Thursday, 26 December 2019

காமதேனு - ஆசிரியர் சங்கங்கள்

ஆசிரியர் சங்கங்கள் செய்யும் ஆதிக்கங்கள்  

தமிழக அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரம் , கற்றல் - கற்பித்தல் குறித்த பிரச்சனைகளைப் பற்றி பேசும் போது ,   ஆசிரியர் சங்கங்கள் குறித்து தவிர்த்துவிட்டு நம்மால் பேச முடியாது. ஆம் ஒரு காலத்தில் சுமார் 30 , 40 வருடங்களுக்கு முன்பிருந்த ஆசிரியர்களின் பொருளாதார நிலை வேறு. இன்றைய பொருளாதார நிலை வேறு. இந்த மாற்றங்களிலும் சரி, கல்வி நிலையின்  வளர்ச்சி , கல்வியின் தரத்தில் வீழ்ச்சி எல்லாவற்றிற்கும் ஆசிரியர் சங்கங்களுக்கு மிகுந்த பங்குண்டு என்றால் மிகையாகாது. 

சங்கங்களின் வலிமை

கல்வித் துறையின் அத்தனை அதிகாரிகளும் , துறையின் செயல்முறை முடிவுகளை ஒரு நிமிடம் யோசித்து தொடரவோ நிறுத்தவோ செய்கின்றனர் என்றால் அதன் பின்னர் இருப்பது சங்கங்களின் தலையீடாக இருக்கும் . ஆசிரியர் சங்கங்கள் தங்கள் உயர்ந்த சிந்தனை ,வழிகாட்டுதல்களால் அனைவரிடமும் மிகுந்த மரியாதை பெற்றிருந்த காலம் என ஒன்று இருந்தது. ஆனால் இன்று அவற்றின் மீது நம்பிக்கை இழந்து வருகின்றனர் ஆசிரியர்கள் . தனது தார்மீக வலிமையை இழந்து,  அரசால் அச்சுறுத்தப்பட்டு வரும் நிலைக்கு ஆளாகி இருக்கின்றன ஆசிரியர்கள் சங்கங்கள். அதற்குக் காரணமும் சங்கங்களின் செயல்பாடுகளே. ஏன் இந்த மாற்றங்கள் ? இழி நிலைகள் ? ஆசிரியர் சங்கங்களின் உண்மையான பணி என்னவாக இருக்க வேண்டும் ? அது என்னவாக இருந்து வருகிறது சற்றே ஆராய்வோம் .

ஆரம்ப காலங்களில் ஆசிரியர் சங்கங்கள்

 

இன்றைக்கு வாழும் மூத்த கல்வியாளர் முனைவர் ச.சீ .இராஜகோபாலன்  அவர்கள் உட்பட பலரும் சங்கங்கள் உருவான காலகட்டங்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் ஆசிரியர்கள் நலன் கருதி தங்களை ஈடுபடுத்தி பொறுப்புடன் செயல்பட்டு வந்துள்ளனர். அதன் விளைவுகளாக பல முன்னேற்றங்கள்  நிகழ்ந்துள்ளன . தொழிற் சங்கங்கள் உருவாகி தொழிலாளிகளின் வாழ்க்கைக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தது போலவே , ஆசிரியர்களாகப் பணிபுரியும் லட்சக்கணக்கான ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பாக எத்தனையோ நலத்திட்டங்களை , அரசாணைகளைப் பெற்று கோலோச்சியிருந்திருக்கின்றன சங்கங்கள். 

வயதில் மூத்த சங்கப் பொறுப்பாளர்களிடம் உரையாடும் போதும் அல்லது அந்த சங்கங்களில் அப்போது உறுப்பினர்களாக இருந்து தற்போதும் உறுப்பின்களாக இருக்கும் ஆசிரியர்களிடம் பேசும் போதும் அவர்கள் கூறுவன.அதன் உண்மைத் தன்மை , போராட்ட குணம் , நேர்மை , தன்னலமற்ற அணுகு முறை , ஆசிரியர் நலன் சார்ந்த செயல்பாடுகள் , தியாகம் , கூட்டு வலிமை இவை பற்றி எல்லாம் பெருமையாகவும் அன்றைய சங்கங்களின் உறுதித் தன்மை குறித்தும் பகிர்கின்றனர். 

தற்கால நிகழ்கால ஆசிரியர் சங்கங்கள் 

ஆசிரியர் சங்கங்கள் தன்னலமில்லாது  போராடி சம்பள உயர்வு, நமக்கான உரிமைகள், சலுகைகளை பல தியாகங்களைச் செய்து பெற்றுத் தந்துள்ளன என்பதெல்லாம் மறுக்கவோ மறக்கவோ முடியாது .

ஆரம்பத்தில் மிக நன்றாக இயங்கிக் கொண்டிருந்த சங்கங்கள், நாட்கள் செல்லச்  செல்ல பல ஆசிரியர் சங்கங்களாக உருவெடுத்த பின்தான் ஒற்றுமை இன்றி சுயநலத்தோடு செயல்பட ஆரம்பித்து விட்டன. 

ஒவ்வொரு பாடத்திற்கும் சங்கம், அவர்களுக்குள்ளேயே நீ பெரிதா, நான் பெரிதா என்ற போட்டி. இதனாலேயே மதிப்பையும், நம்பிக்கையையும்  இழந்து விட்டன. மேலும் சில சங்க உறுப்பினர்கள் சங்கத்தை, தம் சொந்தப் பிரச்னைகளை சமாளிக்கவும், சங்கத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு ஒழுங்காக வேலை செய்யாமல் ஏமாற்றிக் கொண்டு, தட்டிக் கேட்பவர்களை ஏதாவது ஒரு பிரச்னையில் மாட்டிவிட்டு தங்களை முக்கியப்  பிரமுகர்களாக காட்டிக்கொள்கின்றனர். ஆசிரியர்களின் உடல், மனம் சார்ந்த எவ்வித பாதிப்புகளையும் யாரும் கண்டுகொள்வதில்லை.உயிர் போகும் சூழ்நிலையிலும் ஆசிரியர்களுக்காக பேசுபவர்கள் யாருமில்லை என்பதே மிக வருத்தமான உண்மை. என்கின்றனர் ஆசிரியர்கள் . இப்படியாக தற்கால சங்கங்கள் வலம் வருகின்றன. 

எந்தக் கொள்கைப் பிடிப்பும் இல்லாமல் , நேர்மையற்ற வழிகளில் இயங்குபவையாக இருக்கின்றன.

எத்தனை எத்தனை சங்கங்கள் ஆனால் வீழ்ச்சிகள் மட்டுமே 

சங்கப் பிரதிநிதிகளுக்குள் போட்டி மனப்பான்மை , ஈகோ பிரச்சனை , ஒற்றுமையின்மை இவற்றின் விளைவே இன்று 50க்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்கங்கள் தனித்தனியாக உருவெடுத்துள்ளன .

கொள்கைப் பிடிப்புடன் இல்லாமல் நடுநிலை காக்காமல் சங்கங்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் எண்ணிக்கையைக் கூட்டியதே அன்றி சங்கங்களின் வலிமையை அல்ல .

ஆம் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் , ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் இப்படி இரு பிரிவுகளில் சங்கங்கள் . ஆரம்பப் பள்ளி , தொடக்கப் பள்ளி இரண்டும் ஒரே பொருளைத் தந்தாலும் வேறு வேறு சங்கங்கள் . பட்டதாரி ஆசிரியர்களுக்கென்று தனி சங்கங்கள் , தமிழாசிரியருக்கென தனி சங்கங்கள் , இப்படியே ஒவ்வொரு பாட வாரியான பெயரில் சங்கங்கள் , முதுகலைப் பிரிவிலும் இப்படியே . தலைமை ஆசிரியர்களுக்கென தொடக்க , நடுநிலை , உயர் தொடக்க நிலை , உயர்நிலை , மேல்நிலைப் பள்ளிகள் என பல பிரிவு சங்கங்கள் , உடற்கல்வி ஆசிரியர்களுக்கென  சங்கங்கள் , பதவி உயர்வு பெற்றவருக்கென சங்கங்கள் , மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கென சங்கங்கள் , சிறப்பு ஆசிரியர்களுக்கான சங்கங்கள் ,ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் , ஓய்வு பெற்ற மற்ற பணி நிலையில் உள்ள ஆசிரியர்கள் என பல்வேறு பிரிவுகளில் ஆசிரியர் சங்கங்கள் இயங்கி வருகின்றன .4 எருதுகளும் ஒரு சிங்கமும் என்ற கதையில் வருவது போல் இவ்வளவு பிரிவினை இயல்புடைய உதிரிகளாக இயங்கும் ஆசிரியர்களை அரசு தன் போக்குக்கு ஆட்டுவிக்கின்றது என்றால் மிகையாகாது.

போராட்டங்களில் ஆசிரியர் சங்கங்களை தோற்கடித்த அரசும் மக்களும் 

போராட்ட காலங்களில் ஒன்று சேரும் சங்கங்கங்கள் தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு முன் வைப்பதில் காட்டும் தீவிரங்களை மாணவர் சார்ந்த நலன்களை போராட்டக் கோரிக்கைகளாக அழுத்தமாகக் காட்ட வில்லை என்று தான் கூற வேண்டும். ஒரு தலைமுறை வளர்ச்சியில் ஆசிரியர்கள் ஊதியம் உயரக் காரணமாக இருந்த சங்கங்கள் தரமான கல்வியை பள்ளிகளில் வழங்கி அரசுப் பள்ளிகளின் தீவிர வளர்ச்சிக்கும் காரணமாக இருந்திருந்தால் கடந்த வருடம் நடந்த அரசு ஊழியர்களின் போராட்டத்தில் ஆசிரியர் சங்கங்கள்  கடுமையாக தோல்வியைத் தழுவி இருக்க வாய்ப்புகள் இல்லை. மக்களின் பார்வையில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் என்றாலே ஊதியத்திற்கும் ஊதிய உயர்வு உள்ளிட்ட பணத் தேவைகளுக்கானது என்ற கருத்தை ஆழமாகப் பதிவு செய்ய ஆசிரியர்களே காரணமாகிவிட்டனர். அதனாலேயே பள்ளி கட்டமைப்பு உட்பட பள்ளிகளில் ஏராளமான பிரச்சனைகள் இருந்தாலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சரியில்லை , ஆகவே சம்பளம் அதிகம் என்ற கருத்தை பொதுப் புத்தியில் உருவாக்கி வைத்துள்ளனர்.ஊடகங்களும் இவற்றில் தங்கள் பங்குக்கு ஆசிரியர் சங்கங்கள் குறித்து எதிர்மறைக் கருத்துகளை மக்கள் மத்தியில் விதைத்துள்ளன. இவற்றைக் களையும் நோக்கில் எந்த முயற்சிகளையும் ஆசிரியர் சங்கங்கள் எடுப்பதில்லை என்பதைத் தான் நாம் இங்கு பதிவு செய்கிறோம். 

பெற்றோர்களை விட்டு விலகிய ஆசிரியர்கள் , தேர்வுக்கு மட்டுமே மாணவரைத் தயார்படுத்த தில் முனைப்பு காட்டி விட்டு நல்லுறவை மாணவரிடம் ,பெற்றோரிடம் இழந்து விட்ட ஆசிரியர்கள் உறுப்பினர்களாக இருந்து எதையும் சாதிக்க இயலவில்லை. 

ஆசிரியர்களுக்கே பாதுகாப்பு தராத சங்கங்களும் பொறுப்பாளர்களும் 

நடந்து முடிந்த போராட்ட நேரங்களில் கூட சங்கப் பொறுப்பாளர்கள்  தலைமறைவு ஆகியதும் , உறுப்பினர்கள் பலரும் காவல் துறையால் சிறை சென்றதும் , தண்டனையாக 17 B பெற்றதும் சில மாவட்டங்களில் பணி மாறுதலே ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டதும் என அடுக்கடுக்கான பிரச்சனைகளுக்கு சங்கங்களால் தீர்வு கிடைக்கவில்லை.  

சங்கத்தின் பொறுப்பாளர்களுக்கு மட்டுமே நன்மை செய்கிறது. உறுப்பினர்கள் ஆண்டுதோறும் சந்தா கட்டுவதற்கே உண்டு என்ற குற்றச் சாட்டுகளும் உண்டு. 

சங்கங்களை, மாநிலம் , மாவட்டம், ஒன்றியம் என அனைத்து தரப்பிலும் பொறுப்பாளர்களின் சுய லாபத்திற்காகவும் தன்னை முன்னிலைப் படுத்தவும் பயன்படுத்துகின்றனர்.

ஆசிரியர்களின் நலத்தை மட்டுமே முக்கியமாக நினைத்து தோற்றுவித்த சங்கத்தலைவர்கள் இருந்தார்கள். ஆனால் இன்றைக்கு அடிப்படைத் தேவைகளுக்கு கூட ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு தர இயலாத சங்கங்கங்களாக மாறி விட்டன .

சங்கங்களின் போக்கில் வெளிப்படையான விமர்சனங்கள் என்னென்ன ?

மாநிலப் பொறுப்பில் இருப்பவர்கள் அடிக்கடி பள்ளிக்கே செல்லாமல் கல்வித் துறை இயக்குநர்கள் அலுவலகத்தில் அடிக்கடி கூட்டம் கூட்டமாக வருவதை தற்போதைய பயோ மெட்ரிக் முறை குறைத்துள்ளது . 

 ஓராசிரியர் , ஈராசிரியர் பள்ளிகளில் கற்றல் -

கற்பித்தலில் இருக்கும் சிக்கல்கள் பற்றி இவர்களால் எதுவும் மேலிடம் எடுத்துச் செல்ல இயலவில்லை .தனியார் பள்ளிகளின் அதீத வளர்ச்சியை ஒழிக்க இந்த ஆசிரியர் சங்கங்கள் என்ன முயற்சிகளை எடுத்தன ? அரசின் தனியார் மயக்  கல்விக் கொள்கைகள் குறித்தும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்தும் ஆசிரியர் சங்கங்கள் பெரிய அளவில் மாற்றங்களுக்கு முயலவில்லை. தமிழ் வழிக் கல்வி என்ற ஒன்று அழிந்து விட்ட சூழலை தமிழகப் பள்ளிக் கல்வித்துறையில் உருவாக்கியதில் இந்த சங்கங்களின் மெளனமான கடந்து போன பார்வைகளுக்கு பெரும் பங்குண்டு .இது மட்டுமா ? பள்ளிகளில் பல ஆயிரம் கோடிகளில் ஆரம்பிக்கப்படும் அரசின் திட்டங்கள் பலவும் நீர்த்துப் போவதைக் கண்காணிக்கவோ நல்வழிப்படுத்தவோ சங்கங்கள் பொறுப்பு எடுத்துக் கொள்வதில்லை.

இன்று பட்டதாரி ஆசிரியர்களது நியமனமே இல்லை என்ற அறிவிப்பை  கல்வித் துறை தருவதற்கு 20 , 30 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நிரவலில் வெளியேறுவதற்கு என எல்லாவற் றிற்கும் சங்கங்கள் பொறுப்பேற்க வேண்டும் .பல பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் செய்யும் நிதி குறித்த ஊழல்கள்  பற்றிய பிரச்சனைகளையும் சங்கங்கள் கவனம் கொள்வதில்லை .

ஆசிரியர்களின் பணி மாறுதல் , தேர்வுப் பணிகள் , தேர்தல் பணிகள் , ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் , பதவி உயர்வு  என எல்லாவற்றிலும் சங்கங்களின் தலையீடுகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ இருப்பதைக் காணலாம் . சில ஆசிரியர்கள் சங்கங்களின் பெயர்களைக் கூறிக் கொண்டு பள்ளிகளின் பணிகளில் தொய்வு காட்டுவதும் , விடுப்பு எடுப்பதில் ஏமாற்று வேலை செய்வது , வகுப்பறைகளுக்கே செல்லாமல் கற்பிக்காமல் சொந்த வேலைகளுக்கு பள்ளி நேரத்தைப்  பயன்படுத்துவது என அறமற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். பல பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் சங்கப் பொறுப்புகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களுக்கு மட்டும் சலுகை அளித்து மற்றவர்களை புறக்கணிக்கும் நிலைகளும் உண்டு. துறை ரீதியாக தண்டனை பெறும் குற்றங்கள் புரியும் ஆசிரியர்களையும் காப்பாற்றி விடும் வேலைகளையும் சங்கப் பொறுப்பாளர்கள் செய்வதால் தவறுகள் பெருகுகின்றன. 

இவை மட்டுமன்றி , சங்கப் பொறுப்பிலுள்ள ஆண் ஆசிரியர்கள் , சங்கத் தலைமைகளுடன் நெருக்கமான ஆண் ஆசிரியர்கள் பள்ளிகளில் பாடப்பிரி வேளை (Time table) பணிகளில் கூட பெண் ஆசிரியர்களுக்கு அதிக பணி தருவது , பணிச் சுமைகளை பெண் ஆசிரியர்கள் தலையில் கட்டுவது , எதிர்த்துக் கேட்டால் அதிகமாக ஒடுக்குதலுக்கு உள்ளாகின்றனர். இது போல பல ஒடுக்கு முறைகளில் சங்கங்களின் தலையீடுகள் தொடர்புடையதாக இருக்கின்றன. சங்கங்களின் பொறுப்புகளில் பெரும்பாலும் பெண்களுக்கு வாய்ப்புகள் தரப்படுவதில்லை. இது மட்டுமா , நேர்மையாக பார்வையிடச் செல்லும் கல்வித்துறை அதிகாரிகளுக்கே பிரச்சனை தரும் இழி செயல்களையும் சங்கங்களின் உதவியால் ஆசிரியர்கள் செய்கின்றனர். ஆகவே பள்ளிக் கல்வித் துறை உயரதிகாரிகள் கூட சங்கங்களிடம் மிக கவனமாக நடந்து கொள்வதாகத் தெரிகிறது. 

தற்போது மத்திய அரசு வெளியிட்ட வரைவுக் கல்விக்  கொள்கை குறித்து கூட சில சங்கங்கள் பிரச்சாரம் , எதிர்ப்புக் குரல் , விளக்கக் கூட்டம் என முன்னெடுக்க மற்ற அனைத்து  சங்கங்களும் அது குறித்த புரிதலே இல்லாமல் இருக்கின்றன.

ஆசிரியர் சங்கங்கள் எப்படி தங்களை மாற்றிக் கொள்ளலாம் ?

மாணவர் நலன் சார்ந்து போராட்டங்களை முன்னெடுக்கலாம். ஆசிரியர்களை அச்சுறுத்தாமல் நல்ல சூழலை உருவாக்கலாம் , அரசின் கல்விக் கொள்கைகளை  குழந்தைகள் நலன் சார்ந்து மக்கள் நலன் சார்ந்து ஏற்புடையதா என ஆராய்ந்து பொது மக்களிடம் பெற்றோரிடம் எடுத்துச் செல்ல வேண்டும் .போராட்ட வடிவங்களை மாற்றலாம் . கற்பித்தல் பணி , பள்ளிப் பணிகளை சரிவர செய்து பள்ளி நேரங்களில் அலுவலகம் , அதிகாரிகளை சந்திப்பது இவற்றைத் தவிர்க்கலாம் . நேர்மையான முறையில் எல்லோரையும் சமமாக பாவிக்கும் வெளிப்படைத் தன்மையுடனான ஜனநாயக சங்க நடைமுறைகளைப் பின்பற்றிட வேண்டும். ஆசிரியர் நலனுடன்  மாணவர் நலன் சார்ந்தும் ஆசிரியர் சங்கங்கள் உருவானால் எல்லோருக்கும் நல்லது. 

உமா

மாநில ஒருங்கிணைப்பாளர்

பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் .



1 comment:

  1. ஆசிரியர் சங்கங்கள் பற்றிய உங்கள் கருத்துக்களை துணிவுடன் பதிவு செய்ததற்கு பாராட்டுக்கள்

    ReplyDelete