒரு தெளிவு பிறந்து,ஒவ்வொருவராகக் கையை உயர்த்த, பாதி வகுப்பு மாணவருக்குப் புரிவதில்லை எனத் தெளிவாக எனக்குப் புரிந்தது.இன்னும் கொஞ்ச பேர் பாதி கையை தூக்கினர்.
            "உங்களுக்குமா ?"!!!!! என்றேன் .
             "கொஞ்சம் கொஞ்சம் தான்  புரயுதுங்க டீச்சர் "-என்றனர்.
             "ஓ ....அப்படியா?சரி,கையை கீழே போடுங்கள் "-என்று கூறி விட்டு ,
             "யார் யாருக்கெல்லாம் கணக்குப் பிடிக்காது,வராதுன்னு நெனைக்கறீங்க",என்றேன்.
 ஒரு கூட்டமே கை தூக்கியது.மேலும் ஏன் என்றதற்கு,சிலர் எழுந்து நின்று மடமடவென்று ,
             "டீச்சர் எனக்கு எல்லாம்  புடிக்கும்,இந்த இங்கிலீஷ்-ம்,கணக்கும்  தாங் டீச்சர் வரமாட்டேங்குது ,புடிக்கல ,அதுல மட்டும் பெயில் (fail ) ஆகிடறேன்",
             "எனக்கு எப்பவும் பிடிக்காதுங் டீச்சர் ",
             "டீச்சர் ,கொஞ்சூண்டு புரியுதுங்க ,நடுவுல புரியல ",
             "எனக்குப் பெரிய கணக்கை பாத்தாலே புடிக்காதுங்க டீச்சர்",
             "எனக்கு அஞ்சாவது வரைக்கும் நல்லாப் புரிஞ்சதுங் டீச்சர்,அப்புறம் இந்த 
ஆறாவதுல இருந்து தான் புரியல,மார்க் கம்மியா வாங்கறேன்",
             "டீச்சர், நடத்தும்போது புரியுது ,பரீட்ச்சை-ல போனா , மறந்துடுதுங்க டீச்சர்",
             " ரொம்பக் கொழப்புதுங்க டீச்சர்",
             "என்னென்னமோ வருதுங்க டீச்சர்,கணக்குன்னுட்டு பெரிய பெரிய பேராவா (paragraph) கேள்வி இருக்கு,எப்படி புரிஞ்சுக்கறது?".........................................
              இது போன்று எண்ணற்ற கருத்துக் குமுறல்கள்  மாணவர் பக்கமிருந்து ..... 


           இதெல்லாம் எனக்கு மட்டுமில்லை,எல்லாப் பள்ளிகளிலும் இருக்கும் பொதுவான பிரச்சனைகள்.எந்த ஆசிரியர்,எந்த பள்ளிகளுக்கு கணக்கு வகுப்பு எடுக்கச் சென்றாலும் அனைத்து ஆசிரியர்களும் சந்திக்கும் சூழ்நிலைகள்  தான் . இங்கே தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். இவற்றை எல்லாம் புறம் தள்ளி, பாடப்புத்தகத்தில் உள்ள கணக்குகளை மட்டும் கருத்தில் கொண்டால் நமக்கு தோல்வியே.syllabus வேண்டுமானால் கவராகலாம் ,மேற்கொண்டு அவர்களிடம் மாற்றம் இருக்காது...ஆகையால்,

            "சரி பயப்படாதீங்க,இதையெல்லாம் சரிபண்ற மாதிரி நாம் இனிமேல் class நடத்தலாம் ....."-என்று சொன்னவுடன் அவர்கள் கண்களில் பிரகாசம் .....நம்பிக்கை ...அந்த பிரிவேளை முடிந்தது.......(வளரும் ....)

 


    








    















             
        

                 

Saturday, 12 April 2014

4.கணக்கு வகுப்புகள்

4.

                       எனது ஆரம்பகால கணக்கு வகுப்புகள் அடிதடியாய் இருக்கும்.ஆம்,
125 மாணவருக்கும், அவர்களது கற்பனை உலகத்திலிருந்து அவர்களை மீட்டுக் கொணர்ந்து,நேராய் உட்கார வைத்து,எழுதாத கரும்பலகையில்  அழுத்தி அழுத்தி எழுதி ,அதற்குள் ,சண்டை போட்டுக்கொள்ளும் மாணவர்களைத் திட்டி விட்டு ,இவையெல்லாம் முடிந்து, கரும்பலகையில் ஒரு concept அல்லது (எ.கா ) கணக்கைப் போட்டு விளக்கி ,அவர்கள்  அதைப் பார்த்து கணக்கு நோட்டில் போட வைக்கும்போது வருகைப் பதிவேட்டை
விரித்துப் பெயர்களைக் கூப்பிட ஆரம்பிக்கும் போது அந்தப் பிரிவேளை முடிந்து 45 நிமிட மணித்துளிகள் காணாமல் போயிருக்கும் .
                       அடுத்து எந்த ஆசிரியர் தற்செயல் விடுப்போ அல்லது யாரிடமாவது வகுப்பைக் கடன் கேட்டோ ,அவசர அவசரமாக கணக்குகளை நடத்தி முடிக்கும் போது எனக்கு மிகவும் அலுப்புத் தட்டிவிடும்.ஏனென்றால் அன்று 100 குழந்தைகள் மட்டுமே வருகை புரிந்து இருப்பார்கள்.80 பேரிடம் மட்டுமே கணக்கு  நோட்டுகள்  சரியாக இருக்கும்.அட்டை போடாத நோட்டுக்கள் அவற்றில் பாதி.அளவுகோல் ,பென்சில்,பேனா இவையும் எல்லோர் கைகளிலும் இருக்காது.அப்படியே இருந்தாலும் அவற்றை நோட்டில் பயன்படுத்தாமல்,துப்பாக்கியாகவும் ,கத்தியாகவும் வைத்துத் தங்களுக்குள் அடித்துக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டு இருப்பார்கள். இதையெல்லாம்  எப்படி சமாளிப்பது என்பதே ஒரு சவாலாக இருக்கும் எனக்கு.
                      சில நாட்களில் நோட்டைப் பிடுங்கி, வகுப்பை விட்டு வெளியில் எறிந்தும் கூட இருக்கிறேன்.ஆனால் அவற்றிற்கெல்லாம் சரியான தீர்வு இது இல்லை என கொஞ்ச நாட்களிலேயே புரிந்து கொண்டேன்.கணக்கு நோட்டை கிழித்து எறியும் அஸ்த்திரமெல்லாம் நான் பள்ளிக்கூடம் படித்த நாட்களில் எனது ஆசிரியர்களிடம் பார்த்தது.இங்கே உபயோகித்துப் பார்த்தேன் ....எனக்கு அது உசிதமாகப் பட வில்லை .
                    சில மாதங்களில் பல விஷயங்கள் எனக்குப் புரிய ஆரம்பித்தது........ ஆம்.....ஒரு மாணவன் ஏன் கணக்கு வகுப்பில் இவ்வளவு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறான்  என யோசித்து ,அவர்களை வகுப்பறையில் உற்று நோக்கினேன், தொடர்ந்து பல நாட்கள்........
                     அவர்களிடமிருந்து எனக்குக் கிடைத்தத் தகவல்கள் ....
                     பல மாணவருக்கு எண்களை இனம் காணத்  தெரியவில்லை ,
உதாரணமாக 6ஐ 9ஆகவும்,7ஐ 1 ஆகவும் எண்ணிக் கொள்கின்றனர்.
சிலருக்கு எளிமையான கூட்டல்,கழித்தல் கணக்குகள் தெரியவில்லை, சிலருக்குப்   பெருக்கலையும் ,வகுத்தலையும் கண்டால் காய்ச்சல் வந்து விடுகிறது.சிலருக்கு  கணக்கு என்றாலே பயம்.தங்களுக்குப் புரியாது என முன் கூட்டியே முடிவு செய்து விடுகின்றனர்.  காரணம்.............அவர்களுக்கு  அடிப்படைக் கணிதம் என்று சொல்லப்படும் கூட்டல்,கழித்தல் ,பெருக்கல் வகுத்தல் இவற்றில் அதிகப் பயிற்சி இல்லை.இதையெல்லாம் தாண்டி அவனது உடல் நலம் சார்ந்த பிரச்சனைகள்,காலை உணவு உண்ணாமல் வருவது ,அதைத்  தாண்டி குடும்பம் சார்ந்த பிரச்சனைகள்.....
                      இவ்வளவு பிரச்சனைகளை தனக்குள்ளே வைத்துக்கொண்டு ஒரு சிறுவன்/சிறுமியால் எவ்வாறு இயல்பாக அமர்ந்து கணக்கு கவனிக்க முடியும்?கணக்கு மட்டுமல்ல,சில மாணவர்களால் எந்தப் பாடத்தையும் கவனிக்க முடிவதில்லை என்பதையும் புரிந்து கொண்டேன்.மேற்சொன்ன காரணங்களால் தான் நெருப்பைத் தொட்டு விட்ட அவஸ்தையில் மாணவர்கள் கணக்குப் பாட வகுப்புகளில் தவியாய் தவிக்கிறார்கள்.                                            .செட்டிமாங்குறிச்சி 6,7,8 ஆம் வகுப்பு மாணவர்கள் கணக்குப் பாடத்தையும் ,கற்றுத் தரும் என்னையும் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து கொண்டு ,ஏற்றுக்கொள்ளத்  தொடங்கினர் .......எப்படி??
(பார்க்கலாம்  இன்னொரு நாள்...)










             . 

Friday, 11 April 2014

பள்ளி வளாகம் - 3

3.பிரம்மாண்டம் பிறப்பெடுப்பது பள்ளிகளிலேதான் .............................

                               எதை வேண்டுமானாலும் கொடுங்கள்,எடுத்துக்கொள்வோம் எங்களுக்குள்,  என்ற தேடலுடன் வகுப்பறையில் தங்களை நிலைநிறுத்தும் கிராமத்துக் குழந்தைகள் இவர்கள் .....இவர்களுக்கு ,அரசு பள்ளியின் வகுப்பறைத் தளங்கள் தான் சிமெண்ட்  பூசப்பட்ட இடம்..ஆம் கூரை வீடுகளும் ,மண் தரைகளுமே இவர்களது குடியிருப்புகள் ....என்றால் அவர்களைப் பற்றி இப்போது உங்களுக்குப் புரியும்...
                                தாய் ,தந்தையர் காலமாற்றங்களுக்கு ஏற்ப கல்லுடைத்தல் , கரும்பு வெட்டுதல்,கார வேலை என விடியலுக்கு முன் இவர்களை விட்டுச் சென்று விடுவர் வயிற்றுப்பாட்டுக்கு .
                                 தன்  கீழ் வளரும் தம்பி ,தங்கைகளுக்கு சமைத்துக் கொடுத்து, மேலும் அவர்களுக்கு  வேண்டியவற்றை செய்து ,அவர்களையும் பள்ளிகளுக்கு அழைத்து வருவார்கள்.ஆறாம் வகுப்பிற்குக்  கீழ்  படிக்கும் தம்பி,தங்கை என்றால்,  சாலையின் மறுபுறம் இருக்கும்  தொடக்கப்பள்ளியில்  கொண்டு போய்  விட்டுட்டு  வருவார்கள். பொறுப்புகளை மிகச் சிறிய வயதிலேயே தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு அதைச் சரியாகச் செய்யும் தளிர்கள் அவர்கள்;அவர்களை நாம் வாசிக்கத் தொடங்கினால் மிக அரிய பாடங்களை நமக்குக் கற்றுத் தருவார்கள்.
                                 அந்த வருடம் எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம்,
எனக்கும் அவர்களுக்கும் நெருக்கத்தை ஏற்படுத்திய நாட்கள் அவை.வரலாற்றைக் கற்பிப்பதும் ,புவியியலை அவர்களுக்குப் புரிய வைப்பதும் சற்று சிரமமாகத்தான் இருந்தது .அங்கே பிறந்தது தான் இந்த நெருக்கம்...........
                   ஓயாமல் ,பாடங்களை   வரி விடாமல் குறிப்பு எடுத்து நடத்துவதும் ,படிக்க வைத்து சிறு சிறு தேர்வுகள் எழுத  வைப்பதும் ,அப்படி அவர்கள் எழுதியவற்றை உடனே  திருத்தித்  தருவதும் தான், எனது ஆரம்ப கால கற்பித்தலாய்  இருந்தது .அவர்களைப் புரியப் புரிய இந்தக் கற்பித்தல் முறை மாறிப் போனது.
                  ஆம், TLM (Teaching  Learning Materials )  என்று சொல்லப்படும் கற்பித்தல் - கற்றல் உபகரணங்களை , அவர்களையே உருவாக்க ஆயத்தப்படுத்தினேன் .
அது இருபாலரும் படிக்கும் பள்ளி .முதலில் TLM ஐ நான் மட்டுமே செய்து கொண்டிருந்தேன்.சில நேரம், வகுப்பறைக்குள்ளேயே அவற்றைத்  தயாரிப்பேன் .அப்போதெல்லாம் என்னோடு அவர்களும் சேர்ந்து கொள்வர் .பார்த்து செய்யக் கற்றுக்கொண்டனர்.சார்ட் ,அ ட்டைகளில் படங்கள் ,செய்தித்தாள்களின் வரலாறு -புவியியல் தொடர்பான செய்திகள் -படங்கள் திரட்டுதல் போல் ......இவை கூட  டீக்கடைகளில் திரட்டப்படும் சொற்பமான செய்திகளே..அவர்களது வீடுகளில் செய்தித்தாளுக்கு இடமேது?.
                    மாணவிகளா ?மாணவர்களா ?போட்டி வேறு....நான் சும்மாதான் இந்தத் தேடலை அவர்களிடம் ஆரம்பித்தேன்.அது அவர்களுக்குள் இடை விடாத்  தேடலாய் அமைய ஊன்றப்பட்ட விதையாகப் பின்னாட்களில் கண்டேன்.அதில் ஆச்சரியமும் இல்லை எனலாம்.ஏனெனில் அவர்களுக்குள்
தேடலின் செயல் வடிவம் பிரம்மாண்டமாய்  உருவெடுத்துக் கொண்டிருந்தது .
                    சில குழந்தைகள் வரலாற்றுப் பாட முகவடிவங்களை(தலைவர்கள்,சுதந்திரப் போராட்ட வீரர்கள் ) காலண்டர் அட்டைகளில் வெள்ளைக் காகிதம் ஒட்டி ,வரைந்து தங்களது படைப்புத்  திறனை வித விதமாக வெளிப்படுத்துவார்கள். மண்பாண்டங்கள் செய்யப்படும் குடும்பக் குழந்தைகளும் இங்கே இருந்தனர்.அவர்கள்  களிமண்ணால் ஆன உருவங்களைப் பாடத்தோடு தொடர்புபடுத்தி செய்து வருவார்கள்.
                 அப்படித்தான் ஒரு நாள், 8ஆம் வகுப்பு புவியியல் பாடத்தில் வந்த பாறைகளின் வடிவமைப்புகளை மாதிரிகளாக செய்து வந்தனர்.வகுப்பறைக் கலந்துரையாடலில் விளைந்த சிந்தனைகள் ,அவர்களை மேலும் மெருகூட்டியது.ஆம், அவர்கள் ஒருமுறை எரிமலையைக் களிமண்ணால் செய்து காயவைத்து எடுத்து வந்தனர்.மேலும் யோசிக்க,paint வாங்கித்தர,இரண்டே நாட்களில் பாறைகள், எரிமலை அனைத்திற்கும்   நிறங்கொடுத்து ,காயவைத்து  அவ்வளவு அற்புதமாகப் படைப்புத்திறனை  வெளிப்படுத்தி இருந்தனர்.
                  இதே போல் ,பாறைகளின் சிதைவிற்கும் வெகு நேர்த்தியாக செய்து
எடுத்து வந்தனர்.அந்தக் "காபி "நிற பாறைகளும் "ஆரஞ்சும் மஞ்சளும் சிகப்பும்" கலந்த எரிமலையும் என்னை மட்டுமல்ல,பள்ளி முழுக்க அனைவரின் கவனத்தையும் கட்டி வைத்தது அவர்கள் மேல் ...
                  இன்று கூட எந்த அழகுப் பொருள் விற்கும் அங்காடிகளிலும் அது போன்ற அழகான,நேர்த்தியான மாதிரி உருவங்களை என்னால் கண்டுபிடித்து விட முடியாது...இந்த நாள் போல கேமராக்களும்,செல் போன்களும் எங்களிடம்  இல்லாத நாட்கள் அவை...இருந்திருந்தால் இப்போதுள்ள முக நூல் பக்கங்களில் அந்த உருவங்கள் சிரித்திருக்கும்.....
                 அவர்களின் அந்த வெற்றி மீண்டும் மீண்டும் புதியதாக அவர்களை சிந்திக்க வைத்ததும் ,மற்ற மாணவர்கள் அதைப் பார்த்துத் தங்களையும் இது போல உருவாக்கத் தூண்டி அவர்கள் முயன்றதையும் இங்கே நான் குறிப்பிட்டாக வேண்டும்.இவை மட்டுமல்ல ,இது போல் அந்தக் குழந்தைகள் இன்னும்  இன்னும் படைத்துக் கொண்டே தங்கள் சமூக அறிவியல் அறிவை தாங்களாகவே பயன்படுத்தி எனக்கும் கற்பித்தலை எளிதாக்கினர் ....
             எனது சக ஆசிரியர்களும் , நானும் ,மாணவர்கள் அனைவருமே , அவர்களுக்குள் திறனோடு ,ஏதோ ஒன்றைத் தேடித்தான் பள்ளி எனும் சாலையில் பயணம் செய்கின்றனர் ,வழி நடத்தும் பணி தான் நம்முடையது என நிஜத்தில் உணர்ந்த நாட்கள் அவை.இன்னுமொரு செய்தி என்னவெனில் உள்ளூர் வசதிகளுக்கேற்ப, அவர்களை சிந்திக்க வைத்தால் பிரம்மாண்டம் பிறப்பெடுக்கும் ....................நீங்கள்  எண்ணலாம் எல்லோரது வகுப்பறைகளுக்குள்ளும் இப்படித்தானே இருக்கும் என்று... ஆம்..உண்மை, ஆனால்  நான் பதிவு செய்ய விரும்புகிறேன், எனது நினைவுகளோடு கலந்து விட்ட , முதல் தலைமுறையாய்  கற்க வந்த அந்த சிறார்களின் முயற்சிகளை........ 
(பயணம் தொடரும்)........



Tuesday, 8 April 2014

பள்ளிக்கூடம்

1..........(போகின்ற போக்கில்)

                                                பள்ளிக்குக்  கற்றுக்கொள்ள வரும் குழந்தைகள் என நாம்  முடிவு செய்து , நாமாய் வரையறை வகுத்துக்கொண்டு திட்டமிடுவது, நம்மைப்  பொருத்தவரை வேண்டுமானால் சரியாக இருக்கலாம் .சற்று யோசித்தால்,அவர்கள்  பக்கம்  நம்  கவனம் திரும்பி ,அவர்களது செயல்களை உற்று நோக்கினால் அக்குழந்தைகள் நமக்குக் கற்றுக்கொடுத்தத் தருணங்களும் நம்மைக் கடந்து சென்றது, நம்மில் வேர்  விட்டிருக்கும்.
அவ்வாறு போகின்ற போக்கில் என்னை பாதித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன் இங்கே ....................


அரசு மேல் நிலைப்பள்ளி , (20.08.2001 முதல் .....)
செட்டிமாங்குறிச்சி ,
சேலம் மாவட்டம் .
                                    ஆசிரியராக வேண்டும் என்ற அவசியத்தாலேயே அரசுப் பணியை  எதிர்பார்த்து ,எதிர்பார்த்து பணியில் சேர்ந்த நேரம்.அது ஆகஸ்ட் மாதம் ,பணியில் சேர்ந்ததும் ,நான் ஆசிரியர் என்ற எண்ணம் தான் என் மனதில் இருந்ததே தவிர ,என் எதிரில் இருப்பவர்கள் குழந்தைகள் ,அவர்களைத் தட்டிக் கொடுத்து கற்றுக் கொள்ளத் தூண்டும் கெட்டிக்காரத்தனம் எனக்குப் பிடிபடவில்லை .   ஆம்..  புத்தகங்களையும் syllabus யும் எனது கையில் தந்தவுடன் ,அவை அத்தனையையும் அவர்களது மூளைக்குள் திணித்து விட வேண்டும் என்ற ஆர்வக்கோளாறு  என்றே கூட சொல்லலாம் .ஆம்.அதில் நான் மிகச் சிறந்த ஆசிரியர் என்று காட்டிக் கொள்ளும் எத்தனித்தலே  முன் 
நின்றது .
                               நம்ப மாட்டீர்கள் ,ஒரு வகுப்பிலோ 128 குழந்தைகள்.எனக்குக் கொடுத்தது 6ஆம் வகுப்பு.  A ,B ,C என மூன்று பிரிவுகள்..ஒரு  6ஆம் வகுப்பின்  ஆசிரியர் மகப்பேறு விடுப்பு.விளைவு......மற்ற இரண்டு வகுப்புகளிலும் மாணவர்களைப் பிரித்துப் போட்டனர்.இப்போதோ 185 மாணவர்கள்  ஒவ்வொரு 6-ஆம் வகுப்பிலும் .
                               குழுக்கற்றல்,இணைக்கற்றல் என்று அவர்களைப் பின்னாட்களில் அமைத்துக் கொண்டேன்.....ஆனால் அப்போது அது  எனக்குத் தெரியவில்லை..நான் அந்தக் குழந்தைகளை  அவர்கள் சூழலில் வைத்து யோசித்துப் பார்க்கவே இல்லை என்றும் கூறுவேன் இப்போது.....
                               நானும்  எனது  சக  ஆசிரியர்  ஒருவரும் (பழனிசாமி) போட்டி போட்டுக் கொண்டு வகுப்பெடுப்போம் ,அது மட்டுமா? போட்டி போட்டுக் கொண்டு குழந்தைகளை விரட்டவும்  செய்வோம்.படிக்கவில்லை
எழுத்துக்களைத் தெரிந்திருக்கவில்லை என மிரட்டுவதும் ,பல நேரங்களில் 
அடித்து விடுவதும் நடக்கும்.அப்போது இடை நிற்றல் அடிக்கடி நிகழும்.
உண்மையில் அந்த இடை நிற்றல்களை  சந்தோசமாக எண்ணிய நாட்களும் உண்டு.ஆனால் இன்று ,மனதார அதற்காக வருந்துகிறேன்.ஏனெனில் அவர்களது சூழலை அவர்களது இடத்தில் நின்று சிந்திக்க அன்று எனக்கு அனுபவம் இல்லை .
                                அவர்கள் எழுத்துக்களை அறிந்து கொள்ளாமல்,பல்வேறு 
குடும்ப சூழலில் இருந்து வந்தும்,புதிய பள்ளி,புதிய ஆசிரியர் என மிரளும் 
குழந்தைகளாகவும் இருப்பார்கள் என்று மன ரீதியாக அணுகும் பக்குவம் 
அந்தக் கல்வியாண்டில் சத்தியமாய் எனக்குத் தெரியவில்லை.
                               ஆனால் ஒரே வருடம்.............அந்தக் குழந்தைகள்  என்னை மாற்றி விட்டனர் .ஆம் ,எல்லா நிலைகளிலும் யோசிக்க ஆரம்பிக்க வைத்தனர் என்னை.அந்த ஆரம்பமே எனது இந்த பகிர்வுகள்...........