Saturday, 17 November 2018

வகுப்பறை உளவியல் 14

வகுப்பறை உளவியல் : 14

குழந்தைகளுக்காக குழந்தைகளாலேயே ....
(17.11. 18)

பல வருடங்களாக எனது வகுப்பறைகள் , நான் பணிபுரியும்  பள்ளி முழுமையாகவும் புத்தகம் வாசிப்பது என தொடர் முயற்சிகள் எடுத்து வந்தாலும் , நூலகங்களுக்கே அழைத்துச் சென்று உறுப்பினராகி வாசிக்க வைப்பது , சிறு சிறு வாசிப்பு முகாம்கள் என பல இருந்தும் முதன் முறையாக வகுப்பறை
நூலகம் என முறையாக ஆரம்பித்தது நேற்று தான் ...

இந்தக் கல்வி ஆண்டு ஆரம்பித்தது முதலே புதியதாக வந்த எனது 6 ஆம் வகுப்புக் குழந்தைகளுக்கு மாற்றி மாற்றி புத்தகம் கொண்டு வந்து தருவேன் .. இதில் ஒரு பிரச்சனை என்னவென்றால்  49 மாணவிகள் இருக்கும் வகுப்பில் அனைவருக்கும் நினைவு வைத்து மாற்றி மாற்றி புத்தகம் வழங்குவது சற்றே சிரமமாக இருந்தது.

குழந்தைகளும் .. மிஸ் எனக்கு புத்தகம் தரவில்லை என தினமும் முகத்தைத் தூக்கி வைத்து , கோவிச்சுக்கு வாங்க ....

இன்னொரு முக்கியப் பிரச்சனை ஆங்கில வழி என்பதால் தமிழ் வாசிப்புக்கு அதிக நேரம் கிடைப்பதில்லை ...

ஆசிரியர்கள் இல்லாத நேரங்களில் அவர்களுக்குள் சண்டை என பல சின்னச் சின்ன பிரச்சனைகள் ...

பாடப் புத்தகம் தாண்டிய எந்தப் புரிதலும் 40 குழந்தைகளுக்கு  இல்லவே இல்லை ...

இவற்றின் விளைவு நிரந்தரமாக வகுப்பறை நூலகம் ஒன்று அமைக்க எல்லோரும் சேர்ந்து முடிவு செய்தோம் ...

குழந்தைகள் தினமான நவம்பர் 14 இன் சிறப்பாக இதைத் துவக்க முடிவெடுத்து சனிக்கிழமை 17.11 .2018 அன்று திறப்பு விழா .... ஏதேதோ அலங்காரம் ...

கதைப்புத்தகங்கள் விழியனின் பென்சிலின்  அட்டகாசத்தில் தொடங்கி , ஒரே ஒரு ஊரிலே எண்களின் கதை , பேசப்பட வேண்டிய விஞ்ஞானிகள் , 8 மாம்பழங்கள் , பூஜ்ஜியமாம் ஆண்டு , ஒரே ஒரு ஊரிலே , ராஜாளிக் கதைகள் , மஞ்சள் பையும் மோப்ப நாயும் ,தப்பியோடிய குட்டி முயல் , குட்டியானை , ஸ்னுப்பியும் ஸ்நிப்பியும் இப்படி 30க்கும் மேற்பட்ட கதைப் புத்தகங்கள் , மாத இதழ் கலைக்கதிர், யாதும்  உட்பட சில , தும்பி , றெக்கை இப்படி ...

ஆங்கில கதைப்புத்தகங்கள் , புதிர்க் கதை , காகிதப் பாவைகள் , நக்கீரன் 2018 , பொது அறிவுக் களஞ்சியம்  என 50 க்கும் அதிகமான புத்தகங்கள் எங்கள் வகுப்பறையை நிரப்பி இருக்க நூலகம் திறந்தோம் ... (அடுத்தடுத்த வாரங்களில் இந்த எண்ணிக்கை  100 ஐத் தாண்டும் )

மிஸ் ... உங்க கையால எங்கள் எல்லோருக்கும் புத்தகம் தர வேண்டும் ...என ஒரே குரலில் , எப்பவுமே நான் தானே தங்கங்களா தரேன் ... என்றதற்கு

வகுப்புத் தலைவி வருகைப் பதிவேட்டின் படி ஒவ்வொருவரது பெயரையும் வாசிக்க , எல்லோருக்கும் வழங்கப்பட்டது புத்தகங்கள் , வேண்டாம் என்றாலும் K .மகேஸ்வரி எப்போதும் உரிமையுடன் என் கைப்பேசியைப் பிடுங்குவது போல் எடுத்து , மிஸ் ஃபோட்டோ எடுக்கறேன் ..... எனக் கொஞ்சுகிறார்.

சரி. ..சிரிங்க எனக் கூறி ஒவ்வொருவருக்கும்  புத்தகம்  வழங்க வழங்க க்ளிக் செய்கிறார்.

அதன் பிறகு எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் ... என்னவெனில் , ஒவ்வொருவரும் ஏற்கனவே நம் வகுப்பில் நடைமுறையிலிருக்கும்  புத்தகம் படித்து நூல் குறிப்பு , விருப்பங்கள் (feed back) பதிவு செய்யும் வழக்கத்தைத் தொடர வேண்டும் என்பது.

இதன் முன் வேலையாக நாம் செய்தது , நூலகம் பற்றி , வாசித்தல் பற்றி தேசத் தலைவர்கள் , வரலாற்று மேதைகள் , அறிவியல் அறிஞர்கள் , மொழிப் புலவர்கள் என அனைவர் கூறிய கருத்துகளும் ஒரு பிரிவேளையில் பகிர்ந்து உரையாடப்பட்டது. இது தான் வகுப்பறை நூலகம்  உருவாக்கம் பற்றிய, வாசிப்பு பற்றிய ஒரு  தாக்கத்தை அவர்களிடையே உருவாக்கியதாகக் கருதுகிறேன்.

ச .தமிழ்ச்செல்வன்  ,  எஸ்.இரா,பாலபாரதி
லியோ டால்ஸ்ட்டாய்  , ஷேக்ஸ்பியர் , விழியன்  Umanath Selvan, பாவண்ணன்,முனைவர் இரா. மோகனா ஆயிஷா .நடராஜன் , இப்படி பல வித எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியது எனக்கு ஒரு சின்ன சந்தோஷம். (எனக்கு எல்லாம் 40 வயதில் அறிய வந்தவர்களை என் குழந்தைகளுக்கு 11 வயதில் அறிமுகப்படுத்தியது பெரும் மகிழ்வு )

மோனிஷாவிடம் ஒரு நோட்டைத் தர , அவரது பணியின் வேகம் அதை நூலகப் புத்தகங்கள் வழங்கும் ஏடாக்கி, மாணவர் பெயர் புத்தகம் வழங்கப்பட்டது எழுதி கையெழுத்துப் பெற்று விட , தொடர்ந்து வாசித்தலுக்கான களமானது எங்களது ஆங்கில வகுப்பறை , சனிக்கிழமை இப்படியான வகுப்பறையாக மாறியது .

நீங்கள் கேட்கலாம் ..... பாடம் எப்போ நடத்துவீங்க என ... அது இதுவும் 40 மதிப்பெண்களுக்கான கல்வி இணைச் செயல்பாட்டின் ஒரு பகுதிதானுங்கோ .....

ஏற்கனவே சில குட்டித் தங்கங்கள் கதை , கவிதை , ஒவியம் என எழுதி வரைய ஆரம்பித்துள்ளனர். இதெல்லாம் தொடர வேண்டும் என எங்கள் ஒப்பந்தத்தை வலுப்படுத்தினோம் .....
என இங்குப் பதிவு செய்வதில் மகிழ்கிறேன்.

உளவியல் தொடரும்
உமா

No comments:

Post a Comment