Monday, 5 May 2014

7 . கணக்கு வகுப்புகள்

7.கணக்கு வகுப்புகள் .......(தொடர்ச்சி )
                    ஆம்.....அவர்களை என்றுமே பாடப்பொருளால் நான் பயமுறுத்தியது இல்லை...கணக்கை  மிக மிக எளிமையாக எப்படி கற்றுக்கொடுப்பது என ஆராய்ச்சி செய்ததில்லை.ஏன் ன்றால் வகுப்பைத்  திட்டமிடுவது வேறு, செயல்பாடு வேறு, அந்தத்  திட்டமிடலை  அப்படியே செயல்பாடாக  வகுப்பறையில் செயல்படுத்துவது 100% சாத்தியமில்லாதது.
           ஒவ்வொரு குழந்தையும் தனிப்பட்டவர்கள் என்றும், ஒவ்வொருவரும் unique என்பதையும் நான் மிகத் தெளிவாக உணர்ந்தேன்.Notes of lesson -ல் நான் எழுதும் பாடப்பொருளை வேண்டுமானால்  அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க முடிந்தது, ஆனால் கற்பித்தல் முறைகளும்,ஆயத்தம் செய்தலும்மதிப்பீடு செய்வதும் , மீள்பார்வையும்வீட்டுக் கணக்குத் தருவதும் நான் திட்டமிட்டு  எழுதுவது போல் அநேக நாட்களில் வகுப்பறையில் செய்யவே முடியாது. அப்படி அதையெல்லாம்  மட்டும் மனதில் கொண்டு வகுப்பு எடுத்தால், மாணவர்களை திருப்தி படுத்த முடியவில்லை.இது ஒரு போராட்டமாகவே இருந்தது.இது ஆசிரியராக கணக்கு வகுப்பில் எனக்கு என்னாலேயே வரும் பிரச்சனை.உண்மையில் இவையெல்லாம்தான் எனக்குப்  பாடமாக இருந்த.
            நான் ஒவ்வொரு chapters க்கும் எடுத்துக்காட்டுகள்         சொல்லுவதும் அவர்களையே வகுப்பில் பேச வைப்பதும் அவர்களுக்குப் பிடித்தது. அப்படி எ.கா சொல்வதும்
அவர்களுடைய வயதிற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றாற்போல் இருந்தால் மட்டுமே அவர்களுக்குப் புரிந்தது.
           உதாரணமாக அவர்களுக்கு பின்னங்களில் புரிதல் கஷ்டமாக இருந்தது………
 கரும்பலகையில் ,
                         6/7,5/8,3/8......இப்படி சிலவற்றை எழுதி,பகுதியை விட தொகுதி சிறியதாக இருந்தால் தகு பின்னம் .
                        7/3,7/5.3/2,......இப்படி சிலவற்றை எழுதி ,பகுதியை விட தொகுதி பெரியதாய் இருந்தால் தகா பின்னம் .இப்படி விளக்கம் கூறினால்,                          
                     
                   "டீச்சர் ,தகு பின்னம் ,தகா பின்னம் தான் கொஞ்சம் குழப்புதுங்  டீச்சர் " , என்றனர்.
                        அப்போதைக்கு என் மனதில் தோன்றியது இதுதான் .........அது  ,
                        "சரிஅதெல்லாம் விடுங்க…………… இப்போ,யானை மேல மனுஷன் உட்கார முடியுமா ?", என்றேன்.
                        அனைவரும் ஒரே குரலில்,…… " ....முடியுமே…..என்றனர் 
                          "மனுஷன் மேல யானை உட்கார முடியுமா?", ……..என்றேன் ..
                        எல்லோரும் சத்தம் போட்டு சிரித்தனர்......
                       "அது எப்பிடிங் டீச்சர்  முடியும்?"என்றனர் ,
  அதுதானே எனக்கும்  வேண்டும்,........................சந்தோசமாக...,
                       "ஆங், இப்போ புரியுதா,யான மேல மனுஷன் உட்கார முடியும் ,மனுஷன் மேல யான உட்கார முடியாது ,பெரிய எண்ணெல்லாம் யான மாதிரி ,சின்ன  எண்ணெல்லாம் மனுஷன் மாதிரி .......இப்போ சொல்லுங்க,
                       தகு பின்னம்னா  ......யார் சொல்றீங்க ?",என்றேன் .
                        நெறைய பேர் கையத் தூக்கினாங்க ...... ஒருத்தரை மட்டும்.. " எழுந்து சொல்",என்றேன் 
                       "டீச்சர் ...அது...... தகு பின்னம்னா ,கீழ பெரிய நம்பர் வரும்,மேல சின்ன நம்பர் வரும் ...."
                        "very good ",என்றேன் ,
                         "அப்போ,தகா பின்னம்?", என்றேன். அதற்கும் எல்லோர் முகத்திலும் பிரகாசம்……ஒருவரை எழுந்து சொல்லச் சொன்னேன்.
                       "தகா பின்னம்னா டீச்சர் ,மேல யான மாதிரி பெரிய நம்பரும்,கீழ மனுஷன் மாதிரி சின்ன நம்பரும் வரும்",என்றான் ஒரு மாணவன்....
                        "very very good ".......அவ்ளோதான் ....... அதோடு மற்றும் சிலரை, வேறுவேறு தகு பின்னங்கள், தகா  பின்னங்கள் board- ல் எண்களைப் போட்டு அவர்களையே board- ல் பிரித்து எழுதச் சொன்னேன் ....
                      அந்த வகுப்பும் முடிந்தது ,பின்னங்களும் அவர்களுக்குப் புரிந்தது .....
                      இங்கே மாணவர்களுக்கு, என்னதான் நான் பகுதி, தொகுதி  என்று சொல்லிக் கொடுத்தாலும், அவர்களுக்குக்  கீழே,மேலே என்று சொல்லும் எளிய வார்த்தைகளே முதலில் மூளையில் சென்று சேர்ந்தது.
                      இதைப் படிக்கும் வாசகர் கணித ஆசிரியர்களாக இருந்தால், கண்டிப்பாக இதை, இப்படிச்  சொல்லிக்கொடுக்கக்  கூடாது எனக் கருத்து சொல்ல வாய்ப்பு இருக்கிறது.ஆனால் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி கற்பித்தல் முறை கைக்  கொடுக்காது.
                      எனது மாணவர்களுக்கு இந்த உதாரணம் புரிந்து ஏற்றுக் கொண்டார்கள், அதோடு மட்டுமல்ல திரும்ப சொல்லி சொல்லி சந்தோசப்பட்டனர் .
                       அந்த நாளோடல்லாமல் அந்த வருடம் முழுதும், அடுத்த வருடமும் நான் சொல்லாமலே பின்னங்களை நினைவு வைத்திருந்தனர்...அது கண்டிப்பாக அவர்களது வாழ்நாளில் மறந்திருக்க வாய்ப்பில்லை ...
                      ஆகையால் ,கற்பித்தல் முறை என்பது மாணவரின் வயது, அவர்களது வகுப்புச் சூழல் இவற்றை மனதில் கொண்டு ஆசிரியரால் வடிவமைக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து……ஒவ்வொரு வீடும் தனித்தனி மனிதர்களையும்,வேறு வேறு பிரச்சனைகளையும் தன்னுள்ளே உள்ளடக்கியது.ஒரே தீர்வு கைகொடுக்காது அல்லவா?அதுபோல்தான் நம்மாணவரும்  அவர்களது புரிதலும்….,ஒரே பள்ளியில் கூட வேறு வேறு ஆசிரியர்கள் மாறுபட்ட Application-stratergy-ல் தனது மாணவரை அணுகுதல் தேவையாக இருக்கும்…..(மீண்டும் பேசலாம்…)



    


1 comment:

  1. தொடருங்கள்!வாழ்த்துக்கள்!!

    ReplyDelete