தற்போதைய மேல்நிலைக் கல்விப் பாட அமைப்புகள் புதியதாக மாற்றி அமைக்கப் பட்டுள்ளன. இவை உயர் கல்வி வாய்ப்புகளில் சிக்கல்களை விளைவிக்கும் வகையில் உள்ளன .
கோத்தாரிக் கல்விக் குழுவின் பரிந்துரையின் பேரில் நம் தமிழகப் பள்ளிக் கல்வியில்
1977- 1978 கல்வியாண்டு முதல்
10+2 என்ற முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. மேல்நிலைக் கல்வியில் பகுதி 1 மற்றும் 2 இல் மொழிப் பாடங்கள் தரப்பட்டிருக்கும் .இது தவிர பகுதி - 3 இல் சிறப்புப் பாடங்களாகக் கணிதம் , இயற்பியல் , வேதியியல் , உயிரியல் , விலங்கியல் , தாவரவியல் , கணக்குப் பதிவியல் , விவசாயம் ,மனையியல் , பொருளியல் , வணிகவியல் , அரசியல் அறிவியல் , வரலாறு , புவியியல்
இப்படி ஏறத்தாழ 30 பாடங்கள் உருவாக்கப்பட்டன. பகுதி 3 இல்
ஒவ்வொரு பாடப்பிரிவிலும் நான்கு பாடங்களை மாணவர் படிக்க வேண்டும். மொழிப் பாடங்களுடன் சேர்த்து அவர்கள் படிக்க வேண்டியது மொத்தம் 6 பாடங்கள் , 600 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும் .
இதை அடிப்படையாகக் கொண்டே கல்லூரிகளில் உயர்கல்வி வாய்ப்புகளை மாணவர் பெறும் நடைமுறை இருந்து வருகிறது.
தமிழகத்தின் இந்த மேல்நிலைக் கல்வி முறை இந்திய மாநிலங்களிலேயே தனித்தன்மையுடன் திகழ்ந்து வருவதாகவும் வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. ஏனெனில் மாணவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை இந்தப் பாடப் பிரிவுகள் உயர்கல்வியில் வழங்கி வந்தன.
புதிய அரசாணை 166
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தமிழ்நாடு அரசு புதியதாக அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அரசானை 166 - பள்ளிக் கல்வித் துறை 18.09.2019 , இன் படி பகுதி 3 - இல் புதியதாக ஒரு முறையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி ஏற்கனவே ஒவ்வொரு பாடப்பிரிவிலும் ஃபர்ஸ்ட் குரூப், செகன்ட் குரூப் என்ற வகையில் நான்கு பாடங்களைப் படிக்கும் மாணவன் இந்தப் புதிய அரசாணையின் படி மூன்று பாடங்களை மட்டும் படித்தால் போதுமானது. மாணவர் மன அழுத்தத்தைக் குறைக்கும் பொருட்டும் , உயர் கல்வி வேலை வாய்ப்பு இவற்றை அதிகமாக்கும் வகையிலும் இந்தப் புதிய முறை மேம்படுத்தப்பட்டுள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர் விருப்பப் பட்டால் மூன்று பாடங்களைத் தேர்வு செய்து கொள்ளலாம் அல்லது பழைய முறையான நான்கு பாடங்களுக்கான முறையையும் தேர்வு செய்து கொள்ளலாம்
எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அரசாணை நடப்புக் கல்வியாண்டிலிருந்து பின்பற்ற வழிகாட்டப்பட்டுள்ளது. இதன்படி மாணவன் 3 பாடங்களைத் தேர்வு செய்தால் படிக்க வேண்டிய மொத்தப் பாடங்கள் 5 மட்டுமே. இதில் 500 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெறும் . அல்லது மாணவன் 4 பாட முறையைத் தேர்வு செய்தால் படிக்க வேண்டியது 6 பாடங்கள் , மொத்த மதிப்பெண்கள் 600.
உண்மையில் என்ன நடக்கிறது
இந்தக் கல்வி ஆண்டில் கோவிட் - 19 பொது முடக்கத்தால் 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்தாகி விட்டது என்பதை நாம் அறிவோம்.
தேர்ச்சி முடிவுகள் அரசின் வழிகாட்டலால் கிரேடு முறையில் தரப்படும் என்பதை விரைவில் எதிர் பார்க்கலாம். தனியார் பள்ளிகள் + 1 சேர்க்கையை தங்கள் வழியில் ஆரம்பித்து விட்டன. அரசுப் பள்ளிகளில் அரசின் முறையான வழிகாட்டலுக்காக தலைமை ஆசிரியர்கள் காத்துக் கொண்டுள்ளனர். அதே நேரத்தில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்து விபரம் கேட்டு வரும் பெற்றோர்களுக்கு இந்தப் புதிய முறை குறித்த விளக்கங்களை அளித்து வருகின்றனர்.
தலைமை ஆசிரியர்களிடம் பேசும் போது புதிய 5 பாட முறைகளைக் குறித்தே விளக்கி வருவதாகவும் , அதை அடிப்படையாகக் கொண்டு தான் சேர்க்கை நடைபெறும் என்று பரவலாகக் கூறுகின்றனர். அதற்கு நியாயமான காரணங்களையும் முன் வைக்கின்றனர். அருகாமைப் பள்ளிகளில் ஒரு பள்ளியில் 5 பாடங்கள் இருந்து மற்றொரு பள்ளியில் 6 பாடங்கள் இருந்தால் குறைவாகப் படிக்க வேண்டும் என்று மாணவர்கள் 5 பாடமுறை உள்ள பள்ளிக்கே செல்கின்றனர். ஆகவே மாணவர் சேர்க்கைக் குறைவதால் நாங்களும் 5 பாடங்களைக் கொண்ட பாடப் பிரிவையே அறிமுகப்படுத்துகிறோம் என்கின்றனர்.
அதே போல 6 பாடங்களைத் தேர்வு செய்யும் மாணவர்கள் இருந்தாலும் குறைந்த அளவில் மட்டுமே மாணவர் இருந்தால் அந்தப் பாடப் பிரிவை நடத்த பள்ளிகளால் இயலாது , கண் முன்னாலே காலாவதியாகும் பாடப்பிரிவுகளும் பள்ளிகளும் .
குறைவான பாடங்கள் உயர்கல்வி வாய்ப்புகளையும் குறைக்கும்
நான்கு பாடங்களை உள்ளடக்கிய முறையில் உதாரணமாக
கணக்கு , இயற்பியல் ,வேதியியல் , உயிரியல் எனப் படிக்கும் போது ஒரு மாணவனுக்கு பொறியியல் , மருத்துவம் , விவசாயம் , உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் உயர் கல்வியல் வாய்ப்புகள் கிடைக்கும் . ஆனால் தற்போது உயிரியல் பாடத்தை நீக்கி அது மூன்று பாடமாகக் குறையும் போது பொறியியல் துறை மட்டுமே படிக்க இயலும். வேறு மருத்துவம் சார்ந்த உயிரியல் பாடப் பிரிவை சார்ந்த நிறைய வழிகளை அடைத்து ஒரு வழிப் பாதையாக மாற்றும் போது அங்கும் மாணவன் தன் வாய்ப்புகளை இழக்கிறான் .
அதே போல இயற்பியல் , வேதியல் , உயிரியல் மட்டும் உள்ள பாடப் பிரிவை புதியதாக அறிமுகம் செய்துள்ளது. இதில் கணக்குப் பாடமே இல்லாமல் ஒரு மாணவன் இயற்பியல் , வேதியியல் பாடங்களில் இடம்பெறும் கணக்குகளைத் தீர்ப்பது சவாலான ஒன்று.
நீட் தேர்வு எழுதும் மாணவருக்காகவே இந்தப் பாடப் பிரிவு என்பது போல தோன்றுகிறது. நீட் தேர்வில் சிபிஎஸ்ஸி பாடத்திட்டத்தில் தான் வினாக்கள் இடம்பெறும். அப்படி வினாக்கள் அமையும் போது அதில் இடம் பெறும் இயற்பியல் , வேதியியல் வினாக்களைத் தீர்ப்பது என்பது ,ஒரு அரசுப் பள்ளிப் பாடத்திட்டத்தில் 10ஆம் வகுப்பு வரை மட்டுமே அடிப்படைக் கணக்குகள் படித்த மாணவனுக்கு
இயலாத காரியம் .
அதே போல அறிவியல் பாடப்பிரிவில் (science Group) மட்டுமே கணினி அறிவியலை தற்போதுள்ள பாட முறை தருகிறது . இவர்கள் மட்டுமே கணினி சார் கல்லூரிப் படிப்புக்கு செல்ல முடியும். கலைப்பிரிவு (ஆர்ட்ஸ் குரூப் ) மாணவர்களுக்கு கணினி பாடம் தற்போது இல்லை. எனில் ஆர்ட்ஸ் குரூப் தேர்வு செய்யும் மாணவர்கள் கணினி சார்ந்த உயர் கல்வியைக் கல்லூரிகளில் பெற முடியாது. அதே போல கணிணியும் இயற்பியல் வேதியல் மட்டும் படிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வியில் பொறியியல் , கணினி துறைகள் மட்டுமே வாய்ப்பு உண்டு. கணக்கே இல்லாமல் இவர்கள் மேல்நிலைக் கல்வி முடிப்பர்.
இவ்வாறு பல குழப்பங்களை இப்புதிய அரசாணை விளைவிப்பதோடு உயர்கல்வியில் மாணவர்களுக்கான எல்லா வழிகளையும் அடைப்பதற்கான ஆபத்துகளைத் தருகிறது.
இது மட்டுமா ? இன்னும் விளைவுகள்
நமது மாணவர்களை , கணக்கும் அறிவியலும் என இரண்டும் படிப்பதை நிறுத்தி நீ ஏதாவது ஒன்றை மட்டும் தேர்வு செய் என அரசாணை அவர்களது விருப்பத்தைத் தடை செய்கிறது. கணக்குப் பாடமே இல்லாமல் உயர்கல்விக்கு ஒரு அறிவியல் பாடப் பிரிவைப் பயின்ற மாணவன அனுப்பும் முறை மாணவர்களிடம் தேக்கத்தையும் அச்சத்தையும் தான் உண்டு பண்ணும்.
இரண்டு வகையான முறைகளையும் தானே தருகிறோம் என்று ஒரு பதில் அரசு சொல்லலாம். ஆனால் இதே போலத்தான் தமிழ் வழி , ஆங்கில வழி எனக் கொண்டு வந்து விருப்பம் போல பாட வழிகளைத் தேர்வு செய்யலாம் என்ற நடைமுறை , இன்று தாய் மொழி வழிக் கல்வியை இல்லாமல் செய்து விட்டதை இங்கு பொருத்திப் பார்க்கலாம் .
அதோடு 15 வயது மாணவன் கணக்கை மட்டும் தேர்வு செய்து உயர் கல்வி செல்லும் போது புரிதல் வந்த பிறகு அறிவியலும் படிக்கலாம் என விருப்பப்படும் போது இது உதவாது. பழைய முறையில் +2 படித்து பாலிடெக்னிக் செல்ல விரும்பும் மாணவர் லேட்டரல் என்ட்ரியில் 2 ஆம் வருடம் சேர்வர். புதிய முறையில் இதுவும் கூட தடைபடும் .
மூன்று பாடங்களை மட்டும் தேர்வு செய்யும் மாணவர் இழக்கும் உயர் கல்வி வாய்ப்புகளை வேறு மாநில மாணவர் எட்டிப் பிடிப்பர். இங்கு இந்த முறையில் படிக்கும் மாணவர்கள் வெளி மாநிலக் கல்லூரிகளில் சேர்வதற்குக் கூட வாய்ப்புகள் அற்றுப் போகலாம்.
தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை ஒன்று நீட் கோச்சிங் அல்லது ஜேஈஈ, ஐஐடி என குழந்தைகளை ஒற்றையடிப் பாதைக்கு அழைத்துச் செல்ல திட்டமிடும் வழி இது. கோச்சிங் சென்டர் நடத்துபவர்களுடன் சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர் , பிரின்ஸ் பால் ஒப்பந்தம் செய்து கொண்டு மாணவர்களிடம் பணம் பறிக்கும் கொள்ளைக்கும் இது எதிர்காலத்தில் வழி வகுக்கும்.
மூன்று பாடம் வரும் போது ஆசிரியர் பணி இடங்கள் குறைக்கப்படும். அறிவியல் பிரிவில் தாவரவியல் , விலங்கியல் பிரிவுகளுக்கான ஆசிரியர்களில் யாரேனும் ஒருவர் இருந்தால் போதும் என ஆசிரியர் பணியிடங்கள் குறைக்கப்படும். கணினி பாடப்பிரிவுகள் குறைவதால் கணினி ஆசிரியர்கள்
எண்ணிக்கை குறைப்பதோடு ,நியமனமே எதிர்காலத்தில் இருக்க வாய்ப்புகளில்லை என்ற நிலை உருவாகும். .
இது மறைமுகமாக ஆசிரியர் பணியிடங்களைக் குறைக்கும் நிலைக்கு வழிகோலும் .
இவ்வாறு மக்கள் மத்தியில் குழப்பங்களை விதைப்பதோடு எதிர்கால சமுதாயத்தின் உயர்கல்வியை கேள்விக்குள்ளாக்கும் ஆபத்தை இந்த அரசாணை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. பன்முக வழிகளை அடைக்கும் இந்த அரசாணையை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதே சிறந்தது. எப்போதும் போல 600 மதிப்பெண் பாட முறை தான் மாணவரது உயர் கல்வி , வேலை வாய்ப்புகளுக்கு வழிகாட்டும் .
உமா
No comments:
Post a Comment