Monday, 20 July 2020

தேசியக் கல்விக் கொள்கை - 2

நான் ஏன் NEP ஐ வேண்டாம் என்கிறேன் ...

பாகம் 2

தேசியக் கல்விக் கொள்கை 2019

ii) அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு

தற்போதைய இந்தியாவில் 5 கோடிக் குழந்தைகளுக்கும்  மேல் அடிப்படை எழுத்தறிவு , எண்ணறிவு , வாசிப்புத் திறன்களைப் பெற்றிருக்கவில்லை என்ற குற்றச்சாட்டை இக்கல்விக் கொள்கை முன்வைக்கிறது .

எனில் அனைவருக்கும் கல்வி இயக்கம் ( SSA) என்ற ஒரு திட்டம் கடந்த 18 ஆண்டுகளாக இந்தியாவில் செயல்பட்டு வருகிறதே , நாடு  முழுவதும் வருடம் தோறும்  பல்லாயிரம் கோடிகள் நிதி ஒதுக்கீடு செய்து செய்யும் அதன் செயல் திட்டங்களுக்கு என்ன பொருள் ?

இந்த அனைவகுக்கும் கல்வி இயக்கத்தின் அடிப்படை வேலையே , அடிப்படைத் திறன்களை மாணவரிடையே மதிப்பீடு செய்ய வருடா வருடம் 3 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தி வரும் அடைவுச் சோதனை ,மதிப்பீடு  போன்றன எனில் , இது குறித்து நாம் எவ்வகையான புரிதலை ஏற்படுத்திக் கொள்வது ?

அனைத்துக் குழந்தைகளும் தரமான கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பை அடைவதற்குத் தடையே... மாணவர்கள் இந்த அடிப்படை எழுத்தறிவு , எண்ணறிவு , வாசித்தல் திறன் போன்றவற்றைப் பெறாத நெருக்கடி எனக் குறிப்பிட்டு இருக்கும் இடம் இந்தக் கல்விக் கொள்கையின் முரண்பாடாக இருக்கிறதே.

தரமான கல்வியை ஏன் இவ்வளவு வருடம் வழங்க அரசு முற்படவில்லை ? அதற்காக நியமிக்கப்பட்ட அலுவலர்கள் , அதிகாரிகள் ,ஆசிரியப் பயிற்றுநர்கள் இவர்கள் அனைவரும் இப்பிரச்சனை குறித்து என்ன விளக்கம் வைத்துள்ளனர் .. என்று நாம் சிந்திக்க வேண்டும் .

இதே நிலை தொடர்ந்தால் அடுத்த சில ஆண்டுகளில் 10 கோடிக்கும் மேலான மாணவர்கள் எழுத்தறிவின்மை இழந்து விடுவர் என்று இக் கொள்கையில் குறிப்பிடுவது ..எவ்வளவு அபத்தமானதாக இருக்கிறது பாருங்கள். அப்போ .... கல்விக்கான திட்டங்கள் இப்படியே தான் வெற்று முயற்சிகளா ? இவ்வளவு வருடங்களின் கானல் நீர் செயல்பாடுகள் தான் இனி வரும் காலங்களிலும் இருக்கும் என்பதை சொல்லாமல் சொல்கின்றன இவ்வரிகள் .

கற்றல் நெருக்கடிக்கான முக்கியக் காரணம் முதல் வகுப்பின் முதல் சில வாரங்களிலேயே பின்தங்கி விடுதல் என்கின்றது இக்கொள்கை , தமிழ் நாட்டைப் பொறுத்தவரை இது 80% ஏற்புடையது அல்ல , பெற்றோரும் சரி , ஆசிரியர்களும் சரி இவ்விஷயத்தில்  விழிப்புடையவர்களாகவே இருக்கின்றனர்.

அதோடு அப்படியே இவ்வாறான பின்தங்கும் நிலை ஏற்பட்டால், நமது அரசுப் பள்ளிகளில்  #வகுப்புக்கு_ஒரு_ஆசிரியர்
நியமிக்காத அரசே அந்தப் பின் தங்குவதற்கு காரணம் என்பதை நாம்  இங்கு பதிவு செய்ய வேண்டும்.

வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகப் பொருளாதாரப் பின்னணி கொண்ட குழந்தைகள் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள இவ்வரைவின் வரிகள் மிக ஆழமானவை. ஆய்வு முடிவுகளும் , காரணங்களும் அறிந்தே இவ்வளவு வருடங்கள் அரசு அமைதி காப்பது ஏனோ ?

இவற்றை எல்லாம் தேசியக் கல்விக் கொள்கை கொண்டு வந்து மாற்ற வேண்டும் என்பதில்லை , ஒரு நல்லரசு மக்களின் நலன் விரும்பும் அரசு , மாநிலங்களின் ஒவ்வொரு வருட பணிகளில்  கல்விக் கொள்கைகளைத் தயாரிக்கும் போது இவற்றை சரிப்படுத்த உத்தரவு பிறப்பித்து இருந்தால் மிகவும் வரவேற்கத் தக்கது.

ஆசிரியர் நிரவல் குறித்தும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது , இதுவும் இந்த அடிப்படை எழுத்தறிவு & எண்ணறிவு பெறாத நெருக்கடிக்குக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளது வரவேற்கத்தக்கது , ஆகவே ஆசிரியர் நிரவலைத் தவிர்த்து விடுதலே இதற்கு சிறந்த தீர்வுக்கான வழியாக நாம் முன் மொழியலாம்.

கற்றல் நெருக்கடிக்கு மற்றொரு காரணியாக குழந்தைகள் ஊட்டச்சத்து பெறாமல் மதிய உணவு மட்டும் அவர்களுக்குக் கிடைப்பதாகக் கூறுவது முற்றிலும் உண்மை , அது குறித்து அரசே காலை உணவையும் வழங்குவதே எதிர்பார்க்கப்படும் செயல் திட்டம் , இவை நம் சிந்தனையாகக் கொள்ளலாம்.

கல்விக் கொள்கையில், இந்த நெருக்கடியை சரி செய்ய உடனடியாகச் செய்ய என்ன கூறுகின்றனர் என்பதே நமக்கு விவாதப் பொருள்.

நம்மை இடியாகத் தாக்குகிறது முதல் யோசனையே , ஆமாம் ... பண்டைய குருகுலப்படி , சக மாணவர் கற்பித்தல் , கற்பித்தலில் ஆர்வமுள்ள உள்ளுரில் உள்ள படித்தவர்கள் பள்ளி நேரத்திலோ பள்ளி முடிந்தோ சிறப்பு வகுப்பு எடுக்கும் முடிவு . அதிலும் பெண்களை அதிகமாக ஈடுபடுத்துவதாம்.

குறைதீர் கற்பித்தலும் இவர்களைப் பயன்படுத்தவும் , இந்தத் தன்னார்வலர் கொண்ட அமைப்பை முனைப்பு இயக்கமாக செயல்படவும் , இவர்களை சேவை செய்யவும் அழைக்க அரசு முடிவு செய்வதும் ,இவர்களுக்கு ஆதரவு தருவது குறித்தும் பேசுகிறது.

எனக்கு ஒன்று புரியவில்லை , கற்பித்தலுக்கு  ஆசிரியர்களை பணியமர்த்தாமல் தன்னார்வலரை ஏன் வரவேற்கின்றனர் ? அவர்கள் எங்கிருந்து வருவார்கள் ? சம்பளம் பெறாது சேவை செய்ய எத்தனை நாளைக்கு வருவார்கள் ? ஏன் வர வேண்டும் ? அரசின் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் ஆசிரியர்களை ஏன் நியமிக்கக் கூடாது ? பிரத்யேக கற்பித்தல் திறன் பெறாத தன்னார்வலர்களை எப்படிப் பள்ளிகளில் குறை தீர் கற்பித்தல் பணிக்கு அமர்த்த முடியும் ?

சுகாதாரம் , உணவு வழங்குதலில் சமூக சேவையாளர்களைப் பள்ளிக் கல்வியில் ஈடுபடுத்தி வறுமையை நீக்க நடவடிக்கை எடுக்கப் போவதாகக் குறிப்பிட்டுள்ளது மிக அபாயகரமானது. அப்போ கல்வியை சேவையாகத் தான் செய்யுமா ? கல்விக்கு வரி வசூலிக்கப்படாதா ? நாட்டின் மொத்த வருமானத்தில் கல்விக்காக ஒதுக்கப்பட வேண்டிய  நிதி வருங்காலத்தில் அரசால் ஒதுக்கப்படாதா ???இப்படி பல கேள்விகள் நம்மிடையே உருவாகின்றன.

அதோடு ,4 , 5 ஆம் வகுப்புகளுக்கே கூடுதல் நேரம் எழுதுவதற்கு ஒதுக்கப் போவதாகக் குறிப்பிடுவது .... அய்யோ குழந்தைகள் என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆண்டு முழுவதும் மொழி வாரம் , கணித வாரம் , மொழி விழா , கணித விழா , மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பள்ளிக்கூடங்களை நடத்துதல் ....
1 - 5 வகுப்புகளுக்கே மொழி , கணிதத்திற்கு பயிற்சி நூல் ..

இப்படியான சில தீர்வுகள் ....
ஏன் மொழிக்கு இவ்வளவு அழுத்தம் என்று தெரியவில்லை .

மொழி & கணித வள ஆதாரங்கள் தேசிய அளவில் வலைத்தளம் திக்க்ஷா (DIKSHA) ....இல் வள ஆதாரங்கள் (Resources) சேகரிப்பது குறித்தும் சொல்கிறது ,இது அரசு உடன்படிக்கை எடுத்துக் கொண்ட நிறுவனமோ ? ஏனெனில் கடந்த  சில ஆண்டுகளாக தமிழகத்திலும் கல்வித் துறை இந்த வலைத் தளத்தைப்  பரிந்துரைத்து வருகிறது.

அடுத்து ... தேசிய போதகர்கள் திட்டம் , அதில் சேவை , மாநில அரசு சான்று என எல்லாவற்றையும் நாம் எதிர்க்கும் வகையிலேயே தருகிறது.

திரும்பத் திரும்ப , பள்ளி நேரத்திற்குப் பிறகும் , கோடை  விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் , அதுவும் தன்னார்வலர்கள்  கொண்டு எடுப்பது , ஓய்வு பெற்ற ஆசிரியர் , இராணுவ அதிகாரி , இவர்களுக்கு NTP & RIAP திட்டங்களில் இணைத்து , உள்ளுர் சமூகம் சம்பளம் வழங்குவது என ஒரு பயங்கரத் திட்டம்.

இங்கு போதகர் தான் பிரதானம் ,

மேலும் , மாணவர் கற்றலில் வலுவான தகவமைப்பு மதிப்பீட்டு முறை உருவாக்கம் பற்றி குறிப்பிடுகிறது. இது 2023 க்குள் கணினி ,கைக்கணினி மூலம் மேல்நிலைப் பள்ளிக்கு அறிமுகம் செய்து பிறகு ஒவ்வொரு குழந்தைக்கும் விரிவாக்கும் என்று கூறுகிறது .

இது ஆசிரியருக்கே தொடர்ந்து அழுத்தம் தரும் செயல் .

முதல் வகுப்பு குழந்தைகளுக்குக் கட்டகம் தயாரிப்பு பற்றி குறிப்பிட்டு , NCERT கலைத்திட்டம் , பாடத்திட்டம் இதுவெல்லாம்  வருவதோடு குழந்தைகளின் பள்ளி வேலைகள் வீட்டுக்குக் கொடுத்து அனுப்பப்பட்டு பெற்றோரை ஈடுபடுத்துவது பற்றி குறிப்பிடுவது முற்றிலும் பொருந்தாத நடைமுறை. அரசுப் பள்ளிக்கு வரும் குழந்தையின் பெற்றோருக்கு , அன்பாக அவர்களிடம் 2 வார்த்தை பேசவே நேரமில்லாம , தங்கள் வாழ்வாதாரம் தேடும் சூழல் .... எங்கே project செய்வார்கள் ?

மாணவர் அதிக மொழிகளைக் கற்றுக் கொள்ளுதல் பற்றி பேசுகிறது .... முதலில் தாய் மொழி வழிக் கல்வி பற்றி பேசுங்கள் , இரு மொழிகளைக் கற்பிக்க ஆசிரியர் நியமனம் பற்றிப் பேசுங்கள் ... இதை விடுத்து பல மொழி பற்றி பேசுவது பயனற்றது.

இந்த 2 ஆம் தலைப்பு முழுக்க சமூக ஆர்வலர் , போதகர் , சேவை குறித்தே பேசப்பட்டுள்ளது  , மருந்துக்குக் கூட .....பாடல் வழிக் கற்பித்தல் , விளையாட்டு முறை கல்வி , விளையாட்டுத் துறை  ,வேறு இயல்பான இயற்கையான கற்றல் கற்பித்தல் பற்றி எதுவும் கருத்துகள் இல்லை. வாழ்வியல் கல்வி குறித்த எந்த சிந்தனையும் இல்லை. நம்மையும் குழந்தைகளையும் கவலை கொள்ளச் செய்யும் அத்யாயம் இது.

(NCERT- National Council of Educational Research and Training,
NTP - National Tutor's Program
RIAP- Remidial Instructional Aides Program)

தொடரும் வலிகள்
உமா

No comments:

Post a Comment