Tuesday, 29 January 2019

குடியரசு தினம்

குடியரசு   ???

ஒவ்வொரு வருடமும் பூரண சுதந்திரம் அடைந்த இந்த நாளை சடங்காகவே பார்த்து வருகிறது இந்தியா , குறிப்பாக தமிழ்நாடு தான் நான் கவனிக்கும்  பகுதி .

ஏதோ ....சுதந்திரப் போராட்டக்காலத்தில் வாழ்ந்த சில உணர்வுள்ள மனிதர்கள் மட்டுமே பொருள் புரிந்து கண்ணில் நீர் கசிய இது போன்ற தேசிய விழா நாட்களில் பள்ளிக்கூட விழாக்களிலோ பொது இடங்களின்  விழாக்களிலோ கலந்து கொள்ளும் சூழல்.

பள்ளிக்கூடங்கள் இயந்தரங்களைத் தயாரிப்பதால் குடியரசு தின வரலாறு குழந்தைகளின் உணர்வை ஒரு போதும் நெருங்கியதில்லை.

தனியார் பள்ளிகளில் வரலாற்றுத் துறை ஆசிரியர்கள் இருப்பது போல் இல்லாமல் இருக்கின்றனர். அங்கு மருத்துவத்திற்கும்  பொறியியலுக்கும் ஈர்க்கும் காந்தங்களே தயாரிக்கப்படுவதால்  வரலாற்றை  தொலைவில் இருந்து கூட பார்க்க விரும்புவதில்லை எவரும் .

அரசுப் பள்ளிகளிலும் கூட வரலாற்றுத் துறை ஆசிரியர்கள் சட்டப்படி நியமிக்கப்பட்டு இருந்தாலும் இந்த வரலாற்றை மாணவர் மனதில் விதைக்கும் முயற்சிகளில் எவருமே ஈடுபடுவதில்லை , கேட்டால் ஆயிரம் காரணம் சொல்கின்றனர் , அவை நியாயமாக இருந்தாலும் தார்மீகக் கடமையைத் தவற விடுவதாகவேக் கருதுகிறேன் .

பள்ளிகளிலும் வரலாறு சொல்லிக் கொடுக்கப்படாமல் வீடுகளிலும் அது பற்றிய புரிதல் இல்லா சூழலில் வளரும் குழந்தைகளிடம் உரிமை , போராட்டம் , சுய சிந்தனை , சமூகப் பிரச்சனை , தங்களது கடமை , அரசியல் சாசனம் , அரசியல் அறிவு , புரிதல் மனப்பான்மை , பொது நலம் , ஆய்வு செய்யும் மனநிலை , தேசப்பற்று , அன்பு இதெல்லாம் எப்படிங்க வரும் ?

பெரியார் , காந்தி , அம்பேத்கார் , நேதாஜி இப்படி யாரப்பத்தி  தெரியும் ?

இவங்கள பத்தி தெரியாம , சுதந்திரப் போராட்டம் முதற்கொண்டு இன்று நடக்கும் ஆணவப் படுகொலைகள் , உரிமைப் போராட்டம் , சாதியப் பிரச்சனைகள் , தொழிலாள் பிரச்சனைகள் , பாலியல் வன்கொடுமைகள்  , தனியார் மயமாக்கி உலக தாராளமயமாக்கல்  பிரச்சனைகள் , தனி மனித வாழ்வின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் என .. இன்னும் பல நூறுப் பிரச்சனைகளை எங்குமே பேசாது தனது 18 வயது வரை வெறும் பாடம் , தேர்வு மட்டுமே  அறிமுகம் செய்து அழுத்தம் கொடுக்கப்படும் வரும் தலைமுறை குழந்தைகள் என்ன ஆவார்கள் ???

சில லட்சம் வகுப்பறைகளில் ஒரு 20 ஆண்டுகள் பல கோடி இயந்தரங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாகப் பள்ளிகள் செயல்படும் போது ...

(சில விதிவிலக்கான வகுப்பறை , ஆசிரியர்கள் உள்ளனர் என்பதும் உண்மை )

வரும் விளைவுகள் அணுக்கரு பிளவை விடக் கொடுமையானவை.  அப்போதைக்கான அழிவாகத் தோன்றினாலும் நூற்றாண்டு கால அழிவுச் சுவடுகளைத் தன்னுள்ளே புதைத்து வைத்திருக்க ,

வரும் காலங்களில் குடியரசு என்ற வரலாறு அழிந்ததோடு குடியரசு என்ற வார்த்தையே கூட சுவடில்லாமல் அழிந்து போகலாம்.

எச்சரிக்கை ...

உமா

No comments:

Post a Comment