பாட்டும் கதையும் பேச்சும் செயலும் ....
வீடுகளிலேயே தன்னைச் சுற்றியுள்ள சூழலிருந்து குழந்தைகள் அனைத்தையும் கற்றுக் கொண்டு தான் வருகின்றனர். இருப்பினும் அதனை முறைப்படுத்தி LSRW என்ற கேட்டல் , பேசுதல் , வாசித்தல் மற்றும் எழுதுதல் திறன்களை அவர்களிடத்தில் வளர்த்தலே ஆசிரியர்களின் தலையாய கடமையும் பொறுப்பும் எனலாம்.
இந்தத் திறன்கள் மொழிப் பாடத்திற்கே பொருந்தும் என நினைத்து மற்ற பாடங்களுக்கு அறிமுகப் படுத்தாமல் இருந்திடல் ஆபத்து, ஏனெனில் எல்லா பாடங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.
ஆகவே தான் எனது கணக்கு மாணவர்கள் செயல்பாடுகளுக்கு , கணக்கு பற்றிய பாடல்கள் பாடுகின்றனர். கணக்குக்குக் கதை சொல்கின்றனர் .
எனது அறிவியல் மாணவர்கள் பட்டிமன்றம் நடுத்தி அசத்துகின்றனர். நாடகம் நடித்து அறிவியல் கருத்துகளை மற்றவர்களிடையே எடுத்துச் செல்ல முயல்கின்றனர் ,
இங்கு கணிதப் பாடம் மொழிப் பாடக் கூறுகளை தன்னகத்தே ஒருங்கிணைத்து மாணவரை சிந்திக்க வைக்கிறது.
அறிவியலிலும் மொழிப் பாடம் ஆதிக்கம் செலுத்துவதைப் புரிந்து கொள்கின்றனர். அதற்கான வாய்ப்புகளை தொடர்ந்து உருவாக்குவது ஆசிரியர்களின் தலையாய பொறுப்பு .
7ஆம் வகுப்பு அறிவியல் பாட வேளை..
வகுப்பிற்குள் நுழைந்ததுமே ....
பல குரல்கள் , மிஸ் நான் படிச்சேன் , நான் ப்ராஜக்ட் செய்தேன் , நாங்க எல்லாரும் வாய் விட்டுப் படிச்சோம் , நல்லா மனப்பாடம் ஆச்சு , ஜாலியா இருக்குங்க மிஸ் ... காலையிலேயே எவ்வளவு எனர்ஜி எனக்கு தொற்றிக் கொண்டது , மாணவர்களது உற்சாகத்தால் ....
பாடம் பற்றி அடுத்த உரையாடல் உள் நோக்கிச் செல்ல , அறிவியல் வகுப்பு தமிழ் வகுப்பானது மீண்டும் ...
சரி ... இன்றைக்கு ஒரு கதை சொல்லலாமா ? என்றேன். ஓ.... எனக் கூச்சலிட ....
தாரே ஜமீன் பர் படத்தின் கதையை முழுவதுமாகக் கூற.. ஒருவரும் சற்றும் கவனம் விலகாமல் கேட்டனர். பல்வேறுபட்ட முக உணர்ச்சி , மகிழ்ச்சி , இறுதியில் இஷானின் திறமையைக் கண்டறிந்த ஆசிரியரைப் பாராட்டினர் ... டிஸ்லக்ஷியா பற்றி அவர்களுக்குக் கூறவே இப்படக் கதையைக் கூறினேன்.
இதில் வரும் இஷான் என்ற மாணவனது புரிதலில் குறைபாடு பற்றி விவாதித்தோம். எழுத்து டான்ஸ் ஆடுமா மிஸ் ?.... இஷான் மாதிரியே யாராவது இருக்காங்களா என்றேன் ... மிஸ் , திவ்யா அதே மாதிரி தான் மிஸ் யார் கூடவும் பேச மாட்டா , தனியாகவே இருக்கா ,யார் கூடவும் பேச மாட்டா ...
திவ்யா ..... இங்க வாம்மா ?
சில விசாரிப்புகள் பேசும் போதே பயந்தாள். பிறகு அவளை என் பக்கம் இழுத்து , கைகளைப் பிடித்தேன். அதற்கே சிலிர்த்தது அந்தக் குழந்தை , ஏதோ சில காரணங்களால் தனிமைப்படுத்துப் பட்டு தன்னை ஒதுக்குக் கொள்கிறாள் என்று மட்டும் புரிந்தது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் , ஆனால் தற்காலிகமாக அந்த சூழலை மாற்ற நினைத்தேன்.
பத்மப்பிரியா ..... திவ்யாவ உன் பக்கத்தில் உட்கார வச்சுக்கறயா ம்மா ..? திவ்யா உடன் எல்லோரும் பேசுங்க , அவளுக்கு வேண்டிய அளவு சொல்லிக் கொடுத்து படிக்க வை பத்மா ....
சரிங்க மிஸ் , நான் பாத்துக்கறேன் ... இது பத்மா ...
அந்த திவ்யா தான் வகுப்பறை உளவியல் 3 இல் நான் குறிப்பிட்டு இருந்த நீரின் மூன்று நிலைகளை செல்பாடாக நொடியில் தந்த திவ்யா .... இந்த நிகழ்ச்சிகளுக்குப் பின்னரே திவ்யா மீத்திறன் குழந்தையாக அடையாளம் காணப்பட்டாள் ... இப்போதெல்லாம் அனைவரிடமும் பழகுகிறாள் , என்னிடம் வந்து , "நான் வீட்டில் வாய் விட்டுப் படிக்கிறேன் மிஸ் ", என்கிறாள் ....
தொடரும்
உமா