Friday, 19 June 2020

சமச்சீர்_கல்விப்_பயணம் : 4

சமச்சீர்_கல்விப்_பயணம் : 4

புதிய பாடநூல் பயிற்சிக் கையேடு 

 தயாரிப்புப் பணி (முதல் பணி )

சென்னை டிபிஐ வளாகத்தில் அமைந்திருந்த DTERT (தற்போதைய SCERT ) இன் இயக்குநராக அப்போதிருந்த திருமதி 

ஜெ. உமாமகேஸ்வரி , மற்றும் இணை இயக்குநர் முனைவர் பெ. பெருமாள் சாமி அவர்கள் கீழ் தான் இப்பணி நடைபெற்றது. இந்தப் பயிற்சிக் கையேட்டின் மேலாய்வாளராக இவர்கள் இருவருமே இருந்தனர். 

DTERT இன் கீழ் இயங்கிய நீலகிரி  மாவட்ட டயட் டான

கோத்தகிரி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தை அடைந்த அனுபவமும்  அங்கு சந்தித்த விரிவுரையாளர்களும் அவர்களுடனான இரு நாட்களுக்கான பணிமனை அனுபவமும் எனக்கு முற்றிலும் புதுமையாகவும் உற்சாகமாகவும் இருந்தது. பல மாவட்டப் பயிற்சி நிறுவனங்களிலிருந்து தமிழ் , ஆங்கிலம் , கணக்கு , அறிவியல் , சமூக அறிவியல் பாடங்களுக்கான  விரிவுரையாளர்கள் அங்கு வந்திருந்தனர். ஒவ்வொரு குழுவிலும் ஒரு ஆசிரியர் மட்டும் இருப்பார்கள். எனக்கு சமூக அறிவியல் குழுவில் தான் பணி. எனக்கு மிக விருப்பமான வரும் நல்ல வழிகாட்டியுமாக களியாம் பூண்டி விரிவுரையாளர் நடராஜன் ஸார் தான். ஏனெனில் நிறைய விளக்கங்களை பல நூல்களிலிருந்து எடுத்தாள்பவர் . திடீர் திடீரென பல செய்யுள்களைப் பாடுவார். இடையிடையே திண்பதற்கு ஏதாவது டயட் மாணவர்கள் கொண்டு வந்து தருவார்கள். அப்படி ஒரு முறை தேனி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பணிமனையில் இருக்கும் போது , திராட்சைத் தோட்டங்களிலிருந்து  திராட்சைப் பழங்கள் கொண்டு வர , அதை எடுத்து சாப்பிடும் முன், இது ஏன் புளிக்குது என்று பதில் சொல்லுங்கள் , பழங்களின் சுவைக்கு என்ன காரணம் என நம்மை சிந்திக்க வைப்பார். அவர் இருப்பது எங்கள் குழுவுக்கு மட்டுமல்ல , எல்லாப் பாடக் குழுக்களுக்கும் கல கலவென இருக்கும்.  

நடராஜன் ஸாருடன் இணைந்து  சென்னையின் 

இன்னொரு விரிவுரையாளரான குமார் ஸார் என்பவரும் தான் எனது அடுத்தடுத்த பணிகளுக்குத் தடம் அமைத்தவர்கள் .குமார் சார் தான் இந்த கோத்தகிரி மாவட்ட ஆசிரியர்  பயிற்சி நிறுவன பணிமனையின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். அதோடு மட்டுமல்ல தொடர்ந்து வந்த பல பணிமனைகளுக்கு அவரே ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார். 

அந்த இரண்டு நாளில் நான் விரிவுரையாளர்களுக்கு  உதவி செய்யவே அழைக்கப்பட்டிருந்தேன். உதவி என்றால் , அவர்கள் கூறுவதைக் குறிப்பெடுப்பது மட்டும் தான்.  நடராஜன் சாருடைய பணிக்கு குறிப்பெடுத்ததுடன் குமார் சாருக்கு ஒதுக்கப்பட்டிருந்த குடிமையியல் பாடப்பகுதிக்கும் சேர்த்து பணியாற்றினேன்.   ஒருங்கிணைப்பாளர் பணியே அவருக்கு வெகுவாக இருந்தது. அதனால் , நான் ஈடுபாட்டுடன் ஆர்வமாக கவனமாக செய்த பணியை மனதில் கொண்டு 

 எனக்கு குடிமையியல் பகுதி முழுமைக்கும் பொறுப்பைத் தர முடிவு செய்து நடராஜன் சாரும் குமார்  சாரும் இணைந்து முடிவு செய்து 2005 ஆம் ஆண்டு வெளிவந்த 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாட நூலின் குடிமையியல் பகுதியின் அனைத்துப் பாடங்களுக்குமான  பயிற்சிக் கட்டகத் தயாரிப்புப் பணியை என்னிடம் ஒப்படைத்தனர் . உற்சாகமாகிப் போய் இன்னும் கூடுதலாகப் பணியில் இறங்கினேன். 

உணவு உண்ணும் நேரங்களில் மற்ற குழுக்களைச் சார்ந்த அனைவரும் சந்தித்துக் கொள்ளுவோம். மற்ற நேரங்களில் தனித் தனி வகுப்பறைகளில் பாடக் குழுக்கள் தனித்தனியாக அமர்ந்து பணி செய்வோம் .

அப்போதெல்லாம் இன்று உள்ள கட்டாய விதிமுறைகள் , ஆதிக்க மனப்போக்கு இருந்ததை நான்  பார்த்ததில்லை. ஆர்வமான குழு மனப்பான்மையில் ஒரு ஒழுங்கு இருந்தது. மாவட்ட பயிற்சி நிறுவன முதல்வர்கள் அவ்வப்போது நட்புறவாக வந்து பணிகள் குறித்து விசாரிப்பார்கள். அதில் கூட ஒரு விதமான அன்பும் அக்கறையும் இருக்கும். உணவு தயாரிப்பு கூட , ஆசிரியப் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கு விடுதியில் தயாரிக்கும் உணவு எங்களுக்கும் சேர்த்து தயாரிக்கப்படும். மாணவர்களே அன்பு மிகுதியுடன் தலைவாழை இலையில் பரிமாறுவது நடக்கும். குடும்பமாகவே பணி மனைகள் இயங்கும். ஆனால் 10 வருடங்களில் கல்வித் துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் இந்த குடும்பஉறவு முறைப் பணிமனைகளை எல்லாம் அடித்து நொறுக்கி இயந்தர கதியில் பெரிய பெரிய விடுதிகளில் தங்க வைக்க , உணவு ஏற்பாடு என எல்லாமே மாறிப் போனதில் நிறைய போலிமனிதர்களையும் அடையாளம் காட்டும் , நிறைய பேருக்கு அனுபவம் உண்டு. 

அந்த கோத்தகிரி பணிமனை எனது ஆசிரியர் பணியில் , ஆசிரியர் பணி என்பது கற்பித்தல் மட்டுமல்ல முன்னத்தி ஏர்களிடம் பெறும் அனுபவங்களும் இணைந்தது. அதற்கும் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மனதில் பதிய வைத்தது. அப்போது கிருஷ்ணமூர்த்தி என்ற புதுக்கோட்டையைச் சார்ந்த விரிவுரையாளர் பாடிய ஒரு விரல் ஆடிய தே என்ற பாடல் இன்றும் எனது வகுப்பறையில் அவ்வப்போது மகிழ்ச்சியுடன் ஒலிக்கும் . தனுஷ்கோடி என்ற பெயர் கொண்ட தமிழ் விரிவுரையாளர் , புவியியல் பாட விரிவுரையாளரான மீனாட்சி மேடம் என்று பலரும் என்னுடன் நட்பு பாராட்டுபவர்களாக இருந்தது இன்னும் பசுமரத்தாணி நினைவு .

வீட்டு வேலை கொடுத்து அனுப்பினர் . குடிமையியல் பாடப்பகுதியின் தொடர்புடைய நூல்களை காஞ்சிக் கோவில் நூலகத்திலும் , வேறு சில வரலாற்று மாணவர்களிடமும்  புத்தகங்கள் பெற்று தரவுகள் எடுத்து இரண்டாம் கட்ட 3 நாள் பணிமனையான தேனி மாவட்ட உத்தமபாளையம் பணிமனைக்குச் செல்ல ஆயத்தமானேன். மே மாத விடுமுறையில் பெரும்பாலும் இந்த பயிற்சிக் கையேட்டு பணிக்காகவே எனது நேரத்தை செலவிட்டேன்.

இந்த இரண்டு பணிமனைகளிலும் நடந்த பணி பயிற்சிக் கையேடு  தயாரிப்புக்கு ஏதுவாக எல்லா நிலைகளிலும் முடிவுக்கு வர நிறைவான மகிழ்வுடன் விடை பெற்றேன். கையேட்டின் முன்புறம் தயாரிப்புக் குழுவில் எனது பெயரும் பள்ளி முகவரியுடன் இடம் பெற வேண்டும் என நடராஜன் ஸார் எழுதி வாங்கிக் கொண்டார். 

அடுத்து சந்திப்போம் எனக் கூறி வழி அனுப்பினர் , அப்போதே அவர்கள் அனைவரது மனதிலும் இடம் பெற்று விட்டேன். ஜூன் மாதம் இப்பயிற்சிக் கையேட்டினைக் குறித்த முதன்மைக் கருத்தாளர் பயிற்சிக்கு சேலம் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனமான உத்தம சோழபுரத்திற்கு அழைக்கப்பட்டேன். அங்கு கண்ட நிறுவன முதல்வர் உட்பட விரிவுரையாளர்களுடன் தொடர்பும் அனுபவங்களும் விரிந்தன. 

முதன்மைக் கருத்தாளர் பயிற்சியாளராக அன்று ஒரு ஆசிரியராகக்  கலந்து கொண்டது அரிது தான். ஏனெனில் அதற்கு BRT என அழைக்கப்படும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களும் , இந்த பாடநூல் பயிற்சி கையேட்டுப் பணியில் இடம்பெறாத டயட் களின் பாட சம்பந்தப்பட்ட விரிவுரையாளர்களுமே இடம் பெற்றனர். 

இந்தப் பயணத்தின் ஆரம்பம் முதல் நான் கண்ட விரிவுரையாளர்களில் பலரும் திறன் வாய்ந்த நல் மனிதர்கள். அவர்களில் பலர் பயிற்சி நிறுவனங்களுக்கு முதல்வராகவும் , சிலர் SCERT இல்  விரிவுரையாளர்களாகவும் அதனினும் உயர்ந்த இடங்களிலும் இன்று காண்கிறேன். பலர் பணி ஓய்வு பெற்றவராகவும் பார்க்கிறேன். 

அடுத்தடுத்து பேசுவோம் 

No comments:

Post a Comment