Thursday, 14 June 2018

உத்திரமேரூர் அதிசயம்

உத்திரமேரூர்  அதிசயம்
       உத்திரமேரூர் என்றால் கல்வெட்டுக்கள் தான் நமக்கு நினைவு வரும்,இந்தக் கட்டுரையின் மூலம் உங்களோடு வேறு ஒரு செய்தியைப் பகிர்ந்து கொள்கிறேன்.
       காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்தில் 1-3 வார்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்  அறிவியல் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றும் அன்பழகன் பிப்ரவரி 28-ல் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு,QED+நியூட்டன் சர்.சி.வி.இராமன் அறிவியல் மன்றம் இணைந்து பிப்ரவரி 25 ஆம் நாள் நடத்தும் விழாவிற்கு நடுவராக வர ஈரோடு  மாவட்டம், நல்லாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியரான எனக்கு,அழைப்பு விடுத்திருந்தார்.
       ஒரு நாள் முன்னர் தான் சென்னை PSPB மில்லினியம் பள்ளியில் நடந்த Partnership Learning நிகழ்வில் சந்தித்த போது கூறினார். தாம்பரம் வழியாக PSPB செல்லும் போது ஷங்கர் சாரின் மகிழ்வுந்தில் எனக்கும் இடம் தந்து மூவரும் சென்றோம். வழியில் CBSE ரமண மகரிஷி வித்யாலயா பள்ளி தாளாளரும் பள்ளி முதல்வருமான லலிதா சந்திரசேகரன் அவர்களையும் சந்தித்து பிப்ரவரி 25-ஆம் தேதிக்கான விழா நிகழ்ச்சிகளின் நடுவராகக் கலந்து கொள்ள அழைப்பு விடுத்து,என்னையும்,ஷங்கரையும் அவரிடம் அறிமுகம்  செய்து வைத்தார்.
       பின்னர் பிப்ரவரி 25 காலை 9.30 மணிக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பிப்பதால்,என்னையும் பள்ளி முதல்வர் அவர்களொடு இணைந்து கொள்ளுங்கள் எனவும் கூறினார் அன்பழகன். அந்த அம்மையாரும் மகிழ்வுந்தில் வருவதாக்க் கூறி,அவரது தொடர்பு அலைபேசி எண்ணையும் என்னிடம் கொடுத்தார்.பிறகு Partnership programme –ல் கலந்து கொண்டு மாலை 7 மணி அளவில் வீடு திரும்பினோம்..
       பிப்ரவரி 25 ஆம் நாள் காலை 8 மணிக்கு,நான் வண்டலூர் அருகே OMR சாலை இணையும் இடத்தில் காத்திருந்தேன்.லலிதா சந்திர சேகரன் அவர்களை இரண்டு முறை அலைபேசியில் 2 தொடர்புகொண்டு எதிர்பார்த்திருந்தேன். GST சாலையின் காலைபரபரப்பு,வேகம்,மக்கள் நெருக்கம் அனைத்தையும் ரசித்துக் கொண்டு காத்திருந்தேன்.8.20 மணியளவில் அவர்களது மகிழ்வுந்து என் அருகே வந்து என்னையும் உள்வாங்கி, காஞ்சிபுரம் நோக்கிச் சீறியது
       காஞ்சிபுரம் தாண்டி உத்திரமேரூருக்குள் மகிழ்வுந்து பயணிக்க,  அதனுள்ளே லலிதா சந்திரசேகரன் அவர்களுடன் எனது  பள்ளிப்பணி பற்றி உரையாடிக்கொண்டும்,அரசு பள்ளிகளின் தரம்,தற்போதுள்ள நிலை என்று பலவாறு கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டும் வந்தோம்….மேலும் அவர், தானும் அரசு பள்ளியில் தான் பயின்றதாகக் கூறினார்,அன்பழகன் போன்ற ஆசிரியர்களை சந்திக்கும் போது மகிழ்ச்சியாக எண்ணுவதாகவும் கூறினார்.
      அவரோடு அவரது பள்ளி ஆசிரியர் லக்ஷ்மி என்பவரும்உடன் வருகிறார் .மேலும் தற்போதுள்ள சமச்சீர் புத்தகங்களின் தரம்,CCE மதிபீட்டு முறை என எங்கள் உரையாடல் விரிந்து கொண்டே செல்ல, உத்திரமேரூர் வந்துவிட்டது.
      எனது சிறுவயதில் வரலாற்றுப் பாடங்களில் உத்திரமேரூர் என்ற இடத்தின் பெயரை கல்வெட்டுக்களுக்கான தலைப்பின் கீழ் படித்திருக்கிறேன்.அப்போதே என் மனதில் கல்வெட்டாகப் பதிந்ததுதான் இந்த இடம்.இன்று அங்கே இருக்கும் ஓர் பள்ளியில் நடைபெறும் விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்தது, இளைய பிராயத்தின் வரலாற்றுப் புத்தகங்களில் நினைவு கூர்தலை ஏற்படுத்தி, மன மகிழ்ச்சியைத் தந்தது.
        தனது பள்ளியில் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருப் பதால் அண்டைப் பள்ளியான பாலர் நேசன் நடுநிலைப்பள்ளியில்  விழா ஏற்பாடு செய்திருந்தார் அன்பழகன் ஆசிரியர்.இவரைப் பற்றிக் கூறவேண்டுமானால் பக்கங்கள் போதாது.இருப்பினும் ஒரு அறிமுக உரை,சமீபத்தில் உலக அளவில் ஜப்பான் நாட்டில் நடைபெற்ற அறிவியல் பயிற்சிக்காக, நம் தமிழக அரசால் பரிந்துரை செய்யப்பட்டு,  ஜப்பான் சென்று 45 நாட்கள் தங்கி பயிற்சி எடுத்துக் கொண்டு வந்தவர்.
       அந்தப் பயிற்சியின் சிறப்புகள் ஏராளம், உலக அளவில் 12 ஆசிரியர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட, அவர்களுள் ஒருவர் இந்தியர்,அந்த ஒரே இந்தியராக நம் மாநிலத்திலிருந்து சென்றவர் தான் இந்த அன்பழகன் அறிவியல் ஆசிரியர். புதிய தலைமுறைப் புத்தகத்தின் கல்வி இதழின் நான்கு பக்கங்களை  அலங்கரித்து  இருந்தார்.
       ஜப்பானில் பெற்ற பயிற்சி அனுபவங்களால்,சுட்டி விகடன் கனவு ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமையும் இவருக்குண்டு .இவ்வளவு சிறப்புகளும் எதனாலே என்றால், பள்ளிக் குழந்தைகளுக்காகத் தொடர்ந்து பல்வேறு நிலைகளில் பணி புரிவதாலும், அவர்களுக்குக் கல்வி புகட்ட கணினி வழி நுட்பங் களைக் கற்றுக் கொடுத்து பள்ளியை Update செய்து கொண்டே இருப்பதாலும் தான்.
       சரி,பிஃப்ரவரி 25க்கு வருவோம்,பாலர் நேசன் நடுநிலைப் பள்ளி பெயரிலேயே குழந்தைகளுக்கு நேசம் மிகுந்ததாய் இருந்தது. உள்ளேசென்று பார்த்து, அந்த நாள் முழுவதும் அவர்களோடே இருந்த பொழுது நேசமான பள்ளியின் பொருள் ஊர்ஜிதமானது.
        பள்ளி வளாகத்தை அடைந்த உடன் மகிழ்ச்சி, வகுப்புகளில் ஆசிரியர்கள் அவரவர் பணி செய்ய, தலைமை ஆசிரியர் எங்களை வரவேற்று,பள்ளி பற்றிக் கூறிக் கொண்டிருக்கும் போது,பள்ளி மாணவ மாணவிகளில் சிலர் அவர்களது பணி நிமித்தம் அந்த அறைக்குள் வருவதும் போவதுமாக இருந்தனர். அப்படி வரும்போது ஒருவர் தவறாமல் (அனைத்து) புதிய நபர்களான எங்களுக்கும் வணக்கம் சொல்லி புன்முறுவலுடன் வெளியேறினர்.
       ஒரு ஐந்து பேர் அடங்கிய மாணவர் குழு மைதானத்தின்  ஒரு புறம் அந்நாளின் விழாவை முன்னிட்டுக் கூடாரம் அடித்து சாமியானா போடும் வேலையில் மும்முரமாக இருந்தனர். அதைப் பார்த்த லலிதா மேடம் ஆனந்தப்பட்டும், அதேவேளையில் ஆதங்கமும்  அடைந்தார்.
       ஆனந்தம் என்னவெனில்,பணிச்சுமை என்று புறந்தள்ளாமல் பள்ளி மாணவரே இந்த வேலைகளில் ஈடுபடுகின்றனர்.நிலத்தில் ஆணி அடிக்கும்போது கூட,சரியான கோண அளவுகளில் அவர்கள் பொருத்திதான் அடிக்க வேண்டும். அவர்களுக்கேத் தெரியாமல் கணிதபாடத்தில் கோணங்கள், அளவீடுகள்,கூம்பு வடிவம் என கற்றுக் கொள்கின்றனர் என ஆனந்தப்பட்டார்.
       அதே சமயம் ’’எனது பள்ளி மாணவரிடம் இது போன்ற பணிகளைச் செய்ய, தைரியமாகப் பணிக்க, இன்றைய கல்விமுறை சூழல் அமையவில்லை’’ எனவும் ஆதங்கப்பட்டார்.விழா நிகழ்ச்சி களைத் தொடங்க ஆரம்ப முன்னறிவிப்பை சிற்றுரையாகத் தந்து தொடங்கி வைத்தார் அன்பழகன் ஆசிரியர்.
       எனக்குப் பேச்சுப் போட்டிகளை மதிப்பிடும் நடுவர் பணி தரப்பட்டது.அன்றைய நாளின் சாரம் இதுதான்………………………………………………………..
      ”அவரது உத்திரமேரூர் ஒன்றியத்தில் ஆறு பள்ளிகளிலிருந்து குழந்தைகள் போட்டிகளில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தனர் .ஒருவர்-இருவர் அல்ல,ஐம்பதுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில்,… பலதரப்பட்ட சிந்தனைகளை ஒன்று குவித்து ஓரிடத்தில் சந்திக்க வைப்பதே ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.ஆனால் அவர் 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடத்தில் “ஒளியியல்” என்ற தலைப்பைத் தந்து அனைவருக்கும் வாழ்க்கை ஒளியைப் பெற வழிகாட்டி இருந்தார்.
        அருகாமைப் பள்ளி ஆசிரியரின் உதவி பெற்றிருந்தாலும், பொறுப்பேற்று அத்துணை நிகழ்வுகளையும் ,அவர் ஒருவரே முன்னின்று,அழகாக அணிவகுத்து,நேர்த்தியாய், நேரம் வகுத்து போட்டிகளடங்கிய விழாவை முடிவுக்குக் கொண்டு வந்தார்.அவரது QED+நியூட்டன் சர்.சி.வி.இராமன் அறிவியல் மன்றச் சிந்தனை தனது வழித்தடத்தில் நூற்றுக்கணக்கான குழந்தைச் செல்வங்களை “ஒளி” பற்றியத் தேடலைக் கற்றுக் கொடுத்துள்ளது.எங்கிருந்து முளைத்தன இத்தனை சிறகுகள் ?............ஆம்…………….சிறகெனக் குறிப்பது குட்டிக் குழந்தைகளின் சிந்தனைத் தேடல்களையே….
        6 முதல் 8 வகுப்புகள் வரையுள்ள நடுநிலைப் பள்ளிக் குழந்தைகள் “ஒளி” பற்றி ஒரு ஆராய்ச்சிப் புத்தகத்தையே எழுதும் அளவிற்கு தங்கள் தேடலை வரிசைப்படுத்தியது,எனக்குமட்டுமன்று வந்திருந்த அத்துணை நடுவருக்கும் வியப்பே.
       ஆம்,பேச்சு,எழுத்து, வினாடி-வினா,ஓவியம் மற்றும் அறிவியல் உபகரணம் தயாரித்தல் என ஐந்து வெவேறு தலைப்புகளிலும் “ஒளியியல்” என்ற அறிவியல் பார்வையைப் பதித்து வெவ்வேறு கோணங்களில் தங்கள் கருத்துகளையும் கண்டுபிடிப்புகளையும் பறை சாற்றினர் உத்திரமேரூர் ஒன்றிய சிறார்கள்.
       அறிவியல் கருத்துரு என்றாலும் மொழிப்புலமையை பேச்சு,கட்டுரைப் போட்டி இவற்றிலும்,கலைத்திறமையை ஓவியப்போட்டியிலும்,ஒற்றுமை-புரிதல்-சமூக இணக்கம் இவற்றை வினாடி-வினாப் போட்டியிலும்,மேற்கண்ட அத்தனைத் திறன்களோடு கணித அறிவையும் ஒருங்கிணைக்க அறிவியல் உபகரணப் போட்டியிலும் கொண்டு வந்து,ஒரு எடுத்துக்காட்டான மாணவ சமுதாயத்தை உருவாக்க, செயல்களில்  இறங்கியுள்ள அவரது பணிக்கு வாழ்த்துக்கள் கூறியே ஆகவேண்டும்.
         மேலும் பாலர் நேசன் பள்ளியைப் பற்றிக் கூற வேண்டுமானால்,காலை 9.30 மணிக்கு அவரது பள்ளியில் நுழைந்ததிலிருந்து மாலை 3.45-க்குப் புறப்படும் வரை சிறப்புகள் மட்டுமே.விருந்தினர் உபசரிப்பு,பள்ளி வளாகத்தூய்மை,மாணவரது அன்பான விசாரிப்புகள்,பள்ளி தளாளரின் பரிவான பேச்சு,அனைத்து ஆசிரியர்களின் ஒத்துழைப்பு,விழா வடிவமைப்பு,ஒருங்கிணைப்பு எனக் கூறிக்கொண்டே போகலாம்
          அங்கே தாளாளரின் துணைவியார் லில்லி என்பவரைச் சந்தித்தோம்.எந்தக் குழந்தையாக இருந்தாலும் ஆங்கிலக் கற்றலில் எவ்வளவு பின் தங்கியவராக இருந்தாலும் அவர்களைக் கற்றலில் ஈடுபடுத்தி நன்றாக ஆங்கிலம் படிக்க வைத்து விடுவார்கள் என, தாளாளர் கூறினார்.தற்போது லில்லி அம்மா தோற்றத்தில் முதுமையடைந்து விட்டார்,
            ஆனால் அவரது இளமையை எண்ணங்களில் கண்டேன்.   என்னோடு பேச்சுப் போட்டியின் நடுவராக இருந்த அவர்,மாணவரது குரல்,கருத்துகள்இவற்றை  வெளிக் கொணர அவர்களை Motive செய்து கொண்டே இருந்ததும்,அவரை விட அனுபவத்திலும் வயதிலும்சிறியவராக இருந்தும் என்னோடு அவரது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு பேச்சுப் போட்டி மாணவர்களை தேர்வு செய்வதில் அவர் காட்டிய அக்கறை,மாலை விழா முடிவில் அவரது பள்ளி மாணவிகள் அவரே எழுதிய பாட்டிற்கு, அவரே ஒலிபெருக்கியில் பாட,நடனமாட பயிற்றுவித்துள்ள விதங்களில் அவரது சுறுசுறுப்பு,மாணவருக்கு வாழ்த்துரை வழங்கி சிறப்புரை தரும்போது அவர் அளித்த ஒழுக்கம் பற்றிய டெமோ,உடல் அசைவுகளின் மூலம் அவரளித்த ஒழுக்கம் விழுப்பம் தரலான்………குறள் விளக்கம் இவை அனைத்தும் நெஞ்சில் நின்றன.
          அதே போன்று பள்ளிக் குழந்தைகளின் திறமைகளை சரியான தருணத்தில் வெளிக்கொணர அவர்கள் பின்பற்றும் வழிகளையும் போட்டிகளின் முடிவுகளிலிருந்தும்,மாணவரின் பங்கேற்றலில் இருந்தும் கண்டு கொண்டேன்.
          அன்பழகனின் முயற்சி அவரது பள்ளி சிறாருக்கு மட்டுமின்றி,அவரது சுற்று வட்டாரப் பள்ளிக் குழந்தைகளுக்கும் தோன்றின் புகழொடு தோன்றுக………என வளர வழிகாட்டியுள்ளது.
போட்டிகள் முடிந்து மாலை பரிசளிப்பு விழா,அனைத்து மாணவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள்,முதல் மூன்றுஇடங்களைப் பெற்றவருக்கு தலா ஒரு சான்றிதழ்,மெடல்,புத்தகப் பரிசுகள்,பேனாப் பரிசுகள் என அத்துனை நிறைவாய் ஒரு விழாவைத் திருமணம் போல் தடபுடலாய் நடத்தி இருக்கிறார் அன்பழகன்.
         அவரது நண்பர் பரிசளிப்பு விழா நிகழ்ச்சியை ஓருங்கிணைத்து  அடுத்தடுத்து அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார்.அறிவியல் பட்டதாரி ஆசிரியரான அவர் இடையிடையே ஒலிபெருக்கியில் அறிவியல் ஆராய்ச்சியாளர் சிலரின்  வாழ்க்கை வரலாறுகளின் சுவாரஸ்யமான பகுதியை சுருக்கமாகக் கூறிக்கொண்டே இருந்தது,அவரது வாசிப்பின் ஆழத்தை நமக்குக் காட்டியது.
         அதோடு இந்தப் போட்டிகளை வழக்கமாகத் தொடர்ந்து நடத்தி வருவதற்கு ஊக்கம் தரும் உதவித் தொடக்க அலுவலர் அந்த ஒன்றியத்தின் வளர்ச்சிக்கு இந்த மன்றங்களின் செயல்பாடுகளின் முக்கியத்துவத்தை உற்சாகத்தோடு பகிர்ந்தார்.
          நிகழ்ச்சிக்கு வந்திருந்த என்னைப் போன்ற புற ஆசிரியர்கள், QED நிறுவனத் தலைவர் என்று அனைவரையும் ”நூலும்(book) சாலும்(shawl)”தந்து கௌரவித்து,மாணவருக்கு வாழ்த்துக்கள்  வழங்கி எங்களுடைய கருத்துக்களையும் நாங்கள் வெளிப்படுத்த,திருவிழா போன்றதோர் நிகழ்வு முடிவுக்கு வந்தது.ஆனால் அந்த நாளின் சுவை மூளை செல்களுக்குள் இன்னும் சுவைக்கிறது.

                                               எழுத்து :        சு.உமாமகேஸ்வரி,
                                                                      பட்டதாரி ஆசிரியர்(கணக்கு),                                                            
                                                                      அரசு மேல்நிலைப் பள்ளி   ,
                                                                       நல்லாம்பட்டி,
                                                                        ஈரோடு மாவட்டம்
*************************************************************************************************

No comments:

Post a Comment